PUBLISHED ON : ஜன 03, 2016

புடலங்காய், நீண்ட ஆயுளை தரும் காய். புடலங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் வாயிலாக, உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும். அதிகம் நீர் சத்துள்ள இக்காயில், நோய்களை போக்கும் மருத்துவ குணம் உள்ளது. புடலங்காய் சர்க்கரை நோய் மற்றும் வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற, மருந்தாக பயன்படுகிறது. மாரடைப்பு, கருத்தடை மற்றும் பால்வினை நோய்க்கான எதிர்ப்பு சக்தி இதில் உள்ளது. தொடர்ந்து காய்ச்சல் இருந்தால், புடலங்காயில் விதைகளை நீக்கி விட்டு, கறியாக சமைத்து சாப்பிடுவதால் காய்ச்சல் நின்றுவிடும்.
இதயத்துக்கு பலமும், நல்ல செயல்பாட்டையும் தரக்கூடியது. அதிக உடலுழைப்பு, மன உளைச்சல் ஆகியவற்றால் இதயத்துடிப்பும், பெருமூச்சும் ஏற்பட்டு இதயம் பலவீனமடைந்தவர்கள், புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அன்றாடம் காலையில் புடலைக் கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து, சாறாகப் பிழிந்து வைத்துக் கொண்டு, ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம், இரண்டு வேளைகள் சாப்பிடுவதால், இதயத்துடிப்பு சமநிலை பெறுவதோடு, இதயமும் பலம்பெறும். புடலங்காய் ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது. தோல் நோய்களை விரைவில் குணப்படுத்தும்.
கிருமிகளை அழிக்கும். பசியைத் தூண்டும். மலச்சிக்கலை தவிர்க்க உதவும். பித்தநோய்களைத் தணித்து, ஈரலைப் பலப்படுத்தும்.
இளம் வழுக்கை என்கிற பாதிப்புக்கு ஆளான ஆண், பெண் இருபாலாரும், புடலங்காய் இலைச்சாறு உண்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். புடலஞ்செடியின் இளம் இலைகளை, சேகரித்து சுத்தம் செய்து, அரைத்து சாறு பிழிந்து, அன்றாடம் காலையில், 25 மி.லி., வரை குடித்து வந்தால், இளம் வழுக்கைத் தலையிலும், புழுவெட்டால் ஏற்பட்ட திட்டுத் திட்டான வழுக்கை மறைந்து தலைமுடி வளரும்.
புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதும், புடலம் இலையைக் கசக்கித் தயாரித்த சாற்றை, தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து குளித்தும் வந்தால் விரைவில் சொட்டை நீங்கி முடிவளரும். உடலில் பித்தம் அதிகரித்து பசியின்மை, காய்ச்சல், உடல் சோர்வு, குமட்டல், ருசியின்மை என்ற தொல்லைகள் தொடர்ந்தால், புடலங்கொடியின் இலைச் சாற்றுடன், கொத்துமல்லிச்சாறு அல்லது தனியாத் தூள் சேர்த்துக் காய்ச்சி, சுவைக்காக பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் பித்தம் தணிந்துவிடும்.
வெங்காயத்தின் பயன்பாடு, ஆரோக்கியமான கூந்தலுக்கு மிகவும் இன்றியமையாதது. வெங்காயச் சாற்றை தலைக்கு தடவி ஊற வைத்து குளித்தால், பொடுகுத் தொல்லை குறையும். தலையில் முடி இல்லாத இடத்தில் வெங்காயத்தை வெட்டி தொடர்ந்து @தய்த்து வந்தால், முடி வளர வாய்ப்புள்ளது.
