கோடுகள் அலை அலையாய் தெரிகிறதா மறக்காம கண் பரிசோதனை செய்யுங்க
கோடுகள் அலை அலையாய் தெரிகிறதா மறக்காம கண் பரிசோதனை செய்யுங்க
PUBLISHED ON : ஏப் 26, 2026

''ஓடி, ஓடி உழைச்ச காசெல்லாம் புள்ளைங்கள படிக்க வைக்கவே செலவாகிடுச்சு. இப்போ தான் மகனும், மகளும் தலையெடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. இப்போ போயி, பார்வை மங்கலா இருக்குன்னு சொன்னா, அவங்க தான் என்ன பண்ணுவாங்க,'' என, கீரைக்காரம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தாள் அஞ்சலையம்மாள்.
இதை கேட்டு கொண்டிருந்த ரீனா, மறுநாளே அவரை டாக்டரிடம் அழைத்துச்சென்றாள்.
அஞ்சலையம்மாளுக்கு வயதாவதால் ஏற்படும் 'மாகுலர் டிஜெனரேஷன்' வந்திருப்பது தெரிந்தது.
அதென்ன 'மாகுலர் டிஜெனரேஷன்?' அரசு மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவு மருத்துவர் சரவணனிடம் இது குறித்து கேட்டோம்.
அவர் கூறியதாவது:
பொதுவாக, 50 வயதை தாண்டியவர்களுக்கு வரும் பாதிப்பு தான், இந்த மாகுலர் டிஜெனரேஷன். கண்ணின் மையப்பகுதியான மாகுலர் இதனால் பாதிக்கப்படும். கண் ஓரங்களில் பார்வை நன்றாக தெரியும்.
ஆனால் மையப்பகுதியில், மங்கலாகவோ அல்லது முற்றிலும் தெரியாமலோ போகலாம். நேரான கோடுகள் அலை அலையாக வளைந்திருப்பது போல தெரிவது, வாசிப்பதில் சிரமம் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
இதில், உலர் வகை, ஈரமான வகை என இரண்டு வகை பாதிப்பு உள்ளது. உலர் வகை பாதிப்பாக இருந்தால், மாகுலா பகுதி மெலிந்து, சிறிய மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றி, பார்வை குறையும். இதை குணப்படுத்த மருந்துகள் இல்லை.
ஈரமான வகை மாகுலா பாதிப்பு சற்று தீவிரமானது. விழித்திரையின் கீழ் அசாதாரணமாக ரத்த நாளங்கள் வளர்ந்து, பார்வை இழப்பை ஏற்படுத்தலாம். இதற்கு, ஊசி, லேசர், அறுவை சிகிச்சைகள் உள்ளன.
இவ்விரு பாதிப்புகளிலும், சிகிச்சை எடுத்தால் இழந்த பார்வையை மீட்க முடியாது. ஆனால், மேலும் பார்வை இழப்பு ஏற்படாமல் கட்டுப்படுத்தலாம். பார்வை மங்குவதாக உணர்ந்தால், உடனே கண் மருத்துவரை அணுகுவது அவசியம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
