PUBLISHED ON : ஆக 01, 2021

தாய்ப்பால் தருவது என்பது தலைமுறை தலைமுறையாக நடப்பது தான். இதில் புதிய விஷயம் எதுவும் இல்லை என்று தான் பொதுவாக நினைப்போம். ஆனால், இளம் தாய்மார்கள் அனைவருக்குமே, தாய்ப்பால் தருவதில் பிறரின் உதவி தேவைப்படும் நிலை தான் உள்ளது.இதில் பயிற்சி பெற்ற ஒருவரின் உதவி மற்றும் ஆலோசனைகளை பெற வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. தற்போது இந்த விழிப்புணர்வு பல மடங்கு அதிகரித்து உள்ளது.
கூட்டுக் குடும்பம்கடந்த தலைமுறை பெண்களை போன்று, இந்த தலைமுறை பெண்கள், கூட்டுக் குடும்பத்தில் வளரவில்லை. அதிக நேரம் வீட்டில் இருந்து அக்கா, அத்தை, சித்தி என உறவினர்களின் குழந்தைகளை துாக்கி விளையாடிய அனுபவமும் தற்போது இல்லை.பெரும்பாலும் ஒற்றைப் பெண்ணாக வளர்கிறோம். கல்லுாரி படிப்பு, வேலை என, வாழ்க்கை முறையே முற்றிலும் மாறிவிட்டது. திருமணம், குழந்தை பேறு இயல்பாக நடக்கும் விஷயம் என்று யதார்த்தமாக இருக்கிறோம். தாய்மை அடைந்த பின்பே, இத்தனை சவால்கள் இதில் இருக்கின்றன என்பது தெரிகிறது.
சவால்கள்பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் தருவதே நல்லது என தெரிந்தாலும், குழந்தையை துாக்க தெரியாது; நீண்ட நேரம் அமர்ந்தால் இடுப்பு, கைகள் வலிக்கின்றன; அடிக்கடி பால் கொடுப்பதால் ஓய்வே இல்லை; இரவில் நான்கு மணி நேரம் கூட நிம்மதியாக துாங்க முடிவதில்லை... இப்படி பல சவால்கள் இருப்பதால், குழந்தை பெற்ற பெண்ணின் தாயே, 'என் பெண்ணிற்கு இதெல்லாம் தெரியாது; அவளை சிரமப்படாமல் வளர்த்து இருக்கிறேன்; என் பெண் ஏன் இப்படி நாள் முழுதும் கஷ்டப்பட வேண்டும்; தாய்ப்பாலுக்கு பதில், மாற்று ஏற்பாடு செய்து கொள்ளலாம்...' என, சொல்கின்றனர்.முதல் இரண்டு மாதங்கள் இந்த சவால்கள் இருக்கவே செய்யும். அதன்பின் குழந்தையும் வளர்ந்து விடும்; அதன் தேவையும் சற்று குறைந்து விடும்.
சாப்பாடுகுழந்தை பெற்ற பெண், என்னவெல்லாம் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும் என, பட்டியலே தருவர்; அதில் ஒன்று பூண்டு. ஒரு நாளைக்கு 10 - 15 பல் பூண்டை பாலில் போட்டு, நல்லெண்ணெயில் வதக்கி சாப்பிடச் சொல்வர்.இதனால், தாய்க்கு வாயு அதிகம் வெளியேறும்; வயிறு உப்புசத்தால் குழந்தை முறுக்கி முறுக்கி அழும். பூண்டு சாப்பிட்ட பாதிப்பு என்பது தெரியாமல், பால் போதவில்லை அழுகிறது என, புட்டிப்பால் கொடுக்கச் சொல்வர்.பால் கொடுத்ததும் குழந்தையை படுக்க வைத்தால், சிறிது நேரத்தில் அழத் துவங்கும். குழந்தையை கையில் துாக்கி வைத்துக் கொண்டால், குழந்தை அழாமல் அமைதியாக இருக்கும். கர்ப்பப்பையின் உள்ளே இருக்கும் கதகதப்பு, முதல் இரண்டு மாதங்களுக்கு குழந்தைக்கு அவசியம். தாய்ப்பால் கொடுக்கும் போது கிடைக்கும் அந்த உணர்வு, தனியே படுக்க வைத்தால் போய்விடும்.எத்தனை நேரம் இப்படியே வைத்திருப்பது என நினைத்து, பால் கொடுத்ததும் படுக்க வைத்து விடுகின்றனர். அறையின் வெப்பமும், உடல் வெப்பநிலையை போன்று கதகதப்பாக இருக்க வேண்டியது அவசியம்.குழந்தையை கையாளுவது, தாய்க்கு உடற்பயிற்சியை கற்றுத் தருவதோடு, இளம் பெண்களைச் சேர்த்து, 'வாட்ஸ் - ஆப்' குரூப் உருவாக்கி உள்ளோம். தங்களுக்குள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போது இதமாகவும், ஆறுதலாகவும் உள்ளது.மன அழுத்தம் ஏற்படுவது இளம் தாய்மார்களிடையே சகஜம்; அதற்கும் ஆலோசனை வழங்குகிறோம்.
டாக்டர் ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணன்,தாய்ப்பால் சிறப்பு மருத்துவ ஆலோசகர்,போர்டிஸ் மலர் மருத்துவமனை, சென்னை.98408 52678jai_sriphysio@yahoo.co.in
