கனவு தவிர்... நிஜமாய் நில்!: சம்பந்திக்கு சொல்லாத சர்க்கரை!
கனவு தவிர்... நிஜமாய் நில்!: சம்பந்திக்கு சொல்லாத சர்க்கரை!
PUBLISHED ON : டிச 02, 2018

எந்த நோயாக இருந்தாலும், குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் இருந்தால் மட்டுமே, உடல் பிரச்னையை நம்பிக்கையுடன் எதிர் கொள்ள முடியும்.
நீரிழிவுக் கோளாறு இருந்தால், உணவு முறையில் மாற்றம், உடற்பயிற்சி, உடல் பருமன் குறைப்பு என்று அடிப்படையான பல வாழ்க்கை முறை மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது.
தொடர் மருத்துவ ஆலோசனை, தவறாமல் மருந்து, இன்சுலின் ஊசி என்ற தேவைக்கு ஏற்ப, தவறாமல் எடுக்க வேண்டியதும் முக்கியம். எல்லா வயதினருக்கும் நீரிழிவு கோளாறு வருகிறது என்றாலும், இளம் வயதினருக்கு, குறிப்பாக, இளம் பெண்களுக்கு இந்த கோளாறு வந்தால், அது சமுதாயப் பிரச்னையாக உள்ளது.
குழந்தைக்கு, குறிப்பாக பெண் குழந்தைக்கு சர்க்கரை கோளாறு வந்தால், மொத்த குடும்பமும் அதைப் புரிந்து, தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும். விஷயம் தெரிந்தால், எங்கே, தன் பெண்ணிற்கு திருமணம் நடக்காதோ... என்று பயந்து, பல நேரங்களில் இந்த விஷயத்தை, சம்பந்தி வீட்டாரிடம் மறைத்து விடுகின்றனர்.
இது மிகப் பெரிய தவறு. தொடர்ந்து, மருந்து சாப்பிடாவிட்டால், பல உடல் பிரச்னைகளுக்கு வழி வகுத்து, சமயங்களில், உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன், இளம் வயது பெண்கள் இருவர் என்னிடம் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் ஒருவர், 5 ஆண்டுகளாக என்னிடம் சிகிக்சை பெறுபவர். அந்தப் பெண்ணிற்கு, திருமணம் ஆனது. இது பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை.
அவரின் பெற்றோர், ரகசியமாக வைத்திருந்தனர். இந்தப் பெண், தன் கணவனிடமும் பிரச்னையைச் சொல்லவில்லை. இளம் பெண்களுக்கு சர்க்கரை கோளாறு இருந்தால், ஒரு நாளைக்கு, குறைந்தது, இரண்டு வேளை இன்சுலின் ஊசி போட வேண்டியிருக்கும். கணவனுக்குத் தெரியாமல், மறைத்து, பாத்ரூமில் வைத்து, இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வார்.
திருமணம் ஆன சில நாட்களில், இருவரும் கொடைக்கான லுக்கு, ஹனிமூன் சென்றனர். அங்கே போய், இன்சுலின் தீர்ந்து விட்டது. வாங்க முடியவில்லை. அந்த நிலையிலும், கணவனிடம் இந்தப் பெண் சொல்லவில்லை. 5 நாட்கள் ஊசி போடவில்லை. சர்க்கரை அளவு அதிகமாகி, 'டயபடிக் கோமா' வந்து, அதன்பின், என்னிடம், 'அட்மிட்' செய்தனர். உயிரைக் காப்பாற்றியதே பெரிய சவாலானது.
இன்னொரு பெண், சம்பந்தி வீட்டில் சொல்லாமல், சரியான நேரத்திற்கு சிகிச்சை கிடைக்காமல் இறந்து போனார்.
இளம் பெண்களுக்கு பிரச்னை வரும்போது, உடல் ரீதியில், பொருளாதார நிலையில் மட்டுமல்ல, சமுதாயப் பிரச்னையாவது தான் பிரதான பிரச்னை.
இளம் ஆண்களுக்கு சர்க்கரை கோளாறு இருந்தாலும், சமுதாயப் பிரச்னை தான். ஆனால், பல நேரங்களில், ஆண்களின் உடல் கோளாறை நாம் பெரிதாக நினைப்பதில்லை.
இளம் வயதினருக்கு, டைப் - 2 நீரிழிவு வந்தால், மாத்திரை போட்டால் போதும். டைப் - 1 நீரிழிவு இருந்து, இன்சுலின் எடுக்க வேண்டியிருந்தால், அது தான் பெரிய பிரச்னையாக உள்ளது.
சர்க்கரை கோளாறு குறித்து, நிறைய விழிப்புணர்வு இருப்பதால், இளம் வயதினருக்கு வரும் போது, இந்தப் பிரச்னை இருந்தால், வாழ்க்கை முழுவதும் கஷ்டம்; கண்கள், சிறுநீரகங்கள், கால்கள் போன்றவற்றை பாதிக்கும் பல பிரச்னைகள் வரும் என்று நினைக்கின்றனர்.
குழந்தைப் பருவத்தில் இருந்தே, நீரிழிவு கோளாறு இருந்தால், அவளுக்கு பிறக்கும் குழந்தைக்கு கோளாறு வருவது வெறும், 15 சதவீதம் மட்டுமே.
கர்ப்ப காலத்தில், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால், குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், பிரசவம், பிரச்னை இல்லாமல் இருக்கும்.
டாக்டர் ஏ.ராமச்சந்திரன்,
நீரிழிவு சிறப்பு மருத்துவர், சென்னை.
044 2235 3729, 044 4216 2004
