PUBLISHED ON : ஜூன் 05, 2022

கோடை காலத்தில் சிறுநீரக தொற்று மிக அதிக அளவில் பாதிக்கும். இதற்கு மிக முக்கிய காரணம், போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு. வெளிப்புற வெப்பம், வியர்வை அதிக அளவு வெளியேறுவதால், உடலில் நீரின் அளவு குறைந்து, சிறுநீர் அடர்த்தியாகி விடும்.
இது போன்ற நிலையில், சிறுநீரகத் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெண்களை அதிகம் பாதிக்கும் தொற்று இது. வேலைக்கு செல்லும் பெண்கள், அலுவல் நிமித்தமாக அடிக்கடி பயணம் செல்ல வேண்டியவர்கள், பொதுக் கழிப்பறையை பயன்படுத்த பிடிக்காமல், சிறுநீர் கழிப்பதை தவிர்க்கின்றனர்.
இவர்களில் பலர் சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி கொள்கின்றனர் அல்லது தண்ணீர் குடிப்பதையே தவிர்க்கின்றனர். இரண்டு நிலைகளும் தொற்றை ஏற்படுத்தும். முடிந்த வரை தண்ணீர் குடிப்பதை தவிர்த்து, வீட்டிற்கு வந்தபின் அதை ஈடுகட்டும் விதமாக நிறைய தண்ணீர் குடிப்பேன் என்று சொல்பவர்கள் அதிகம்.
சிறுநீரை நீண்ட நேரத்திற்கு அடக்கி வைப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதால், சிறுநீர் பாதையில் இருக்கும் பாக்டீரியாக்கள் வெளியேறாமல் தங்கி விடும். சிறுநீர் பையில் அதிக நேரம் சிறுநீர் இருந்தால், அதில் பாக்டீரியா வளரலாம். குறிப்பிட்ட இடைவெளியில் வெளியேறாமல் இருந்தால், தொற்று ஏற்படும்.
இதனால், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வை கட்டுப்படுத்த முடியாமல் போவது, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறுநீர் கழிக்கும் போது, எரிச்சல், வலியுடன் சிறுநீர் கழிவது, சில நேரங்களில் சிறுநீர் கழிக்கும் போது ரத்தமும் வெளியேறலாம்.
தீவிர தொற்று ஏற்பட்டால், காய்ச்சல், கை, கால்கள் சில்லிட்டுப் போகலாம். இது போன்ற பிரச்னை இருந்தால், சிறுநீர் பரிசோதனை செய்து, என்ன மாதிரியான தொற்று என்பதை உறுதி செய்து, தகுந்த மருந்து தர வேண்டும்.
அறிகுறிகள் தெரிந்ததும், சிலர் தாங்களாகவே மருந்து வாங்கி சாப்பிட்டு, இரண்டு, மூன்று நாட்களில் குணமானது போல தெரிந்தால், விட்டு விடுகின்றனர்; இதனால் தொற்று தீவிரமடைகிறது. அதன் பின் ஆலோசனைக்கு வருகின்றனர். கண்டிப்பாக இதைத் தவிர்க்க வேண்டும்.
டாக்டர் ஆலோசனைப்படி, 7 - 10 நாட்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளை முழுமையாக எடுத்தால் தான் தொற்று கட்டுப்படும். எத்தனை நாட்களுக்கு மாத்திரை போட டாக்டர் பரிந்துரைக்கிறாரோ, அத்தனை நாட்களும் சாப்பிட வேண்டும்.
ஆன்டிபயாடிக் மாத்திரைகளை பாதியில் விட்டால், அந்த மருந்தை எதிர்க்கும் திறனை கிருமிகள் பெறுவதோடு, தொற்றின் தீவிரமும் அதிகமாகும். அதன் பின், முன்னைக் காட்டிலும் வீரியம் மிக்க மாத்திரைகள் தேவைப்படும்.
மாதவிடாய் சமயத்தில், தரமான நாப்கினை பயன்படுத்த வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றி விட வேண்டும். ரத்தக் கறையுடன் அதிக நேரம் இருந்தாலும் தொற்று ஏற்படலாம். இது முழுக்கவே வாழ்க்கை முறை சார்ந்த பிரச்னை. கவனமாக இருந்தால் எளிதாக தவிர்க்கலாம்.
டாக்டர் திவ்யாம்பிகை,
மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர்,
அப்பல்லோ மருத்துவமனை, சென்னை.
