PUBLISHED ON : மே 22, 2022

உடலில் உள்ள கழிவுகள் சரிவர நீக்கப்படாமல் இருப்பதால், பல பிரச்னைகள் உடலுக்கும், மனதுக்கும் ஏற்படுகின்றன. குறிப்பாக, மலச் சிக்கல், மனச் சோர்வு, சுறுசுறுப்பின்மை, தலைவலி போன்றவை அடிக்கடி ஏற்படுகின்றன.
சிறுநீரகங்கள், சிறுகுடல், பெருங்குடல், நுரையீரல், நிணநீர் சுரப்பிகள், கல்லீரல் ஆகியவை உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகின்றன. தினம் தினம் தன்னை புதுப்பித்துக் கொள்ளவும், கழிவுகளால் ஏற்படும் உபாதைகளை தனக்குத் தானே சரி செய்து கொள்ளவும் உடலுக்கு தெரியும்.
ஆனாலும், உணவு, நீர், காற்று, தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் என்று அனைத்திலும், நச்சுப் பொருட்கள் அளவுக்கு அதிகமாக உள்ளன. இவை, இயல்பு நிலையில் இருந்து சரிவர செயல்பட உடலை விடுவதில்லை; எனவே, 'டீ டாக்சிபிகேஷன்' எனப்படும் நச்சு நீக்கம் செய்வது அவசியமாகிறது.
இதற்கென்று நிறைய மையங்கள் வந்து விட்டன. என்னுடைய தனிப்பட்ட கருத்து, உடல் நச்சு நீக்கம் என்பது, இயற்கையான முறையில் நாமே செய்து கொள்வது தான் நல்லது. இதற்கென்று ஒரு மையத்திற்கு சென்று தங்குவது அவசியம் இல்லாதது.
நச்சு நீக்கம் எப்படி செய்யலாம்?
காலை எழுந்ததும், எந்தப் பிரச்னையும் இல்லாமல், வெளிப்புறத் துாண்டுதல் இன்றி, மலம் கழித்தாலே முக்கால் வாசி உடல் உபாதைகள் தீர்ந்து விடும்.
மலச்சிக்கல் இருந்தால், ஒரு ஸ்பூன் கடுக்காய் பொடி அல்லது திரிபலா பொடியை இரவில் துாங்கப் போவதற்கு முன், மருத்துவ ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ளலாம். பருப்பு வேக வைக்கும் போது, இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் விட்டு வேக வைக்கலாம்.
மருத்துவரிடம் கேட்டு, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மலக் கழிவுகளை நீக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். மாதத்திற்கு இரு முறை இரவு படுக்கப் போவதற்கு முன், ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் குடிக்கலாம்.
வியர்வை மூலமாக கழிவுகள் வெளியேறுவதும் முக்கியம். பலர், வியர்வை வெளியேறுவதையே விரும்புவதில்லை. உடலின் வெப்பநிலையை சமன்படுத்துவதில் வியர்வை மிக முக்கியமானது. தினமும் சூரிய ஒளிக்கு உடலை காண்பியுங்கள். 'சன் ஸ்கிரீன்' தடவி, உடலின் ஆரோக்கியத்தைக் கெடுக்க வேண்டாம்.
காலையில் வெந்நீர் பருகினால் வியர்வை வெளியேறும். உடற்பயிற்சியும் முக்கியம். தினமும், 2 - 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீருக்கு சுவையூட்டாமல், அதன் இயற்கையான சுவையில் பருக வேண்டியது அவசியம்.
சீரான ரத்த ஓட்டத்திற்கு, கழிவுகள் வெளியேற, நுரையீரல் பலப்பட, முறையாக பயிற்சி பெற்று, தினமும் 5 நிமிடங்களாவது சுவாசப் பயிற்சி செய்ய வேண்டும். வாந்தி செய்வித்தல் முறையில், மாதம் ஒரு முறை, 30 மில்லி குப்பைமேனி சாறு குடிப்பதால், வாந்தி வழியே உடலின் மேல் பகுதி கழிவுகள் வெளியேறும். சிலருக்கு வாந்தி வராது; ஆனாலும், அதன் பலன் கிடைக்கும்.
விரத முறையும் நல்ல பலன் கொடுக்கும். அவரவர் உடலுக்கு ஏற்ற விரத முறையை பின்பற்றலாம். விரத நாளுக்கு முந்தைய இரவு வெண் பொங்கல், மறுநாள் அகத்திக் கீரை, மொச்சைப் பயறும் சேர்ப்பது நல்லது.
கல்லீரலை வலுவாக்கி, அதன் செயல்பாட்டை சீராக்க மாதம் இரு முறை கரிசலாங்கண்ணி கீரையை சாப்பிடலாம். மாதம் மூன்று முறை வெறும் வயிற்றில் கீழா நெல்லியை, மோருடன் கலந்து குடிக்கலாம்.
ரத்த சுழற்சியை சீராக்குவதும் முக்கியம். கறிவேப்பிலை துவையல், இஞ்சித் துவையல், வேப்பம் பூ ரசம் போன்றவை இதற்கு பலன் தரும். அன்னாசி, மாதுளை, பப்பாளி, நெல்லிக் காய் உள்ளிட்டவை கழிவுகளை வெளியேற்றி உடலை சுத்தம் செய்யும்.
மன சோர்வு இல்லாமல், மகிழ்ச்சியாக வாழ்க்கையை எதிர் கொள்வதும் முக்கியம். அமில, காரம் அதிகம் உள்ளவர்கள், மாதவிடாய் நேரத்தில், உடல் நோயுற்று இருக்கும் சமயங்களில் நச்சுத் தன்மை நீக்கம் செய்யவே கூடாது.
டாக்டர் மது கார்த்தீஷ்,
சித்த மருத்துவர், சென்னை.
99944 93687
