PUBLISHED ON : ஜூலை 13, 2025

இறைவனின் படைப்புகளில் அருமையான படைப்பு
மனிதனின் பாதம் தான். ஒரு பாதத்தில் 26 எலும்புகளும் 33 மூட்டுகளும்
எண்ணற்ற தசைநார்களும் உள்ளன. இந்த பாதங்களை பாதுகாப்பது நமது கடமை.
பாதத்தில் மூன்று வளைவுகள் உள்ளன. அதையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
பாதுகாக்கும் வழி
முகத்திற்கு
எப்படி முக்கியத்துவம் தருகிறோமோ அதைப் போல பாதங்களையும் பராமரித்து அதில்
ஏதும் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். பாதங்களில்
வீக்கம், புண், வலி, மதமதப்பு, ஊசிகுத்துதல் போன்ற உணர்வு ஏற்படுகிறதா
என்பதை கவனிக்க வேண்டும். குளிர்ந்த நீருக்கு பதிலாக வெதுவெதுப்பான நீரில்
கால்களை கழுவ வேண்டும். விரல்களின் இடையே ஈரம் இருந்தால் துடைத்து சுத்தம்
செய்ய வேண்டும். நகத்தை சீராக வெட்ட வேண்டும். கால்கள் உலர்ந்திருந்தால்
எண்ணெய் அல்லது ஈரப்பதமான கிரீம்கள், 'லிக்விட் பாரபின்' பயன்படுத்தலாம்.
கால்வலிக்கான மருந்தை தடவும் போது அழுத்தி தேய்க்கக்கூடாது.
டாக்டரின்
ஆலோசனையின்றி எந்த பொருளையும் காலில் பயன்படுத்தக்கூடாது. கால் ஆணி
இருந்தால் நீங்களாக அறுத்து சிகிச்சை செய்யாமல் டாக்டரிடம் காண்பிக்க
வேண்டும். ஈரமான இடத்தில் கால்களை நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடாது.
வீட்டிற்கு உள்ளே, வெளியே மட்டுமின்றி கழிப்பிடம் செல்லும் போதும் வெறும்
கால்களில் நடக்கக்கூடாது. நனைந்த செருப்பு அல்லது ஷூவுடன் நடக்கக்கூடாது.
அதேபோல அதிக வெப்பம், குளிரில் கால்கள் நீண்ட நேரம் இருக்கக்கூடாது.
புகைபிடித்தால் கால்களுக்கு செல்லும் ரத்தஓட்டம் குறையும் என்பதால் புகைப்பதை நிறுத்த வேண்டும்.
- டாக்டர் ஜெ. சங்குமணி,
நந்தினி நர்சிங் ஹோம், மதுரை.
98432 72876