இரும்புச்சத்துள்ள உணவு சாப்பிடுங்க... - மாதவிலக்கு ஒழுங்கின்மை சரியாகிவிடும்!
இரும்புச்சத்துள்ள உணவு சாப்பிடுங்க... - மாதவிலக்கு ஒழுங்கின்மை சரியாகிவிடும்!
PUBLISHED ON : அக் 02, 2020

''மாதவிலக்கில் ஒழுங்கின்மையை தவிர்க்க, பெண்கள் சிறுவயது முதலே இரும்புச்சத்துள்ள உணவு உண்ண வேண்டும். தைராய்டு பிரச்னை இருந்தாலும், பிரீயட் பிரச்னை வரும்,'' என்கிறார், கோவை அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை பொதுமருத்துவர் ஜெயலட்சுமி.
சமீபகாலமாக பெண்கள் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயால், அதிகமாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறதே...?
உண்மைதான். அதிக மன உளைச்சல், கவலை, நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பது ஆகியவையே காரணங்கள். நவீன வசதிகளால் உடல் செயல்பாடுகள் குறைந்து விட்டன. சரியாக உறங்குவதில்லை. உடல் நலனில் அக்கறை இல்லாமல் இருப்பதால், சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளிட்ட நோய்களுக்குஆளாகின்றனர்.
பல பெண்கள் மாதவிலக்கு ஒழுங்கின்மையால், பாதிக்கப்பட காரணம் என்ன?
சிறுவயதில் இருந்தே, ஊட்டச்சத்துள்ள உணவு சாப்பிட வேண்டும். பெண் குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லை. பாஸ்ட்புட் உணவில் அதிக மோகம் இருக்கிறது. இரும்புச்சத்து குறைபாடு இருந்தாலும், தைராய்டு பிரச்னை இருந்தாலும், பிரீயட் பிரச்னை வரும்.தொடர்ச்சியாக இந்த பிரச்னை இருந்து, வலி அதிகம் இருந்தால், மருத்துவரை பார்த்து ஆலோசனை பெறுவது நல்லது.
பெண்களுக்கு 'பிசிஓடி' பிரச்னை அதிகரிக்க காரணம் என்ன?
பொதுவாக, 20 முதல் 35 வயது வரை உள்ள பெண்கள், இதனால் பாதிக்கப்படுகின்றனர். ஹார்மோன் இம்பேலன்ஸ் முக்கிய காரணம். உடல் பருமன், முறையற்ற உணவு பழக்கம், உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதுதான், இந்த பிரச்னையை உருவாக்குகிறது. பெண்கள் குடும்பத்தினரை மட்டுமல்லாமல், அவர்களுடைய ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குழந்தை பிறப்புக்கு பிறகு, பெண்களின் வயிறு பெரிதாவதை தடுப்பது எப்படி?
பெண்கள் கர்ப்பம் தரித்தவுடன், உடல் அசைவுகளை குறைத்து விடுகின்றனர். கர்ப்பமாக இருக்கும் போது செய்ய வேண்டிய சில உடற்பயிற்சிகள் உள்ளன. அதை செய்வதில்லை. குழந்தை பெற்ற பிறகு, வயிறு பெரிதாவதை தடுப்பதற்கான, உடற்பயிற்சிகளை (Abdominal Exercises) செய்ய வேண்டும். சிசேரியன் செய்து இருந்தாலும், உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்யாததால், உடல் எடையும் அதிகரித்து விடுகிறது. வயிறு பெரிதாக இருந்தால் சர்க்கரை நோய், பீபி வரவும் வாய்ப்பு உள்ளது.
மார்பக புற்றுநோய் கட்டி பிரச்னையில் சிக்காமல் இருக்க, என்ன செய்ய வேண்டும்?
முன்பு மார்பக புற்றுநோய், நம் நாட்டில் குறைவாக இருந்தது.இன்றைக்கு அதிகரித்து உள்ளது. மார்பக கட்டியை ஆரம்பத்தில் கவனித்து விட்டால், எளிதாக சரி செய்து விடலாம். அதனால், 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பகங்களை, 'ஸ்கிரீன் டெஸ்ட்' செய்து கொள்வது அவசியம்.
டாக்டர் ஜெயலட்சுமி
அறுவை சிகிச்சை பொது மருத்துவர்
கோவை, அரசு மருத்துவமனை
83001 42054
www.jaykavinethra@gmail.com

