தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மூலிகை மருத்துவம்: மூலிகை பூமராங்

மூலிகை மருத்துவம்: மூலிகை பூமராங்

மூலிகை மருத்துவம்: மூலிகை பூமராங்


PUBLISHED ON : நவ 20, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

பூமராங் என்ற கருவி எங்கிருந்து கிளம்பியதோ அதே இடத்திற்கு, அதே வேகத்துடன் திரும்பி வரும் சிறப்புடையதாகும். அதுபோலத்தான் நமது நாட்டிலுள்ள பல மூலிகைகள் வெளிநாடுகளுக்கு சென்று புதிய மருந்துகளாக மாற்றப்பட்டு, நமக்கே திரும்பி வருகின்றன. இந்தியாவிலுள்ள பல மூலிகைகள் ஆராய்ச்சி செய்யப்பட்டு, வெளிநாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் மருந்துகளாக மாற்றப்பட்டு, நமக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவின் மூலிகை ஏற்றுமதி சந்தை அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் இந்திய மூலிகைகளின் தேவை அதிகரிப்பதால் மலை மற்றும் வனப் பகுதிகளில் காணப்படும் மூலிகைகள் இயற்கை வளம் குன்றாமல் சேகரிக்கப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உயிருக்கு ஆபத்தாக கருதப்படும் நோய்களில் புற்றுநோய் முதலிடத்தை வகிக்கிறது. என்ன, ஏது என்று கண்டறியும் முன்னரே உடலுக்குள் பல்கி, பெருகி, வேரூன்றி, பரவி, அங்கங்களை பாதித்து, உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் புற்றுநோய்க்கு உலகளவில் மூலிகை மருந்துகளின் தேடல் அதிகரித்து வருகிறது. ஆரம்பகட்ட புற்றுநோயை எளிதில் குணப்படுத்த முடிவதால் ரத்தப் புற்றுநோய், மார்பு புற்றுநோய் மற்றும் ஹாட்கின்ஸ் புற்றுநோய் கட்டிகளுக்கு மூலிகைகளின் பங்கு சிறப்புமிக்கதாகும். இவை செல் பிரிதல் மற்றும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, ஆபத்தான புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைத்து, நோய் எதிர்ப்பு

சக்தியை அதிகரித்து, புற்று நோயின் தீவிரத்தை குறைக்கின்றன. மேலும் புற்றுநோய் சிகிச்சையின்பொழுது ஏற்படும் மனபாதிப்பை நீக்கி, மன அமைதியை உண்டாக்குகின்றன. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் பலவிதமான நவீன மருத்துவமுறைகள் வந்துவிட்டபோதிலும், மருத்துவவசதி, விழிப்புணர்ச்சியின்மை மற்றும் பொருளாதார வசதியின்மையால் பெரும்பாலான புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய முடிவதில்லை. நம்மைச் சுற்றியுள்ள வேதிப் பொருட்களின் ஆதிக்கம், கதிர்வீச்சு பாதிப்புகள், ரசாயன உரங்கள், பல்வேறு விதமான பூச்சிக்கொல்லிகள், புற்றுநோயை தூண்டும் வேதி மருந்துகள், பரம்பரை போன்றவற்றால் தோன்றும் பல்வேறு விதமான புற்றுநோய்களை கட்டுப்படுத்த நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதுடன் இயற்கை சூழலையும் பாதுகாக்க வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பல்வேறு விதமான புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றால் தோன்றும் நுரையீரல், கல்லீரல் புற்றுநோய்களை நமது பழக்க வழக்கத்தின் மூலம் நமக்கு வராமல் காத்துக்கொள்ள முடியும்.

ஆஸ்பிரின், சாலிசிலிக் அமிலம், அட்ரோபின், பெத்தடின் போன்ற பல உயிர்காக்கும் மருந்துகளும் மூலிகைகளின் பரிணாம வளர்ச்சிதான். அதுபோல்தான் புற்றுநோய்க்காக உலகளவில் சிறப்பாக பயன்படும் மூலிகை நித்தியகல்யாணி. கத்தரான்தாஸ் ரோசியஸ் என்ற தாவரவியல் பெயர்கொண்ட அப்போசினேசியே குடும்பத்தைச் சார்ந்த சிறுசெடிகளின் வேர் மற்றும் இலைகளிலுள்ள வின்கிரிஸ்டின், வின்பிராஸ்டின் போன்ற வேதிச்சத்துக்கள் புற்றுநோய் செல்களை அழிக்கின்றன. ரத்தத்தில் கொழுப்பு செல்கள் படிவதை தடுத்து, ரத்த அழுத்தத்தை குறைக்கின்றன. குடல் மற்றும் மலவாய் புற்றுநோய் வராமல் தடுத்து, குடலில் தோன்றும் ரத்தக்கசிவை நிறுத்துகின்றன.

நித்தியகல்யாணி வேரை நன்கு அலசி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, உலர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கிராம் அளவு எடுத்து 200 மில்லி நீரில் 3 மணி நேரம் ஊறவைத்து 3 முதல் 7 நாட்கள் குடித்துவர குடலில் தோன்றும் ரத்தக்கசிவு நீங்கும். இந்த நீரைக்கொண்டு ஆறாத புண்களையும் கழுவி வரலாம். ஸ்டியடோரியா என்னும் ஒரு வகை கழிச்சலில் நமது உடலின் கொழுப்பானது மலத்தில் வெளியேறுகிறது. நாம் உண்ணும் உணவிலுள்ள கொழுப்பானது, என்சைம்களால் கிரகிக்க முடியாமல்

மலத்தோடு வெளியேறும் இந்த கழிச்சலை நிணக்கழிச்சல் அல்லது ஊன் கழிச்சல் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. வேகாத பொருட்கள், செரிக்கக் கடினமான உணவுகள், சுகாதாரமற்ற தண்ணீர் ஆகியவற்றால் செரிமான என்சைம்கள், பித்தநீர் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு இந்நோய் உண்டாவதாகவும், இவற்றில் 11 வகைகள் உள்ளதாகவும் சித்தமருத்துவ நூல்கள் குறிப்பிட்டுள்ளன. பித்தநீர் பாதை மற்றும் கணையப்பாதையில் அடைப்பு ஏற்படுவதாலும், சில வகையான கொழுப்பை கரைக்கும் மருந்துகளினாலும், சர்க்கரை நோயின் தீவிர நிலையிலும் உணவிலுள்ள கொழுப்பானது கிரகிக்கப்படாமல் எண்ணெய் போன்று, மலத்துடனோ அல்லது தனியாகவோ மலவாய் வழியாக வெளியேறுவதாக நவீன அறிவியல் குறிப்பிடுகிறது. இதற்கு முத்து, பவளம், பலகரை போன்ற மருந்துகளை

வழங்கலாம் என சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆரம்ப நிலையில் இந்த நோயை கண்டறியாவிட்டால் உடல் இளைத்து, மிகவும் பலஹீனம் தோன்றிவிடும். ஆகவே மலத்துடன் கொழுப்பு சென்றாலோ அல்லது எண்ணெய் போன்ற மலம் வெளியேறினாலோ முறையான மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்,

மதுரை. 98421-67567.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us