PUBLISHED ON : ஜூன் 01, 2025

ஆறு சுவைகளில் முதலில் நம் நினைவில் வருவது இனிப்பு, உப்பு அதன்பின் காரம், புளிப்பு, கடைசியாகத் தான் கசப்பும் துவர்ப்பும்.
உணவை நாம் தேர்வு செய்வதற்கு பிரதான காரணம் அதன் ருசி. இனிப்பான உணவை பார்த்ததும், நம் மூளையில் உள்ள 'எண்டோர்பின்' என்ற ரசாயனம் சுரந்து, இனிப்பு சாப்பிடு, மகிழ்ச்சியாக இருக்கும் என்று துாண்டுகிறது.
வெறுமனே உற்சாகமான மனநிலையை தருவதற்காக மட்டும் அறுசுவைகள் இல்லை. சுவைக்கும் நம் ஆரோக்கியத்திற்கும் நிறைய தொடர்பு உள்ளது.
நவீன ஆராய்ச்சிகளில் தாவரங்களின் மூலக்கூறுகளை பிரித்து ஆராய்ந்ததில், கசப்பும், துவர்ப்பும் உடலுக்கு நன்மை தரக்கூடிய, மருத்துவ குணம் நிறைந்த சுவை, என்று தெரிகிறது.
பெரும்பாலும் இந்த சுவைகள் நம் தினசரி உணவில் இடம் பெறுவதில்லை. தினசரி சமையலில் பயன்படுத்தும் கறிவேப்பலை, வெந்தயம் இரண்டும் கசப்புத்தன்மை வாய்ந்தது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள இலினாஸ் ஆராய்ச்சி மையத்தில் செய்த ஆராய்ச்சியில், கறிவேப்பிலையில் உள்ள 'கார்பசோல்' என்ற ஆல்கலாய்டை தனியே பிரித்து ஆராய்ந்ததில், சர்க்கரை கோளாறின் ஆரம்ப நிலையில் இருக்கும் ஒருவர் தினமும் கறிவேப்பிலை சாப்பிட்டால், மருந்துகளை சார்ந்து வாழும் சர்க்கரை நோயாளியாக மாறுவதை ஒன்றிரண்டு ஆண்டுகள் தாமதிக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது.
அடுத்தது வெந்தயம். இதில் கரையக்கூடிய, கரையாத நார்ச் சத்துகள் இரண்டும் அதிகம் உள்ளன.
கரையாத நார்ச்சத்து குடலை சுத்தமாக்கி மலமிளக்கியாக செயல்படுகிறது.
கரையக்கூடிய நார்ச்சத்து இதய நாளங்களில் படியக்கூடிய கொழுப்பை கரைக்கக் கூடியது என்று பல ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
அதற்காக கறிவேப்பிலை, வெந்தயம் என்ற இரண்டையும் சாப்பிட்டால் சர்க்கரை கோளாறு, ரத்த நாள அடைப்பு வரவே வராது என்று சொல்லவில்லை. அதே நேரத்தில், அடுத்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற நோய்கள் வராமல், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று இளம் வயதினர் விரும்பினால், தினசரி உணவில் இவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
டாக்டர் ஜி. சிவராமன், சித்த மருத்துவர்,
ஆரோக்கியா சித்தா மருத்துவமனை, சென்னை044 4355 0990 / 72990 45880info@aroghyahealthcare.com

