PUBLISHED ON : மார் 13, 2021

'கடந்த, 2006ல், அமெரிக்காவின், மிக்சிகன் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த ஆய்வு இது. கருப்பப்பையில் தோன்றும் கேன்சர் திசுவை, கண்ணாடி, 'ஸ்லைட்' மீது வைத்து, அதன் மேல் இஞ்சி சாறு சில துளிகளை விட்டதில், சில நிமிடங்களில் பொங்கி கருகிவிட்டது. அதன் பின், மூன்று நாட்கள் அப்படியே வைத்திருந்தனர். புதிதாக கேன்சர் திசு வளராமல், முற்றிலும் அழிந்து விட்டது.
'ஆதி மருந்து'
அதன்பின், பல தொடர் ஆய்வுகளை நடத்தி, ஆய்வு முடிவுகளை, அமெரிக்கன் கேன்சர் சொசைட்டிக்கு சமர்ப்பித்தார், இந்த ஆய்வை நடத்திய ரெபேக்கா என்ற மருத்துவ விஞ்ஞானி. அதன் பின், சர்வதேச அளவில் இஞ்சி குறித்த ஆராய்ச்சி அதிக அளவில் நடக்கிறது.
சித்த மருத்துவத்தில், 'ஆதி மருந்து' என்று குறிப்பிடப்படும் மருந்துகளில் இஞ்சி முதல் மருந்தாகும். அந்தக் காலத்தில் டீ, காபி கிடையாது. விரல் அளவுள்ள இஞ்சியை தோல் சீவி, இடித்து, வெந்நீரில் போட்டுக் காய்ச்சி, வடிகட்டி, ஆறிய பின், காய்ச்சிய பசும்பால் அரை டம்ளர் கலந்து, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து பருகுவர்.
'மசாஜ்'
இது, அஜீரணம், வயிற்று வலி, வாயு தொல்லை, நுரையீரலில் சளி, தொண்டை கமறல், வயிறு இரைச்சல், உப்புசம், கண் பார்வை மங்கல், மூட்டு வலி, உடம்பு வலி, வாந்தி, குமட்டல் போன்ற கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கும்.
இஞ்சியை கோடைக்காலத்தில் மோருடனும், குளிர்காலத்தில் பால், தேனுடன் கலந்து குடிக்கலாம். சீன மருத்துவத்தில், தலைமுடி நன்கு வளர்வதற்கு, இஞ்சி கஷாயத்தை தலைமுடி வேர்களுக்கு தேய்த்து, 'மசாஜ்' செய்வர்.
நீரிழிவு நோயாளிகளுக்கு கால் பாதங்களில் எரிச்சல் வரும். காலை, மாலை இஞ்சி கஷாயம் குடிப்பதால், இதை கட்டுப்படுத்தலாம். தேனில் ஊறிய இஞ்சி, இஞ்சி முறப்பா, இஞ்சி துவையல், இஞ்சி ஊறுகாய், தினசரி சமையலில் என்று பல வழிகளில், தென் மாநில சமையலில் இஞ்சி பயன்படுகிறது.
சீனாவில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் கஷாயத்தில் சேர்க்கப்பட்ட மூலிகைகளில் இஞ்சியும் ஒன்று.
'மூலிகைமணி' டாக்டர் க.வேங்கடேசன்,
சித்த மருத்துவர், சென்னை
73388 23784

