PUBLISHED ON : மார் 01, 2015

இந்தியாவில் பலர், மூலநோயால் அவதிப்பட்டு வருவதாக, ஒரு மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. மூலநோயை பொறுத்தவரை, அலோபதி மருந்துகள், அதிகம் பலன் தருவதில்லை. இயற்கையாக கிடைக்கும், மூலிகை மருந்துகள், மூலத்தை கட்டுப்படுத்துகின்றன. இதில், சேப்பங்கீரை மூலநோயை கட்டுப்படுத்தும், அரிய மூலிகையாக பயன்படுகிறது.
சேப்பங்கிழங்கு இந்தியா முழுவதும் மருந்திற்காகவும், உணவிற்காகவும் பயிரிடப்படுகிறது. சேப்பங்கிழங்கில் இருந்து உற்பத்தியாகும் கீரையும் உணவுக்கு பயன்படுகிறது. பொதுவாக நாம், கிழங்கை உபயோகப்படுத்தும் அளவிற்கு கீரையை பயன்படுத்துவதில்லை.
சேப்பங்கிழங்கின் இளந்தண்டுகளும், உணவாக சமைக்கப்படுகிறது. இதில், இளந்தளிரே உண்பதற்கு ஏற்றதாகும். சமைக்கும் போது, சிறிதளவு சோடா உப்பு சேர்க்க வேண்டும். தண்டுகளை சமைக்கும் போது, சிறிது புளி, எலுமிச்சை சாறு சேர்த்து சமைக்கவேண்டும். இதனால் காரல் தன்மை நீங்கும்.
வைட்டமின் தாது உப்பு
சேம்பில் வைட்டமின், புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, மாவுச்சத்துகள் உள்ளன. மேலும் கால்சியம், ஆக்ஸாலிக் அமிலம், மணிச்சத்து, இரும்புச்சத்துகளும் உள்ளன. உயிர்சத்துக்களில் வைட்டமின் ஏ, சி12 தையாமின், ரிபோப்ளோவின், நிக்கோடினிக் அமிலம் ஆகியவை உள்ளன.
வெட்டுக்காயம் ஆறும்
சேம்பங்கீரை சிறந்த மூலிகையாகவும் செயல்படுகிறது. இது பலவித நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது. இந்த இலையில் சாற்றை வெட்டுக்காயங்களில் பூசினால், விரைவில் காயங்கள் ஆறும். தசைநார்கள் வேகமாக வளரும். இலையின் சாற்றினை ரத்தம் சொட்டும் காயங்களின் மீது பூசினால் ரத்தம் வடிவது நிற்கும். மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலிக்கு இதன் சாற்றைக் கொடுத்தால் வலி நீங்கி நிவாரணம் கிடைக்கும்.
கீரையையும், தண்டையும், வேகவைத்த நீரில், நெய் கலந்து கொடுக்க, வயிற்றுவலி குணமாகும். காதுவலி, காதில் சீல் வடிதல், போன்றவற்றிக்கு, கீரை சாற்றினை, இரண்டொரு துளி விடலாம். இதனால் வலி நீங்கும். குளவி, வண்டு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில், இக்கீரையின் சாற்றைப் பூசினால், நஞ்சு இறங்கி வேதனை நீங்கும்.
மூலநோய்க்கு மருந்து
இது மூல நோய்களுக்கு நல்ல மருந்தாகும். சேம்புக்கீரையுடன் புளி சேர்த்து சமைத்து உண்ண வெளித்தள்ளிய மூலமும், ரத்தக்கடுப்பும் நீங்கும். இந்த கீரையை சமையலில் சேர்த்துக்கொள்ள, மேக சாந்தி குணமடையும். மேலும் மூலவாய்வு, மூலச்சூடு, ரத்த மூலம், மூளை மூலம் இவைகள் நீங்கும். ஆண்மை குறை உள்ளவர்கள், சேப்பங்கீரை இலைச்சாற்றை உண்டு வந்தால், உயிரணுக்கள் அதிகரித்து அக்குறை நீங்கும்.

