PUBLISHED ON : நவ 20, 2016

பரபரப்பாக மாறிவிட்ட, தற்போதைய வாழ்க்கை முறையில், நாம் உணவு விஷயத்தை கருத்தில் கொள்வதில்லை. சூழ்நிலைக்கேற்ப பல்வேறு விதமான உணவுப்பொருட்களை உட்கொள்கிறோம். இதனால், நம் உடலுக்கு ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. இப்படி ஏனோ, தானோவென்று நம் உணவு பழக்க வழக்கம் இருந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் ஆதிக்கம் அதிகரித்து விடுகிறது;
சர்க்கரை பாதிப்புக்குள்ளாக நேரிடும். சர்க்கரை பாதிப்பால், நிம்மதி போய்விட்டது;
சிறுநீரகம், இதயம், மூளை, கல்லீரல், நரம்பு மண்டலம், கண், கால்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம். இதற்கு நாம் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம். அனைத்து வித தானியங்களிலும் சர்க்கரை தன்மை உள்ளது. இவற்றை பயன்படுத்தும்போது, சற்று தாமதமாக, ரத்தத்தில் சேரும் வகையில் சமைத்து சாப்பிட்டால் நல்லது.
ராகி, கோதுமையை கஞ்சியாக குடிப்பதை தவிர்க்க வேண்டும். சர்க்கரை பாதிப்புள்ளவர்கள் தாங்கள் உண்ணும் உணவில், கட்டுப்பாட்டுடன் இருக்க
வேண்டும். அப்போதுதான் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்; மேலும் அதிகரிக்காமல் தடுக்கவும் முடியும். தற்போது
எத்தனையோ வகையான உணவு பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. அவற்றை நடைமுறையில் கடைபிடிக்கும்போது, சர்க்கரை பாதிப்புள்ளவர்களுக்கு
பாதிப்பு தீவிரமாகிறது.
திரவ மற்றும் மெதுமெதுப்பான உணவுப் பொருட்கள் விரைவில் உடலுக்குள் சென்று ஜீரணமாகும் தன்மையுடையது. இவற்றை உண்ணும் போது ரத்தத்தில் விரைவில் கலந்து ஏற்கனவே இருக்கும் சர்க்கரையுடன் சேர்க்கிறது; சர்க்கரையின் அளவு மேலும் கூடுகிறது. இதனால், சர்க்கரை பாதிப்புள்ளவர்கள் இவ்வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது.
அரிசியை பயன்படுத்தும் போது, பழைய அரிசி, கைக்குத்தல் அரிசிகளை பயன்படுத்தலாம். ஏனெனில், அவற்றில் நார் சத்து அப்படியே இருக்கும்.
இயந்திரங்கள் மூலம், உமி நீக்கப்பட்டு, பாலீஷ் செய்யப்பட்ட அரிசியில் நார்சத்து துளியும் இருக்காது. இதனால், இந்த அரிசி, மாவு தன்மையுடையதாக
மாறிவிடுகிறது. இதேபோல், கோதுமையை பயன்படுத்தும்போதும்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடைகளில் விற்கப்படும் கோதுமை மாவுகளில், சத்து இருக்காது. அரிசியைவிட கோதுமையில், நார் சத்து அதிகம். கோதுமையை இயந்திரத்தில் மாவாக்கும் போது, அதில் உள்ள நார் சத்து நீக்கப்படுவது தவிர்க்க முடியாதது. எனவே, நல்ல கோதுமைகளை வாங்கி நாமே, முறைப்படி அரைக்கும் போது, அதன் நார் சத்து வீணாவதை தடுக்கலாம்.
சர்க்கரை பாதிப்புள்ளவர்கள், தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்களில் மாவும் ஒன்று; நார் சத்து என்பது சர்க்கரை பாதிப்புள்ளவர்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. மேலும், மாவை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கூழ், கஞ்சி போன்றவை விரைவில் ஜீரணமாகி விடும். இதனால், நம் ரத்தத்தில் உள்ள
சர்க்கரையுடன் கலந்து, அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. நார் சத்துள்ள உணவு வகைகளை உட்கொண்டால் மலச்சிக்கல் வராது.
