PUBLISHED ON : டிச 26, 2021

ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அதிகமானதற்கு மிக முக்கிய காரணிகள், தொழிற்சாலை கழிவுகளால் ஏற்பட்ட காற்று மாசு, வாகன மாசு மட்டுமல்ல, நம் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றமும் தான்.
பல சுவைகளில் தயாரிக்கப்படும் சீஸ், வெண்ணெய், தக்காளி சேர்த்த பீட்சா, பர்கர், பிரட் வகைகள் என்று சொன்னால் வியப்பாக இருக்கும்; ஆனால் அது தான் நிதர்சனம். பிறந்த குழந்தை முதல் எல்லா வயதினருக்கும் ஆஸ்துமா பாதிப்பு வரும். துாசு, மாசு இவற்றால் ஏற்படும் ஒவ்வாமை சுவாசப் பாதையில் சுருக்கத்தை ஏற்படுத்தும்.
சுவாசப் பாதையில் ஏற்படும் தற்காலிக சுருக்கம் காரணமாக, போதுமான அளவு காற்று நுரையீரலுக்கு செல்ல முடியாத நிலையே ஆஸ்துமா. மூக்கின் மேல் பகுதியின் உட்புறம் உள்ள சுவாச துகள் சுருங்கி, விரியும் தன்மையிலான குழாயால் இணைக்கப்பட்டு இருக்கும்.
இந்தக் குழாய் நுரையீரலின் உட்பகுதி வரை சென்று, வேர்கள் போல நுரையீரல் முழுதும் படர்ந்திருக்கும். காற்று நுரையீரலுக்கு செல்ல முடியாத நிலையில், கடுமையான வலி, மார்பு பகுதியில் இறுக்கமான உணர்வு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். மூச்சு விடும்போது, சுவாசக் குழாய் சுருங்குவதால், ஒருவித சப்தம் வரும்.
அதே சமயம், பாதிப்பிற்கு வெளிக்காரணி தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வெரு விஷயம் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்; வீட்டு குப்பையாக இருக்கலாம். பூவின் மகரந்த துகள், செல்லப் பிராணிகளின் உரோமம், உண்ணி, சிலவகை உணவு... இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
மரபியல் காரணங்களாலும் எற்படலாம். காரணியை கண்டுபிடித்து அதை முற்றிலும் தவிர்த்து விட்டால், ஆஸ்துமாவை முற்றிலும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கலாம். முறையான சிகிச்சையால் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கலாம்.
ஆஸ்துமா கட்டுப்பாட்டில் இருந்தால், மருந்து, இன்ஹேலர் பயன்படுத்துவதை தற்காலிகமாக விட்டுவிடக் கூடாது. தொடர்ந்து மருத்துவ வழிமுறைகளை பின்பற்றும் போது, பிரச்னை தீவிரம் அடையாமல் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
ஆஸ்துமா ஏற்படுத்தும் ஒவ்வாமையை தவிர்த்து, அதனால் ஏற்படக் கூடிய எதிர்ப்பு சக்தி குறைபாடையும் சரிசெய்த பின்னும் சுவாசப் பாதையில் அதன் பாதிப்பு இருக்கும். அதனால் தொடர்ந்து மருத்துவ ஆலோசனையும், மருந்துகளும் தேவை.
டாக்டர் ஆர்.நரசிம்மன்,
ஆஸ்துமா, அலர்ஜி சிறப்பு மருத்துவர்,
அப்பல்லோ மருத்துவமனை, சென்னை
drrnarasimhan@gmail.com
