PUBLISHED ON : ஆக 31, 2014

இன்றைய உலகில், கம்ப்யூட்டரின் பயன்பாடு அதிகம். கம்ப்யூட்டர் இல்லாத அலுவலகம் மட்டுமல்ல; வீடும் இல்லை. அதனால், ஒவ்வொருவரும் கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அது நல்லதா; கெட்டதா என்பது குறித்து, அமெரிக்க விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு ஆய்வு செய்துள்ளனர். அதன்மூலம், அவர்கள் கண்டுபிடித்த விஷயம், தூக்கம் தொலைகிறது என்பது தான்.
அதாவது, கம்ப்யூட்டர், லேப்-டாப், ஐபாட் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பவர்களுக்கு, நாளடைவில், தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படு வதாக தெரிய வந்துள்ளது. கம்ப்யூட்டர் திரையில்இருந்து வெளிப்படும், அதிக சக்தி வாய்ந்த ஒளிக்கற்றைகள், மனித மூளையின் வழக்கமான செயல்பாடுகளை பாதிப்பதும் தெரியவந்துள்ளது.
மனித மூளை, காலை சூரிய வெளிச்சம் வந்தவுடன் இயங்க ஆரம்பித்து, இரவு சூரிய ஒளி மங்கியவுடன் செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளும். இதை, மெலட்டோனின் என்ற ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது. இது, அறிவியல் விந்தையாக கருதப்படுகிறது. கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்களிலிருந்து வெளிப்படும், நீல நிற வெளிச்சம், மெலட்டோனின் ஹார்மோன் செயல்பாட்டை பாதித்து, தூக்கத்தை கெடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மனிதனின் கண்கள், நீல நிறத்தை, பகல் பொழுதாக எடுத்துக் கொள்ளும் தகவமைப்பை பெற்றுள்ளது என்றும், அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து கம்ப்யூட்டர் பார்க்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சத்தை கொண்டு மெலட்டோனின் ஹார்மோன், இரவில் தூக்கம் வருவதை தவிர்த்து, விழிப்புடன் இருக்க, மூளையை தூண்டும். அப்படியென்றால், 'எங்களுக்கு தூக்கமே வராதா' என்று கேட்பவர்களுக்கு, 'இரவில் நிம்மதியாக தூங்க, நல்ல புத்தகங்களை படிப்பது ஒன்றே சிறந்த வழி' என்கின்றனர் விஞ்ஞானிகள்.
ஆனால், நம்மில் பலர் இதை விரும்புவதில்லை; மதுவை மட்டுமே உறக்கம், உற்சாகம் தரும் மருந்தாக கருதுகின்றனர்.

