PUBLISHED ON : செப் 27, 2015

உணவு சாப்பிடுவது குறித்து, ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்:
சாப்பிட்ட உடன் தூங்கக் கூடாது. உணவு வகைகள் ஜீரணமாகவதற்குச் சீரான ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். தூங்கும்போது ஜீரணத்துக்குத் தேவையான ரத்தம் கிடைக்காது. இதனால் ஜீரண கோளாறுகள் ஏற்படும். சாப்பிட்ட பின்னர் உடற்பயிற்சி செய்யக் கூடாது.
உடற்பயிற்சி செய்யும்போது தசைகளுக்கு அதிக ரத்தம் செல்லும். இதனால் ஜீரண உறுப்புகள் முறையாகச் செயல்பட, போதிய ரத்தம் கிடைக்காது.
சாப்பிட்டு, 3 அல்லது 4 மணி நேரத்துக்குப் பின்னர் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். பொதுவாக வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதே நல்லது. காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. சாப்பிட்டவுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டால், ஜீரண உறுப்புக்களால்
செரிமானம் செய்யப்பட்ட உணவுகளை கிரகித்துக் கொள்ள முடியாது.
சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது. இதனால், கை, கால், உடல் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சென்று, ஜீரண உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. நாளைடைவில் ஜீரண உறுப்புக்கள் வலுவிழந்து விடும். குளித்தால் முக்கால் மணி நேரத்திற்கு பிறகு தான் சாப்பிட வேண்டும். சாப்பிட்டால் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு தான் குளிக்க வேண்டும்.
உருளைக் கிழங்கு சிப்ஸ், அப்பளம், ஊறுகாய் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். எப்போதும் அதிக குடிநீர், கலோரி இல்லாத பானங்களைக் குடிக்கவும். 'டிவி' பார்த்துக் கொண்டோ, புத்தகம் படித்துக்கொண்டோ, பேசிக் கொண்டோ சாப்பிடாதீர்கள். உணவு மூச்சுக்குழாய்க்குள் போய் அடைத்துக் கொள்ளும். அப்போது மனம் ஜீரணச் சுரப்பிகளை சுரக்கத் தூண்டுவதில்லை. காலையில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் சாப்பிட வேண்டும்.
சாப்பாட்டுக்கு முன் பச்சைக் காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால், உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும். இதனால், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். சாப்பிட்டவுடன் பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும்.
உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும். உண்ட உணவு செரிக்காத நிலையில், பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். சாப்பிட்ட உடனே பழங்களைச் சாப்பிடுவதால் வயிறு காற்று அடைத்து வீங்கிவிடும். சாப்பிட்டு, 1-2 மணி நேரம் கழித்துதான் பழங்கள் சாப்பிட வேண்டும் அல்லது சாப்பிடுவதற்கு, 1 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.
பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லது. அதிக நார்ச்சத்தும் பிற சத்துக்களும் முழுமையாக கிடைக்கும். கோதுமை, கம்பு போன்ற தானியங்களை மாவாக்கி, பின்னர் சல்லடையால் சலித்தால் ஊட்டச் சத்துக்களும் நார்ச்சத்தும் குறைந்துவிடும். உப்பு அதிகம் வேண்டாம். குறைவாகவும் இருக்கக்கூடாது. காய்கறியை நறுக்கி நீண்ட நேரம் திறந்து வைப்பது நல்லதல்ல. குக்கரில் காய்கறிகளை அவிப்பதால் சத்துக்கள் வெளியேறாது.

