PUBLISHED ON : ஜூன் 14, 2015

முன்பெல்லாம் காலையில் பேப்பரை பிரித்தால், காண முடியாத ஒரு செய்தியை, இன்று சர்வசாதாரணமாக தினமும் காண முடிகிறது. அது...குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை. குறிப்பாக, எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் வளரும் குழந்தைகள், காமக்கொடூரன்களின் வெறிக்கு ஆளாகின்றன.
இது போன்ற கொடுமைகள் ஒருபுறமிருக்க, குழந்தைகளின் சொந்த வீட்டிலேயே வேறு வடிவில் ஆபத்துக்கள் காத்திருக்கின்றன. இதனால் கடந்த காலங்களை காட்டிலும், தற்போது குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டிய அவசியமும், தேவையும் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது.
தாய்மார்களே கொஞ்சம் கவனியுங்க!
* தீப்பெட்டி, ஊக்கு, ஊசி, சிறு நாணயங்கள், பல் குத்தும் குச்சி, பாதி தீர்ந்து போன கிரேயான் பென்சில்கள், பிளேடு, கத்தரிக்கோல் உட்பட ஆசிட் மற்றும் இதர மருந்து பொருட்களை, குழந்தைகளின் கைக்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும்.
* சில வீடுகளில் பெரிய டேபிள் போட்டு, அதன் மீது அலங்கார துணியை விரித்து, டிவியை வைத்திருப்பர். குழந்தைகள் விளையாட்டாக அந்த துணியை பிடித்து இழுத்தால், ஒருகட்டத்தில் டிவி நழுவி, குழந்தையின் மீது விழ நேரிடலாம்.
* வீட்டில் பயன்படுத்தும் டேபிள் பேனின் சுழற்சி, குழந்தையின் ஆவலை தூண்டும். பயமறியா இளங்கன்றுகள் விசிறிகளுக்கு இடையே கையை நுழைக்க நேரிடும்.
* வாஷிங் மிஷின் இயந்திரத்தை எந்நேரத்திலும் திறந்து வைக்கக்கூடாது. எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும் இயல்பு கொண்ட குழந்தை, உள்ளே இறங்கிக் கதவை மூடிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.
* குளிர்பதனப் பெட்டியின் பிளாஸ்டிக் ஸ்டாண்டு கொஞ்சம் பலவீனம் அடைந்து லேசாக ஆடினால் கூட, உடனே மாற்றி விடுங்கள். குளிர்பதனப் பெட்டியைக் குழந்தை திறக்க முயற்சிக்கும்போது, அது குழந்தையின் மீதே விழக்கூடும்.
* குழந்தைகள் தூங்கும்போதோ அல்லது வீட்டில் இல்லாதபோதோ மின்சார சாதனங்கள் பழுது பார்ப்பது, ஆசிட் ஊற்றிக் கழிப்பறையைக் கழுவுவது, வெள்ளையடிப்பது போன்ற பணிகளைச் செய்வது நல்லது.
* சுவரில் மாட்டும் அலங்கார பொருட்கள் மற்றும் கடிகாரங்களை குழந்தைகளின் கைக்கு எட்டாத உயரத்தில், உறுதியான ஆணி அடித்து மாட்டி விடுங்கள்.
* பால்கனியில் இருந்து வேடிக்கை பார்ப்பதில், குழந்தைகளுக்கு அலாதி விருப்பம். எனவே, பால்கனி தடுப்பு சுவர்கள் மற்றும் ஜன்னல்கள் மீதும் கவனம் தேவை.
* தரைத்தள தண்ணீர்த் தொட்டிகளை எப்போதும் மூடியே வைத்திருக்க வேண்டும். அதன் மூடி மிகவும் உறுதியாகவும், குழந்தைகள் தூக்க முடியாத அளவுக்கு கனமானதாகவும் இருப்பது மிகவும் நல்லது.
