மூலிகை மருத்துவம்: ஆரோக்கியமாக வாழ ஆசையா - காட்டு இலந்தை
மூலிகை மருத்துவம்: ஆரோக்கியமாக வாழ ஆசையா - காட்டு இலந்தை
PUBLISHED ON : அக் 23, 2011
ரோக்கியமாக வாழவேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு. சித்தர்கள்கூட இறைப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள நோயற்ற பெருவாழ்வு வேண்டுமென வேண்டினர். அழகிய வழு வழுப்பான, வறட்சியற்ற சருமம், ஐம்புலன்களும் கூர்மையாக இருத்தல், எப்பொழுதும் சுறுசுறுப்புடன் காணப்படுதல், பஞ்சபூதங்களால் தோன்றும் சுற்றுச்சூழல் ஒவ்வாமையை தடுத்தல், சுகமான சுவாசம், சீரான செரிமானம், நாகரீக நோய்கள் தாக்காமல் இருத்தல், மனம் மகிழ்ச்சியாக இருத்தல், அமைதியான தூக்கம் ஆகிய அனைத்துமே ஆரோக்கியமான வாழ்வின் அறிகுறிகளாகும்.
முதுமையில் தோன்றும் தீவிர நோய்களை நம்மால் தடுக்க இயலாவிட்டாலும், வாழும் வரையில் நோயின்றி வாழ்வதே ஆரோக்கிய வாழ்வின் ரகசியமாகும். பொது சுகாதாரத்தில் தொற்று நோய்களைப் பற்றிய விழிப்புணர்ச்சியும் தடுப்பு மருந்தும் வலியுறுத்தப்படுவது ஆரோக்கிய வாழ்வினை அனைவரும் அடைய வேண்டுமென்ற குறிக்கோளினால்தான். நாம் இன்று உபயோகப்படுத்தும் காய்கறிகள், பழங்கள், உணவு தானியங்கள் ஆகிய அனைத்திலுமே வேதிப்பொருட்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டன. இதனால் ஒவ்வாமை, புற்றுநோய், ரத்தக்குறைவு, மலட்டுத்தன்மை என பல தொல்லைகள் உண்டாகின்றன. உடலும், மனமும் அமைதியடைய சுத்தமான சுற்றுப்புறமும் ஆரோக்கியமான உணவும் அவசியமாகும்.
பெரும்பாலான மூலிகைகள் அமைதியான சுற்றுப்புறத்தையும் சுகாதாரமான சுற்றுச்சூழலையும்தான் விரும்புகின்றன. நகரமாக்கலின் விளைவாக பல்வேறு வகையான மூலிகை இனங்கள் அழிந்துவிட்டன. தற்சமயம் பெரும்பாலான மூலிகைகளை பரந்த காடுகளிலும், மலைகளிலும் மட்டும்தான் காண முடிகிறது. ஆகையால்தான் நகரப்பகுதிகளில் கிடைக்கும் மூலிகைகளைவிட காட்டில் கிடைக்கும் மூலிகைகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன. பல்வேறு விதமான நோய்களை தீர்க்கும் இந்த மூலிகைகள் இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமாக காடுகளில் அடையாளம் காணமுடியாமல் பரவிக்கிடக்கினறன. நகரப்பகுதிகளில் தின்பண்டமாக நாம் உட் கொள்ளும் இலந்தைப்பழத்தின் மருத்துவகுணம் அளவிடற்கரியது. அதைப்போல் காட்டுப்பகுதியில் வளரும் காட்டு இலந்தை மரங்களில் சாதாரண இலந்தையைவிட ஏராளமான மருத்துவ சத்துக்கள் நிறைந்துள்ளன. ஜிஜுபஸ் சட்டைவா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரேம்னேசியே குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் பழங்களே காட்டு இலந்தை என்றும், சீமை இலந்தை என்றம் அழைக்கப்படுகின்றன. சீனாவின் அடர்ந்த காட்டுப்பகுதியிலிருந்து இந்தியாவிற்கு இந்த மரங்கள் கொண்டுவரப்பட்டன.
இந்த பழங்களிலுள்ள ஜிஜுவாய்டுகள், ஜிஜுவோசைடுகள், ரோசியோசைடுகள் போன்ற பிளேவனாய்டுகள், வைட்டமின் சி, கௌமாரியோலைட்டுகள் ஆகியன உடலில் ஏற்படும் ஒவ்வாமையை நீக்கி, மூளை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, தூக்கத்தையும் மன அமைதியையும் தருவதுடன், உணவு, சிறுநீர்ப்பாதை மற்றும் சுவாசப் பாதையில் தோன்றும் வறட்சியை நீக்கி, புண்களை ஆற்றி, உடலுக்கு குளிர்ச்சியையும் தருகின்றன.
பழுத்த காட்டு இலந்தைப்பழங்களை கையால் பிசைந்து, கொட்டையை நீக்கி, அத்துடன் 8 பங்கு நீர்விட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி, தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொதிக்கவைத்து, பாகு பதத்தில் மீண்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை தினமும் இரவு படுக்கும்பொழுது 5 முதல் 10 மில்லியளவு சாப்பிட்டுவர உடல் எரிச்சல் தணிந்து, ரத்தஅழுத்தம் சீராகும். சுறுசுறுப்பு உண்டாகும். அடிக்கடி இந்த காட்டு இலந்தை சர்பத்தை குடித்துவர ஆரோக்கியம் மேம்படும். யுனானி மருந்துக்கடைகளில் கிடைக்கும் சர்பத்-ஏ-உன்னாப் என்ற யுனானி மருந்தில் சீமை இலந்தைப்பழம் சேர்க்கப்படுகிறது. இதனை 15 முதல் 30 மில்லியளவு தினமும் 1 அல்லது 2 வேளை சாப்பிட்டுவர உணவுப்பாதை வறட்சி நீங்கி, உடல் குளிர்ச்சியடையும்.
பாக்ஸ்: வளர்ந்துவரும் நாகரீகத்தின் அடையாளமாக பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு வருகிறோம். மேற்கத்திய கலாச்சாரத்தின் பாதிப்பினால் இந்திய மக்களின் ஆரோக்கியம் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி உடற்பருமன், ரத்தக்கொதிப்பு, இதயநோய், சர்க்கரைநோய், நுரையீரல் நோய், கல்லீரல் நோய், அல்சிமர் நோய், சிறுநீரக நோய், உணவு சார்ந்த நோய்கள், சுற்றுச்சூழல் பாதிப்பினால் தோன்றும் நோய்கள், சுகாதார குறைவினால் தோன்றும் நோய்கள் ஆகியன நாகரீக நோய்களாக பட்டியலிடப்பட்டுள்ளன. லைப் ஸ்டைல் டிசிசஸ் என்று சொல்லப்படும் இந்த நாகரீக நோயானது நமது கலாச்சாரத்தையும்,
வாழ்க்கை நடைமுறையையும், பாரம்பரிய அடையாளத்தையும் மறந்ததால் உண்டானது என்றே உறுதிப்பட சொல்லலாம். சித்த மருத்துவத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து நிலங்களில் வாழும் மக்களின் தன்மைக்கேற்ப அங்கே உணவு வகைகளும், நிலம் சார்ந்த தொழிலும் அமைகிறது என்றும், இவை மாறுபடும்போது நோய்கள் உண்டாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திணை நோய்களாக நிலம் மற்றும் வாழ்க்கைமுறை சார்ந்த நோய்கள் சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. கலாச்சார மாற்றம் மற்றும் நாகரீக மோகம் பிற்காலத்தில் பல்வேறு வகைகளில் நோய்களை உண்டாக்கி, மனித ஆயுளை குறைக்குமென சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளனர்.
எனது குழந்தைக்கு அடிக்கடி சளி பிடிக்கிறது. எப்படி கட்டுப்படுத்தலாம்?
தினமும் குழந்தை அருந்தும் நீரில் 3 அல்லது 4 கருந்துளசி இலைகளை ஊறவைத்து அவ்வப்போது கொடுத்துவரலாம். மார்புச்சளி அதிகமாக இருக்கும்பொழுது கற்பூராதி தைலம் அல்லது துளசித் தைலத்தை மார்பு மற்றும் முதுகில் தடவி வரலாம். உரை மாத்திரை என்னும் சித்தமருந்தை தினமும் 1 அல்லது 2 கொடுத்துவரலாம்.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை. 98421 67567.
