PUBLISHED ON : ஜூலை 23, 2017

ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்கள் பலவற்றில், ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே சமைக்கும் நடைமுறை இருப்பதை பார்க்க முடியும். இரவு நேரத்தில் சமைப்பதற்கு பதில், ஓட்டல் உணவை சாப்பிடுவதையோ அல்லது காலையில் செய்த உணவையே மீண்டும் சூடாக்கியோ சாப்பிடுவதும் வழக்கமாக உள்ளது. முதல் நாள் இரவு செய்த உணவை, மறுநாள் காலை சூடாக்கி உண்பதும், பல குடும்பங்களில் வழக்கமாக உள்ளது.
இவ்வாறு, ஒரு முறை சமைத்த உணவை, மீண்டும் ஒரு முறை சூடாக்குவதால் உடலுக்கு உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மீண்டும் சூடு செய்யக்கூடாத உணவுப் பொருட்களும் இருக்கின்றன. அவற்றை அறிந்து கொண்டால், பல்வேறு பிரச்னைகளை தவிர்க்கலாம்.
சிக்கன்: கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம் ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்தும்போது, அதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும்; அதையே 2வது முறை சூடு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும். எனவே, இதை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது. ஒரு முறை வறுத்த இறைச்சியை மீண்டும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்றால், சாண்ட்விச்சாகச் செய்து சாப்பிடலாம்.
கீரை: கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு கொண்டது. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும்; குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். எனவே, கீரையைச் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
முட்டை: முட்டை, அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.
காளான்: காளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை, இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.
சாப்பாடு: அரிசி நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஓர் உணவுப் பொருள். சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, புட் பாய்சனாக மாறிவிடும்.
உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும்போது சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்படிச் செய்யும்போது சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக நச்சுத் தன்மை உள்ளதாக மாறிவிடும்; வாந்தி, குமட்டல், உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும்.
சமையல் எண்ணெய்: எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். இது புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமையும்.

