PUBLISHED ON : செப் 18, 2016
பொதுவாக பெற்றோர், பெண் குழந்தைகள் பிறந்தால், சிறுவயதிலிருந்து திருமணம் செய்து கொடுக்கும் வரை, பார்த்து பார்த்து செய்வார்கள். ஒவ்வொரு படிநிலைகளிலும், நல்லது, கெட்டதை எடுத்து கூறுவர். ஆண் குழந்தைகளிடமும் இதுபோன்ற கவனிப்பு அவசியம் என்கின்றனர், உளவியல் மருத்துவர்கள். மகன் என்ன செய்கிறான்? எப்படி படிக்கிறான்? என, எது பற்றியும் கவலைப்படாமல் இருப்பவர்களே இங்கு அதிகமாம். இதன் விளைவு, சமூக விரோத செயல்களில் ஈடுபட செய்ய வைக்கிறது.
ஆகவே, ஆண் குழந்தைகளுக்கு வயது அடிப்படையில், வாழ்க்கை படிநிலைகளில் வரும் நன்மை, தீமையான விஷயங்களை எடுத்து சொல்லி வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு, பெற்றோரே சிறந்த ஆசான். சில, ஆண் குழந்தைகள் எதற்கெடுத்தாலும் பயப்படுவர்; சிலர் துணிச்சலுடன் எதையும் செய்வர். சிலர், நன்மை, தீமை எது என்பதை தெரியாமலேயே செய்வர் என, வித்தியாச குணங்கள், ஆண் குழந்தைகளிடம் இருக்கிறது.
இவர்களது வளர்ச்சியை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். பள்ளி பருவத்திலேயே, பெண்களுக்கு எவ்வாறு மதிப்பு கொடுப்பது, பெரியோருக்கு மரியாதை அளித்தல், பொது இடங்களில் எப்படி பேச வேண்டும் என்பதை தெளிவுப்படுத்துவது அவசியம். இதற்கு, பெற்றோர் நண்பர்களாக முதலில் இருக்க வேண்டும்.
நம் குழந்தைகள் மீது எந்த விஷயத்தையும் திணிக்க கூடாது. இது தவறான செயல். அப்போது தான், அவர்கள் பழகும் நண்பர்களை, ஒரு நண்பனாக பார்ப்பர்; அவர்களின் செயல் நிறைவேற வேண்டும் என்பதற்காக, யாரையும் வற்புறுத்த மாட்டார்கள். இதேபோல், பல கருத்துக்களை அவர்களுக்கு புரிய வைப்பதன் மூலம், எத்தனையோ தவறுகள் தடுக்கப்படும்.
ஆண், பெண் என குழந்தைகளை பிரித்து பார்க்காமல், சரிவிகிதத்தில் நண்பர்களாக பழகி, ஒவ்வொரு விஷயத்தையும் எடுத்துரைக்க வேண்டிய சூழலை உருவாக்கி கொள்ளுங்கள்; சமூகத்தின் அருமையும், குழந்தைக்கு புரியும்.
