PUBLISHED ON : பிப் 07, 2016
நம் முன்னோர், செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ, செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும்.
செம்புப் பாத்திரத்தில், 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை. கிணற்றில் கிடைக்கின்ற தண்ணீர், செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல்
வாட்டர் மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம்.
செம்பு குடம் இல்லை என்றாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள் போட்டு வைத்தாலும் தண்ணீர் தரமானதாக மாறி விடும். மூன்று நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தால், பாசி பிடித்த மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமாக கழுவி விட்டு, மீண்டும் குடத்துக்குள் போட்டு வைக்கலாம்.
இந்திய பண்பாட்டின் படி, தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரியான அளவில், சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது.
அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும். அறிவியலின் பார்வையில், தாமிரம் என்பது உடலுக்கு தேவையானது. இது தவிர, தண்ணீர் மக்கி போகாமல் இருக்க, தாமிரம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக செயல்படும். அதனால் தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர், நாள் கணக்கில் நற்பதத்துடன் விளங்கும்.

