PUBLISHED ON : நவ 04, 2019

இந்த ஆண்டின் சர்வதேச நீரிழிவு தின பொருள் என்ன?
ஒவ்வோர் ஆண்டும், நவ., 14ம் தேதியை, உலகம் முழுவதும், நீரிழிவு கோளாறு தினமாக அனுசரிக்கிறோம். பெல்ஜியத்தில் இயங்கும் சர்வதேச நீரிழிவு மையம், ஒவ்வோர் ஆண்டும், நீரிழிவு குறித்த கருப்பொருளை வெளியிடும். இந்த ஆண்டு வெளியிட்டுள்ள கருப்பொருள், 'குடும்பமும்நீரிழிவும்' என்பது.
இந்தக் கருப்பொருளின் தேவை என்ன?
குடும்பத்தின் ஆதரவு இல்லாமல், நீரிழிவு கோளாறை கட்டுப்படுத்தவே முடியாது. உணவு, உடற்பயிற்சி, மருத்துவ ஆலோசனை, பரிசோதனை, பொருளாதாரம் என, அனைத்து நிலைகளிலும், நீரிழிவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, குடும்பத்தின் ஆதரவு தேவைப்படுகிறது.
ஆதரவு இல்லாவிட்டால் என்ன பிரச்னைகள் வரும்?
வீட்டில் உள்ள ஆண்களுக்கு நீரிழிவு கோளாறு ஏற்பட்டால், அவரின் மனைவி, தாய், சகோதரிஎன்று, யார் சமையல் பொறுப்பை செய்கிறார்களோ, அவர்கள், சம்பந்தப்பட்டவருக்கு, சரியான உணவை கொடுக்க வேண்டும். இல்லை என்றால், பிரச்னை வரும்.மனைவிக்கு நீரிழிவு இருக்கும் பட்சத்தில், அவர் தினமும் சரியான நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அந்த நேரத்தில், குடும்ப பொறுப்புகளை கவனிக்க வேண்டியிருக்கலாம். உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாமல், கணவர் அனுமதிக்காமல் இருந்தால், அவரின் உடல் நிலை பாதிக்கப் படலாம்.சில ஆண்கள், தினசரி சாப்பிட வேண்டிய மருந்தையே மறந்து விடுகின்றனர். அவரின் மனைவி, சரியாக நினைவில் வைத்திருந்து, நேரத்திற்கு எடுத்து தருவார். இன்சுலின் போட வேண்டிய நேரத்தை நினைவுபடுத்துவார். மனைவியின் ஆதரவு இல்லாத பலர், மாத்திரை, இன்சுலின் போடுவதையே மறந்து விடுகின்றனர்.வீட்டில் யாருக்கு நீரிழவு இருந்தாலும், குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். இதற்கென நேரம், பணம் ஒதுக்க வேண்டியுள்ளதே என்ற சலிப்புடன், கணவனையோ, மனைவியையோ, பெற்றோரையோ பரிசோதனைக்கு செல்ல விடாமல் தடுத்தால், பிரச்னை சிக்கலாகி விடலாம்; அப்படி நடப்பதும் உண்டு. நாளடைவில் பிரச்னை சிக்கலாகி, கண்கள், சிறுநீரககங்கள், கால்கள் பாதிக்கப்படலாம்.
பிரச்னையை எளிதாக சமாளிக்கும் வழி முறைகள் என்ன?
எல்லாரும் சேர்ந்து விளையாடுவது, மன அழுத்தம் இல்லாமல். மகிழ்ச்சியாக இருந்தால், நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கும். சண்டை, சச்சரவாகவே குடும்பம் இருந்தால், நீரிழிவு கோளாறு கட்டுக்குள் வராது.காலையோ, மாலையோ, குறிப்பிட்ட நேரத்தில், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து, நடைபயிற்சி, வேறு ஏதாவது உடலை வருத்தி செய்யும் உடற்பயிற்சி செய்தால், நீரிழிவு கோளாறு இருப்பவரும், மற்றவர்களும் பலன் பெறலாம்.எல்லாரும் சாப்பிடுவதை, நாம் சாப்பிட இயலவில்லையே என்ற ஆதங்கத்தைப் போக்க, ஒரு வேளையாவது, நீரிழிவு நோயாளிக்கு தரும் உணவை, குடும்பத்தில் அனைவரும் சாப்பிடலாம். குடும்பத்தில், ஒருவருக்கு நீரிழவு கோளாறு இருந்தால், மற்றவர்களுக்கும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. பெற்றோருக்கு இருந்தால், அவர்களின் குழந்தைகளுக்கும் வரலாம். இது தெரிந்து, முதலிலேயே குழந்தைகளை பரிசோதனைக்கு அழைத்து வந்தால், எளிதாக கட்டுப்படுத்தலாம். குடும்ப உறவுகளுக்குள், இணக்கமும், அக்கறையும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.என் அனுபவத்தில், குடும்ப ஆதரவு இருப்பவர்களுக்கு, நீரிழிவால் வரும் பக்க விளைவுகள் வருவதில்லை. பிரச்னையை எளிதாக சமாளிக்க முடிகிறது.
குடும்ப ஆதரவுகுறைந்து வருகிறதா?
குழந்தைகளை நீரிழிவு பாதிக்கும் போது, குறிப்பாக பெண் குழந்தைகளை, பெண் குழந்தை தானே, சிகிச்சைக்கெல்லாம் செலவு செய்ய முடியாது; நடப்பது நடக்கட்டும் என்ற மனப்போக்கு இன்றும் உள்ளது. இன்னொரு பக்கம், அதீத கவனிப்பு செய்யும் பெற்றோரும் உள்ளனர்.இரண்டும், தவறான நிலைப்பாடு. பொருளாதார நிலையில் பின்தங்கிய குழந்தைகளுக்காக, இலவசமாக இன்சுலின் மருந்து தருகிறோம்.தன் குழந்தைக்கு, இலவச இன்சுலின் மருந்து வாங்கிய ஒருவர், வெளியில் உள்ள மருந்தகத்தில் விற்று, அந்த பணத்தில் மது குடிப்பதும் நடந்திருக்கிறது. சரியாக மருந்து கொடுத்தும், நீரிழிவு ஏன் கட்டுப்பாட்டில் இல்லை என விசாரித்த போது, அது தெரிந்தது. அதன்பின், அவரிடம் மருந்து கொடுக்காமல், மாற்று ஏற்பாடு செய்தோம்.
டாக்டர் வி.மோகன்
நீரிழிவு கோளாறு சிறப்பு மருத்துவர்,
சென்னை
99624 28888; 8939110000
