PUBLISHED ON : ஆக 02, 2020

''கொரோனா இறப்புக்களை ஆயுர்வேத சிகிச்சையால் முற்றிலும் தடுக்க முடியும்; செலவும் மிகவும் குறைவு தான்,'' என்கிறார் சென்னையை சேர்ந்த, பிரபல ஆயுர்வேத மருத்துவர் கிரிஜா.சென்னை அடையாறில், சஞ்சீவினி ஆயுர்வேதா மற்றும் யோகா சிகிச்சை மையத்தை நடத்தி வரும் அவர், நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
கொரோனா பாதிப்பிற்கு, 'ஆண்டிபயாடிக்ஸ்' இல்லாமல், ஆயுர்வேதாவில் எப்படி சிகிச்சை அளிக்கிறீர்கள்?
ஆயுர்வேதத்தில், ஆண்டி பயாடிக்ஸ், ஆண்டி வைரல் மருந்து எல்லாம் கிடையாது. பஞ்ச மகா பூதங்களான, நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவை கெடும்போது, சமூகத்தில் வியாதி உருவாகும். வியாதியை, 'நிஜம், ஆகந்து' என, இரண்டாக பிரிப்பர். உடலிலே உருவாவது நிஜம்; வெளியில் இருந்து உருவாவது ஆகந்து. உடலில், வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்கள், சம நிலையில் இருந்தால் வியாதி வராது.
எனவே, எந்த தோஷம் சமநிலை மாறி, வியாதி வந்தது என, பார்ப்போம். ஒரு தோஷமாக இருந்தால், சுக சாத்தியம் என்போம். இரண்டு, மூன்று தோஷங்களாக இருந்தால், பெரிய வியாதியாக கருதுவோம். அதுபோன்ற, மிக வேகமாக பரவும் பெரிய வியாதிதான் கொரோனா. இந்த தோஷங்கள், உடலில் உள்ள ஏழு விதமான தாதுக்களில், எந்த தாதுவில் சேர்ந்துள்ளது என்று பார்ப்போம். காய்ச்சல், வாந்தி, பேதி, இருமல், மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் உள்ளதா; உடலில் எந்த இடத்தில் பாதிப்பு என்றெல்லாம் பார்ப்போம். பாதிப்புகளை வைத்து, புதிய வியாதிக்கு சிகிச்சை அளிப்போம்.
ஆங்கில மருத்துவத்தில் தான், வைரஸ், பாக்டீரியா என்று பார்க்கின்றனர்; ஆயர்வேதத்தில் அப்படி பார்ப்பதில்லை. எந்த நோயாக இருந்தாலும், சிகிச்சை அளிக்க முடியும். ஆண்டிபயாடிக், ஆன்டி வைரஸ் தேவை இல்லை.
கொரோனாவால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அப்போது, ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படுகிறது. ஆயுர்வேதத்தில், இதுபோன்ற பிரச்னைகளை எவ்வாறு கையாள்வீர்?
மூச்சு திணறல் என்பது ஒரு வியாதி. இதை சுவாசரோகம் என்போம். பல விதமான சுவாச ரோகங்கள் உள்ளன; அதற்குரிய மருந்துகள் வழங்கப்படும்; சுவாசம் பெரிய பிரச்னையாக மாறாது. தற்போது சுவாசம் பெரிய பிரச்னையாக காரணம், ஆங்கில மருத்துவத்தில், மருத்துவம் கிடையாது. வென்டிலேட்டர், ஆக்சிஜன் போன்றவை சிகிச்சை கிடையாது; கருவியை கண்டுபிடித்து பயன்படுத்துகின்றனர். சிகிச்சைக்கு வருவோருக்கு சம்பந்தமில்லா மருந்துகளை கொடுக்கின்றனர். நாளடைவில் உடல்நிலை மோசமடைந்தால், 'வென்டிலேட்டர்' வைக்கின்றனர். ஆரம்பத்திலேயே சிகிச்சை அளித்தால், மோசமாகும் சூழல் ஏற்படாது.
காய்ச்சல், இருமல் வந்தால் கண்டுகொள்ளாமல், கடைசி நேரத்தில் மருத்துவமனைக்கு செல்வதால், இறப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர். இதுபோன்று வருவோருக்கு, ஆயுர்வேதத்தில் சிகிச்சை அளிக்க முடியுமா?
எந்த நிலையாக இருந்தாலும், வியாதிக்குரிய மருந்து கொடுத்தால் காப்பாற்றலாம். அசாத்திய நிலைக்கு சென்றால், யாரும் காப்பாற்ற முடியாது. அசாத்திய நிலை வரும் வரை, யாரும் வீட்டில் இருப்பதில்லை. கொரோனா என்றதும், எங்காவது சிகிச்சைக்கு சென்று விடுகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சில நாட்களுக்கு பிறகே, இறப்பு ஏற்படுகிறது. இறப்பு இவ்வளவு அவசியமில்லாதது; இறப்புக்கு காரணம், ஆங்கில மருத்துவத்தில் தகுந்த மருந்து இல்லாதது தான்.
ஆயுர்வேத முறையில், எத்தனை பேருக்கு கொரோனா சிகிச்சை அளித்துள்ளீர்கள்; எத்தனை பேர் குணமடைந்துள்ளனர்; யாரேனும் இறந்துள்ளனரா?
நுாறு பேருக்கு மேல் சிகிச்சை அளித்துள்ளோம். ஐந்து, ஆறு பேர் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் குணமடைந்து விட்டனர்; உயிரிழப்பு ஏற்படவில்லை.
கொரோனா நோயாளிகள் எப்படி உங்களிடம் வருகின்றனர்?
பரிசோதனையில், 'பாசிட்டிவ்' என்று தெரிந்த பின், ஆயுர்வேத சிகிச்சை பெற விரும்புவோர், எங்களை தொடர்பு கொள்கின்றனர். அவர்களை நேரடியாக வர சொல்வதில்லை.அவர்களிடம் போனில் பேசி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உட்பட வேறு நோய் பாதிப்புகள் உள்ளதா, காய்ச்சல், வாந்தி போன்ற பிரச்னை உள்ளதா என்பதை கேட்டறிந்து, சிகிச்சை அளிக்கிறோம்.
பெரும்பாலும் காய்ச்சல் என்றதும், 'பாரசிட்டமல்' மாத்திரை எடுப்பதாகக் கூறுவர். ஆயுர்வேத மருந்து மட்டும் எடுக்க தயாராக இருந்தால், அவர்களுடன் தொடர்பில் இல்லாதவர்களை வரவைத்து, 'ஆயுஷ்' வழிகாட்டி முறையை பின்பற்றி, மருந்து வழங்குகிறோம்.
தினமும் குறைந்தது ஒரு முறையாவது, மொபைல் போன் வழியாக, அவர்களின் உடல்நிலை குறித்த விபரங்களை கேட்டு, ஆலோசனை வழங்குகிறோம்.
ஆயுர்வேத சிகிச்சையில், கொரோனா நோய் குணமடைய எவ்வளவு நாட்களாகிறது?
சராசரியாக ஏழு நாட்களுக்குள் குணமடைகின்றனர்.
குழந்தைகள், முதியோர் என, எந்த வயதுடையோர் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர்?
குழந்தைகளுக்கு அதிகம் இல்லை; 75 சதவீதம் பேர் மத்திய தர வயதினர்தான் பாதிக்கப்படுகின்றனர். ஒரு சில முதியோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா நோயாளிகள்; கொரோனா பாதிப்பு இல்லாதவர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் முறையில் வேறுபாடு உண்டா?
கொரோனாவை, வாத கபம் இணைகிற நோயாக பார்க்கிறோம். கொரோனாவுக்கு என, சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. காய்ச்சல், வாந்தி மற்றும் பேதிக்கான சிகிச்சை அளித்தால் குணமடைவர்.
ஆபத்தான நிலையில் உள்ளவர்களை காப்பாற்றி உள்ளீர்களா...; என்ன சிகிச்சை அளித்தீர்கள்?
எங்களிடம் சிகிச்சைக்கு வந்த, 100 பேரில், நான்கு பேர் கொஞ்சம் மோசமான நிலையில் இருந்தனர். புற்றுநோய் உள்ளிட்ட, பிற நோய் பாதிப்புகளுடன் வந்தோருக்கும், சிகிச்சை அளித்தோம்; குணமடைந்தனர்.
குறிப்பாக, 92 வயது முதியவருக்கு, இதய நோய் உள்ளிட்ட பல இணை நோய்கள் இருந்தன. வாரத்திற்கு மூன்று முறை, 'டயாலிசிஸ்' செய்பவர். எட்டு நாட்களாக டயாலசிஸ் செய்யப்படவில்லை; அதன் பின், ஒரு மருத்துவமனையில், டயாலிசிஸ் செய்தனர். அவருக்கு, 13 நாட்களுக்கு பின், கொரோனா பரிசோதனையில், 'நெகட்டிவ்' என, முடிவு வந்தது.ஒரே மருந்தை அனைவருக்கும் கொடுப்பதில்லை; ஒவ்வொரு நிலைக்கும் மருந்துகள் மாற்றப்படும்.
கொரோனா பாதிப்புக்கு என்ன மருந்துகள் கொடுக்கிறீர்கள்; ஆயுர்வேத மருந்து சாப்பிடுவோர், என்ன வகையான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்?
வியாதி இருந்தால் சாதாரணமாக சாப்பிடும் உணவுகளை சாப்பிட முடியாது. புழுங்கல் அரிசி கஞ்சி, வடித்த சாதம் சாப்பிட வேண்டும். பயத்தம் பருப்பு, தணியா, மிளகாய், சீரகம் தட்டி போட்டு சாப்பிடும்படி கூறுவோம். காய்ச்சல் இருக்கும்போது, பால், நெய், தயிரு சாப்பிடக் கூடாது. ஆகாரம் மிக முக்கியம்.மருந்து என்று கூறும்போது, நிறைய உள்ளது. ஒவ்வொரு பகுதியிலும், எந்த மருந்து பழக்கத்தில் உள்ளதோ, அதை உபயோகப்படுத்துவர்.
சென்னையில், வியாக்ரயாதி கஷாயம், மரங்கியாதி கஷாயம், சுதர்சன சூரணம், தன்வந்திரி குட்டிகா போன்றவற்றை பயன்படுத்துகிறோம். நிறைய மருந்துகள் உள்ளன. எல்லாரும் ஒரே மருந்தை பயன்படுத்தி குணமாக்க வேண்டும் என்றில்லை.
அசைவ உணவு சாப்பிடலாமா?
எந்த காய்ச்சல் வந்தாலும், மாமிசம் சாப்பிடக் கூடாது. ஜீரணத்திற்கு எளிதான உணவுகளை சாப்பிடவேண்டும்; கடினமான உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்ச்சல் சரியான பின், ஆறு நாட்களுக்கு, பால், நெய், கொழுப்பில்லாத அசைவ சூப் சாப்பிடலாம். ஆயுர்வேத மருந்துகள் சிலவற்றில், மாமிசம் கலந்த மருந்து உள்ளது; சில வியாதிகளுக்கு, அந்த மாதிரி மருந்துகள் தேவை.
ஆயுர்வேத மருந்துகளை, டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் எடுத்துக் கொள்ளலாமா?
சிலவற்றை எடுத்துக்கலாம். அதுபற்றிய விபரம், ரெகுலரா ஆயுர்வேத மருந்து சாப்பிடுவோருக்கு தெரியும். நோய் அதிகமாக இருந்தால், வைத்தியரை பார்த்து, சரி செய்ய வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, என்ன மருந்து எடுத்துக்கலாம்?
முக கவசம் அணிய வேண்டும். திரிபுலா சூரணத்தை சுடுதண்ணீரில் கலக்கி, தொண்டையில் படும்படி கொப்பளிக்கலாம். அனு தைலம் எளிதாக கிடைக்கும். மூக்கிலும் இரண்டு சொட்டு போட்டு இழுக்க வேண்டும்.இவை பாதுகாப்பாக இருக்கும். குளிர்ச்சியான ஆகாரம், ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.பேரிடர் வரும்போது, ஆரோக்கியமாக இருப்போருக்கும் வியாதி வரலாம். எனவே, அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மருந்துகள் வயதுக்கேற்ப மாறும்.
அரசு ஏன் ஆயுர்வேத மருந்துகளை பரிந்துரைக்கவில்லை; நீங்கள் அணுகினீர்களா?
தமிழக அரசு சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. சில மாநில அரசு, ஆயுர்வேத டாக்டர்கள், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது எனக் கூறியது. தமிழக அரசு அவ்வாறு செய்யவில்லை. ஆரம்பத்தில் தயங்கியது; தற்போது, ஆயுர்வேத, சித்த மருந்துகளை பயன்படுத்தி அதிகம் பேர் குணமடைவதை அறிந்ததால், அரசு தடையாக நிற்கவில்லை. மக்களும் இப்போது புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழக அரசு பரவாயில்லை; இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.தற்போது, மேற்கத்திய மருத்துவம் ஆதிக்கத்தில் உள்ளது. அவர்கள் தான் எல்லாவற்றையும் முடிவெடுக்கின்றனர். அவர்களுக்கு, ஆயுஷ் மருந்து குறித்து தெரியாது. சரியான சிகிச்சை அளித்திருந்தால், இறப்பை இன்னும் தவிர்த்திருக்கலாம். மக்களே கஷாயம் வைத்து குடிக்க ஆரம்பித்துள்ளனர். கிராம மக்கள், 'சீந்தல்கொடி' கஷாயம் வைத்து குடிக்கும் வீடியோ பார்த்தேன். அது காய்ச்சலுக்கு நல்ல மருந்து.
சித்தாவுக்கும், ஆயுர்வேதத்திற்கும் என்ன ஒற்றுமை என்று கேட்கலாம். எங்களுக்கு சித்தாந்தம் உண்டு. ஆயுர்வேதத்தில், பஞ்ச மகா பூதங்கள், வாத கப பித்தம் அடிப்படையில், மருத்துவம் பார்க்கிறோம். சித்தாவும் இதன் அடிப்படையில் தான் செயல்படுகிறது.ஆயுர்வேத பாடங்கள், சமஸ்கிருதத்தில் உள்ளன. சித்த மருத்துவ பாடங்கள், தமிழில் உள்ளன. சித்த மருத்துவத்தில் வழங்கப்படும், கபசுர குடிநீரை, நாங்கள், 'பாரங்கியாதி கஷாயம்' என்கிறோம். இரண்டிலும் சேர்க்கப்படும் ஒன்பது பொருட்களும் ஒன்று தான்; மூன்று பொருட்கள் மட்டுமே வேறுபடுகின்றன.
'அரசுக்கு வேண்டாத செலவு'
ஆயுர்வேதத்தில் கொரோனா சிகிச்சைக்கு, எவ்வளவு செலவாகிறது?
பத்து நாளைக்கு, மருந்து, டாக்டர் கட்டணம் என, 3,000 ரூபாய்க்கு மேல் செலவாகாது. தனியார் மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை, வியாபாரமாக நடக்கிறது. அது குறித்து பேச விரும்பவில்லை.கொரோனா நோயாளிகளில், 95 சதவீதம் பேரை வீட்டில் வைத்தே சமாளிக்க முடியும்; மருத்துவமனையில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
மக்களை மருத்துவமனையில் வைத்து, சாப்பாடு போட்டு கவனித்து கொள்வது, அரசுக்கு வேண்டாத செலவு. ஆயுர்வேத, சித்த வைத்தியர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களை சிகிச்சை அளிக்க வைத்தால், கொரோனாவை எளிதாக வெல்லாம்.
ஆயுர்வேத மருத்துவர் கிரிஜா,
சென்னை
044 - 24414244
