ஹலோ... நான் பேய் பேசுறேன்! உளவியல் ஆலோசகரின் அன்பான எச்சரிக்கை
ஹலோ... நான் பேய் பேசுறேன்! உளவியல் ஆலோசகரின் அன்பான எச்சரிக்கை
PUBLISHED ON : நவ 28, 2021

பெருந்தொற்று காலத்தில், குழந்தைகளின் 'ஸ்கிரீன் டைம்' அதிகரித்துள்ளது. இக்காலகட்டத்தில், யூடியூப் உள்ளிட்ட தளங்களில் வீடியோ பார்ப்பது அதிகரித்தது. குறிப்பாக, பேய்க்கதைகளுக்கான பார்வை எண்ணிக்கை லட்சத்தை தாண்டியிருக்கிறது.
ஏழுகிணறு பேய், சூனியக்காரி பேய், மணப்பெண் பேய் என விதவிதமான பெயர்களில் பேய்க்கதைகள் யூடியூப் சேனல்களில் காணக்கிடைக்கின்றன. குறைந்தது, 10 லட்சத்தில் இருந்து, 80 லட்சம் பார்வைகளைக் கடந்திருக்கின்றன இந்த வீடியோக்கள்.
இவற்றில் வரும் பேய்கள் ஏறக்குறைய அனைத்துமே பெண் பேய்களாக இருக்கின்றன. வீடுகளில் புறக்கணிப்பு, தொல்லை தாங்காமல் நீர் நிலைகளில் விழுந்து இறந்தவையாக இருக்கின்றன. இதுபோன்ற வீடியோக்களைப் பார்க்கும் குழந்தைகள், தவறான முடிவுகளை நாட வாய்ப்பிருக்கிறதா, எந்த அளவுக்கு இவை பாதிப்பை ஏற்படுத்தும் என, கோவை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் மற்றும் குழந்தைகள், வளர் இளம்பருவ மனநல ஆலோசகருமான டாக்டர் தினேஷ் பெரியசாமியிடம் பேசினோம்.
அவர் கூறியதாவது:
பொதுவாக, அறிவியலுக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யம், பேய் உள்ளிட்ட விஷயங்கள் குழந்தைகளிடம் ஒருவித பயம், பதற்ற உணர்வை உருவாக்கும். அண்டை வீடுகளில் நடக்கும் மரணங்களால் உருவாகும் பேய், நம்மை ஏதாவது செய்து விடுமோ என்ற பதற்றம் உருவாகும்.
யூடியூப் வீடியோ போல், தற்கொலை செய்து, பழிவாங்கலாம் என, நினைப்பதற்கான வாய்ப்பு குறைவு. இறப்பு என்பது, அச்சம் தரும் விஷயம். குழந்தைகள் மரணத்தில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே விரும்புவர்.
பாதிப்புகள்
இயல்பாக நடக்கும் விஷயங்களைக் கூட, பேயால் நடந்திருக்குமோ என, குழப்பிக் கொள்ள வாய்ப்புண்டு. மாயத்தோற்ற (இல்யூசன்) பிரச்னைகளுக்கு ஆட்படலாம். அங்கு பேய் இருக்கிறது. யாரோ உட்கார்ந்திருக்கிறார்கள் எனப் பேசுவார்கள். அறிவியல் ரீதியாக, யோசிக்கும் மனநிலை இருக்காது.
எல்லாவற்றையும சந்தேகிப்பார்கள். பென்சில் பாக்ஸ் காணாமல் போவது போன்ற சாதாரண விஷயங்களுக்கு கூட, பேய் எடுத்திருக்கும் என சந்தேகிப்பார்கள். விளையாட்டுகளின்போது, பில்லி சூனியம் வைப்பதுபோல் திரில்லுக்காக விளையாடுவார்கள். இதற்கு சில குழந்தைகள் பயப்படுவர். இதைப் பயன்படுத்தி மற்றவர்கள் பிளாக்மெயில் செய்ய வாய்ப்புண்டு.
ஏன் பார்க்கிறார்கள்?
இந்த வீடியோ அவர்களுக்கு எளிதில் கிடைக்கும் ஒன்றாக இருக்கிறது. மற்ற குழந்தைகள் பார்க்கிறார்கள், பேசுகிறார்கள் என்பதற்காகவும், திரில்லுக்காக, தைரியசாலியாகக் காட்டிக் கொள்ள பார்ப்பார்கள். சிலருக்கு ஆட்டோமொபைல், விண்வெளி, ரோபோட்டிக்ஸில் விருப்பம் இருப்பதுபோல், இவர்கள் இந்த பேய்க்கதைகளில் அதீத ஆர்வம் காட்ட ஆரம்பித்து விடுவர்.
பெற்றோருக்கு இதுசார்ந்த சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை இருந்தால், அது குழந்தைகளையும் பாதிக்கும். வீடுகளில் சிலர், பில்லி சூனியம் எடுப்பது, பூஜைகளைச் செய்வது, மற்றவர்கள் சூனியம் வைத்து விட்டார்கள் என பேசிக் கொண்டிருப்பது போன்றவற்றைப் பார்க்கும் குழந்தைகள் வீடியோவோடு தொடர்புபடுத்தி உண்மை என, நம்புவர்.
என்ன செய்யலாம்?
குழந்தைகள் என்ன பார்க்க வேண்டும் என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும். அதற்கு வயது மட்டுமே ஓர் அளவுகோல் அல்ல. குழந்தைகளின் சென்சிடிவிடியையும் சார்ந்தது. 10 வயது குழந்தை ஒன்றைப் பார்த்து பயப்படும்; அதே வயதிலுள்ள மற்றொரு குழந்தை பயப்படாமல் இருக்கலாம்.
எனவே, நம் குழந்தை எதைப் புரிந்துகொள்ளும் என்பதை அறிந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும். குழந்தைகள் எதை வேண்டுமானாலும் பார்த்துவிட்டுப் போகட்டும். நமக்கு தொந்தரவின்றி இருந்தால் சரி என, விட்டுவிடக் கூடாது.
ஒரு வீடியோவை எந்த வயதினர் பார்க்கலாம் என்ற பொதுவான வயது வரையறை நம் குழந்தைக்குப் பொருந்தாமல் இருக்கலாம். அதை கவனித்து, அதுபோன்றவற்றைப் பார்க்காமல் தடை செய்வது, பாஸ்வேர்டு செட் செய்வது போன்றவற்றை செய்யலாம்.
தனி அறையில் விட்டுவிடாமல், நம் கண் பார்வையில் இருக்க வேண்டும். அவர்களுக்கு புரிதல் வரும் வரை கண்காணிப்பது அவசியம். குழந்தைகள் அதிகம் பதற்றப்படுகின்றனர், நெஞ்சு படபடப்பாக இருக்கிறது எனக் கூறும்போது, நிச்சயம் உரிய நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்; தயங்கக்கூடாது.
எதையும் குழந்தைகள் நம்மிடம் விவாதிக்கும் அளவுக்கு வீட்டுச் சூழலைப் பழக்க வேண்டும். பேய் பற்றி நம்மிடம் விவாதிக்க மாட்டார்கள். தனக்குள்ளேயே வைத்துக் கொண்டு, பயப்பட நேரிடலாம். எனவே, எதையும் விவாதிக்கும், கேள்வி கேட்கும் திறனை அவர்களிடம் வளர்க்க வேண்டும். காரண காரியத்தை ஆராய அவர்களுக்கு பழக்க வேண்டும்.
அப்போது, இதுபோன்ற பேய், அமானுஷ்யங்களை நம்ப மாட்டார்கள்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
