PUBLISHED ON : பிப் 15, 2017
ஜனவரி, 2, 2016: உமாவிற்கு நடுத்தர வயது. ஒரே ஒரு பையன், 10வது படிக்கிறான். தனியார் அலுவலகத்தில் கணவனுக்கு கிளார்க் வேலை. உமா தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு ஆசிரியையாக உள்ளார். சந்தோஷமான வாழ்வு; இதனால், பிரச்னை இல்லாமல் நாட்கள் நகர்ந்தன. திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பரிசோதனைகள் செய்த போது, காலம் தாழ்த்தி உணவு உண்டதால், இரைப்பையில் புண் ஏற்பட்டு, அதுவே காலப்போக்கில் புற்று நோயாக மாறிவிட்டது. உமாவின் நிலை ஒருவருக்கு எப்போது வரும் எனில், பொதுவாகவே வயிற்றில் சில நொதிகள், உமிழ்கள் சுரந்து, தான் உண்ணும் உணவை ஜீரணமாக்குகின்றன. வயிற்றிலிருந்து ஆசனக்குழாய் வரை, 'மியூக்கோஸா' எனும் பகுதி உள்ளது. இது, உறுப்புகளின் மேல் உள்ள பகுதி. உடலில் தேவையற்ற மாற்றங்கள் ஏற்படும் போது, மியூக்கோஸா பாதிக்கப்பட்டு புண்ணாகி, நோய் தொற்று ஏற்பட்டு புற்று நோயாக
உருவெடுக்கிறது. இவ்வாறு வயிற்றிலுள்ள மியூக்கோஸா பாதிக்கப்படும் போது, உணவுக் குழாயிலுள்ள மேல்பகுதி, நடுப்பகுதி, அடிப்பகுதி பாதிக்கப்பட்டு புற்று நோயாக மாறுகிறது. மசாலா உணவு, துரித உணவு சாப்பிடுபவர்கள், காலம் தாழ்த்தி உணவு உண்பவர்களுக்கு அல்சர் புண் ஏற்பட்டு, கட்டியாக மாறி புற்று நோயாக உருவெடுக்கிறது. மசாலா உணவுகள், துரித உணவுகள், மது அதிகம் எடுத்துக் கொள்ளும் போது, வயிற்றுப் பகுதியில் உருவாகும் ரசாயனங்கள் அதிகமாக சுரக்கின்றன. இதனால், பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. கணையப்பை, கல்லீரல் இவற்றில் பாதிப்பு ஏற்பட்டாலும் புற்று நோய் வர வாய்ப்பு இருக்கிறது. அறிகுறிகளாக வாயில் கசப்புத் தன்மை இருக்கும்; வயிற்று வலி, திட உணவுகள் அருந்த முடியாமை, நெஞ்சு எரிச்சல், முதுகு வலி, பசியின்மை போன்றவை இருக்கும். அல்சர் பாதிப்பு என்றால் மருந்து, மாத்திரைகள் கொடுத்து சரி செய்யலாம். ஆனால், எவ்வகையான பாதிப்பு, எவ்வகையான கட்டி என்பதை அறிய, 'எண்டோஸ்கோப்பி' செய்து கண்டறிய வேண்டும். இது போன்ற பாதிப்புகளை தவிர்க்க, சிறுவயது முதலே உணவில் கீரைகள், காய்கறிகள், பழங்கள், தானிய வகைகள் அனைத்தையும் சேர்த்து உண்ண வேண்டும். அசைவத்தில் மீன் வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலும், போலிக் அமிலம் குறைவதாலும் புற்று நோய் போன்ற பாதிப்புகள் வரும். உமாவிற்கு ஹீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை வலி நிவாரண மருந்துகள் அளிக்கப்பட்டன. புற்று நோய் முற்றிலும் குணமடைந்து, தற்போது மீண்டும் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க மருந்துகள் எடுத்துக் கொள்கிறார்.
ரிப்பப்ளிகா ஸ்ரீதர்
வலி நிவாரணம் மற்றும் ஆதரவு சிகிச்சை நிபுணர், சென்னை.
93810 16588
