PUBLISHED ON : ஜன 17, 2016
வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டு, மூச்சுவிட முடியாமல், வயிற்றை இறுக்கிப் பிடிக்கும் பெல்ட்டையோ, அல்லது இடுப்புப் பகுதி துணியையோ லூசாக்கிவிட்டு இருப்பார்கள் சிலர். அது கூடாது. அப்படிச் செய்யும்போது வயிற்றில் மொத்தமாகத் தங்கியிருக்கும் உணவு, பெல்ட் லூசானதும் தடக்கென்று குடலில் கீழிறங்கி, உள்ளே களேபர மாற்றங்களை ஏற்படுத்துமாம். அதனால் குடல் பாதிக்கப்பட்டு பல பிரச்னைகள் வரும்.
சாப்பிட்ட வேகத்தில் பண்ணக் கூடாத இன்னொன்று குளியல். ஏனென்றால், குளிக்கும்போது தண்ணீரினால், கிடைக்கும் குளிர்ச்சியினாலும், கை, கால் என மசாஜ் போலத் தேய்ப்பதாலும், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகமாகும். இதனால் வயிற்றுப் பகுதிக்கு செல்லும், ரத்தத்தின் அளவு குறைந்து ஜீரணத்தைத் தாமதமாக்கும்.
வாக்கிங் செல்வது மிக நல்லது. ஆனால், சாப்பிட்டவுடன் வாக்கிங் கிளம்புவது நல்லதல்ல. உணவுக்குப் பிறகு குறைந்தது ஒரு மணி நேரம் கழித்தே நடக்க வேண்டும். சாப்பிட்ட வேகத்தில் கடினமான வேலைகளை அரக்கப்பறக்கச் செய்வதும் கூடாது. உணவுக்குப் பிறகு ஓய்வு முக்கியம். சாப்பிட்டவுடன் உறங்க செல்வதும் தவறு. உடனடியாகத் தூங்குவதால், நாம் உண்ட உணவு ஜீரணமாகாமல், அப்படியே தங்கி குடல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும்.
சிகரெட் புகைப்பது தீங்கானது. சாப்பிட்டு முடித்ததும் சிகரெட் பிடிப்பதே, உடல் நலத்துக்குத் தீங்கானதுதான். அதிலும் சாப்பிட்டவுடன் பிடிக்கப்படும் ஒரு சிகரெட் காரணமாக, கேன்சர் வரும் வாய்ப்பு பத்து மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உண்டாம்.
வாழைப்பழம் சாப்பிடுவதும் தவறாம். பழங்களுக்கும் நாம் தினமும் உண்ணும் உணவுக்கும் இருக்கும் குணங்கள் வேறு வேறு. இதனால் இரண்டும் சேர்த்து ஜீரணம் ஆவதற்கு, இன்னும் தாமதமாகும். அதனால், சாப்பிட்டு முடித்து இரண்டு, மூன்று மணி நேரம் கழித்து பழம் சாப்பிடுவதே நல்லது. இவற்றை பின்பற்றினால், ஏற்றுக்கொண்டால் உணவே மருந்தாகும்.
