PUBLISHED ON : ஜன 04, 2020

''பனிக்காலத்தில் சரும பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமானது,'' என்கிறார் தோல் சிகிச்சை நிபுணர் பவித்ரா.
பனிக்காலத்தில் தோல் பராமரிப்பு குறித்து கூறுங்கள்...
அதிக பனியால், கை, கால்கள் போன்ற இடங்களில் வெள்ளை வெடிப்புகள் வந்துவிடும். உதடுகளிலும் வெடிப்பு ஏற்படும். இதனால் அசவுகரியமான சூழல் உண்டாகும். இதனால் தோல் பாதிக்கப்படும். அடிக்கடி சொறிவதால் பாதிப்பு ஏற்படும்.
சரி...என்னதான் செய்வது?
வெதுவெதுப்பான நீரை அதிகமாக குடிக்கலாம். குளிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ள கூடாது. குளித்த உடன் உடனடியாக முழுவதும் காய வைக்க கூடாது. சற்று ஈரப்பதத்துடன் இருப்பது நல்லது. தோல் காய்ந்து போவதால், பாதிப்பு அதிகரிக்கும்.
குளிக்க சோப் பயன்படுத்தலாமா?
சோப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. சருமம் ஏற்கனவே காய்ந்து போயிருக்கும் போது, சோப் போடுவதால், சருமம் மேலும் காய்ந்து போகும். டாக்டர்கள் பரிந்துரைக்கும் மாய்ச்சுரைசரை பயன்படுத்தினால், பிரச்னை இருக்காது.குளிப்பதற்கு அரைமணி நேரத்துக்கு முன், எண்ணெய் தேய்த்து ஊற விட்டு, அதன் பின் குளித்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், முடி வளர்ச்சி இருக்கும். ஷாம்பூ போடும் போது முடி அதிகளவு காய்ந்து போகும். இதற்காக 'கண்டிஷனர்' போடலாம். முடி மிருதுவாக மாறும்.
பசை சருமம் உள்ளவர்களும், இவ்வாறு செய்ய வேண்டுமா என்ன?
வறண்ட சருமம் மட்டும்தான் பாதிக்கப்படும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள், கவலைப்படத் தேவையில்லை என நினைக்க வேண்டாம். ஈரக்காற்றில் எல்லா சருமமும் வறண்டு போகும். குளித்து முடித்த உடனேயே முகம், கை, கால்களுக்கு 'மாய்ச்சுரைசர்' தடவ வேண்டும். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆகியவற்றை தலை முதல் கால் வரை தடவி மசாஜ் செய்யவும்.
பனி காலத்தில் உடற்பயிற்சி செய்வது நல்லதா?
உடற்பயிற்சி செய்தால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து, முகம் பொலிவாக தோன்றும்.
