PUBLISHED ON : பிப் 07, 2016

முள்ளங்கியை பயன்படுத்துவோர், அதன் இலைகளை தூக்கி எறிந்து விடுகின்றனர். முள்ளங்கி மட்டுமல்லாமல், அதன் இலை, தண்டுகள், விதை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டவை. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் சத்துக்களும் இதில் அதிகம் உள்ளன. இதன் கிழங்கு பகுதியில் இருப்பதை விட, ஆறு மடங்கு வைட்டமின் இ இதன் கீரைகளில் இருக்கிறது.
100 கிராம் கீரையில் சுமார், 28 கலோரிகள் கிடைக்கிறது. இதில், 90 சதவீதம் மாவுச் சத்தும், 0.7 சதவீதம் நார்ச்சத்தும் உள்ளன. புரோட்டீன், சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்புச் சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன. முள்ளங்கிக் கீரையை சமைக்காமல், மெல்லிய துண்டுகளாக்கி பச்சையாக, சாலட் போலவும் சாப்பிடலாம்.முள்ளங்கி கிழங்கை போன்றே, அதன் கீரையும் இரைப்பை கோளாறுகள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூலக்கடுப்பு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களையும் குணப்படுத்துகின்றன. நீரிழிவு நோய்க்கும், இது சிறந்த மருந்தாக உள்ளது. மலச்சிக்கலைக் குணப்படுத்தும் ஆற்றல், இந்தக் கீரைக்கு உண்டு.
முள்ளங்கிக் கீரையை அடிக்கடி, உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும். வைட்டமின் பற்றாக்குறைகளும் நீங்கும். முள்ளங்கி கீரையின் சாற்றை, 5 அல்லது, 6 டீஸ்பூன் அளவு எடுத்து, 3 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும். சிறுநீர்ப்பை வீக்கம் இருந்தாலும் குணமாகும். சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள் கீரை சாப்பிட விரும்பினால், முள்ளங்கிக் கீரையை மட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சிறுநீர் சரியாக பிரியாமல் இருப்பவர்கள், ஒரு ஸ்பூன் பார்லியை முள்ளங்கிக் கீரையுடன் சேர்த்து, வேகவைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு நீங்கி, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
சிறுநீர் கல்லடைப்பு, கரப்பான் என்ற தோல் வியாதிகளையும் குணமாக்கும். ஒரு கைப்பிடி அளவு முள்ளங்கிக் கீரையில், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வேக வைத்து, தொடர்ந்து மூன்று நாட்கள் காலை, மாலை உண்டு வந்தால், நீர் அடைப்பு தொல்லை தீரும். தொடர்ந்து மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், முள்ளங்கிக் கீரையின் சாற்றை, 1 ஸ்பூன் எடுத்து, 3 வேளைகளும் சாப்பிட்டு வந்தால், நல்ல முன்னேற்றம் தெரியும்.
யாருக்கு கூடாது? வாத நோய்க்காரர்கள், முள்ளங்கிக் கீரையைச் சாப்பிடக் கூடாது. ஆனால், முள்ளங்கிக் கிழங்கை பகலில் மட்டும் சாப்பிடலாம். சளி தொல்லை உடையவர்கள், ஆஸ்துமா நோயாளிகள் அதிகமாக சாப்பிடவேண்டாம். வாயு தொல்லை உள்ளவர்கள் பூண்டு சேர்க்காமல், சமைக்கப்பட்ட முள்ளங்கி கீரையோ, சமைக்காமல் சாலட் போன்று உண்ணுவதையோ தவிர்த்து கொள்ள வேண்டும்.
பொதுவாகவே எந்தக் கீரைகளும் இரவில் சாப்பிடக்
கூடாது என்றாலும், முள்ளங்கிக் கீரையை கண்டிப்பாக இரவில் சாப்பிடக்கூடாது. முள்ளங்கியும் அதுபோலவே, இரவில் சாப்பிட்டால் தீங்குதான் விளையும். சைனஸ், ஆஸ்துமா நோயாளிகள் மழைக் காலங்களில் சாப்பிடக் கூடாது.

