தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மூலிகை மருத்துவம்: மூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி

மூலிகை மருத்துவம்: மூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி

மூலிகை மருத்துவம்: மூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி


PUBLISHED ON : செப் 25, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 25, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூலிகை மருத்துவம்: மூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி - காட்டு இலவங்கப்பட்டை



கழிப்பறை வாடை, நாப்தலின், பினாயில், டாய்லெட் சுத்தம் செய்யும் அமிலம், சோடா உப்பு, அரிசி தவிடு, மழையில் தோன்றும் மண் வாசனை போன்ற பல விஷயங்கள் மூக்கின் ஒவ்வாமைக்கு காரணமாக அமைகின்றன. மூக்கு என்பது சுவாசத்தை சீராக விடுவதற்கு மட்டுமல்ல... மணத்தையும் முகர்ந்து உணர்ந்து கொள்ளத்தான். மோப்ப நரம்பானது மணத்தை மூளைக்கு உணர்த்துகிறது. மூளையின் கட்டுப்பாட்டை மீறி, கபால அறைகளின் சதைப்பகுதிகள் தன்னிச்சையாக இயங்குவதே மூக்கடைப்பாகும். மூக்கின் உட்புறம் இரண்டு பக்க கபால அறைகளின் வாசலில் பாதுகாவலன் போல் அமைந்திருக்கும் சதைப்பகுதியே, நமது சுவாசத்தின் செக்யூரிட்டி. நமது சுவாச மண்டலத்தின் பாதையில் அமைந்துள்ள மோப்ப நரம்புகளை உறுத்தும்படியான குளிர்காற்று, நறுமணம், துர்நாற்றம், புகை, தூசி, பஞ்சு, பூ மகரந்தங்கள், ரோமக்கால்கள், அமில நாற்றம் ஆகியன மூக்கின் உள்ளே நுழைய எத்தனிக்கும்போது, இந்த கபால அறைகள் அவற்றை இறுக்கிப் பிடித்து வெளித்தள்ளுகின்றன. இந்த முயற்சியின் விளைவாக நாம் தும்மவோ, இருமவோ செய்கிறோம் அல்லது மூக்கை வேகமாக சிந்தியோ அல்லது செருமியோ, ஒவ்வாத பொருளையும் மணத்தையும் வெளித்தள்ளிவிடுகிறோம்.



அன்றாடம் நாம் பயன்படுத்தும் முகப்பவுடர், சோப், சென்ட், கூந்தல் தைலம், முக அழகு கிரீம், ஊதுபத்தி, சூடம், சாம்பிராணி, தீக்குச்சி, சமையல் கேஸ், புகை, தாளித்த மணம், ஒட்டடை, ஈரத்துணி, நாய், பூனை, ஆடு, மாடு ரோமங்கள், கழிப்பறை வாடை, நாப்தலின், பினாயில், டாய்லெட் சுத்தம் செய்யும் அமிலம், சோடா உப்பு, அரிசி தவிடு, மழையில் தோன்றும் மண் வாசனை போன்ற பல விஷயங்கள் மூக்கின் ஒவ்வாமைக்கு காரணமாக அமைகின்றன. தொடர் ஒவ்வாமை ஏற்படுவதால் நமக்கு பாதுகாவலனாக விளங்கும் சைனஸ் அறைகள், சுவாசப்பாதையையே ஒட்டுமொத்தமாக அடைத்துவிடுகின்றன. நாம் அறிந்தும் அறியாமலும் உணர்ந்துகொள்ளும் ஒவ்வாமையால் நமது கட்டுப்பாட்டுக்கு அடங்காத சைனஸ் அறைகள் மூக்குப்பாதையையும், தொண்டைப் பாதையையும் மூளையையும், கபால அறையையும் நோக்கி வளர்ந்து மூடிவிடுகின்றன.



அடிக்கடி தோன்றும் மூக்கடைப்பினால், ஒவ்வாத பொருள்கள் உள்ளே நுழைந்தாலும், நம்மால் அதை அறிந்து தவிர்க்க முடியாததால் ஒவ்வாமையில் சளி, ஆஸ்துமா ஆகியன ஏற்படுகின்றன. ஆரம்பத்தில் ஒவ்வாத பொருட்களால் ஏற்படும் மூக்கடைப்பு, நாட்கள் செல்லச்செல்ல நுண்கிருமிகள் தங்கி வளர ஏதுவாக மாறிவிடுவதால் தீவிர நிலையில் அறுவை சிகிச்சைக்கு அவசியம் ஏற்படுகிறது. மூக்கடைப்பு உள்ளவர்கள், தங்களுக்கு ஒவ்வாத பொருள்களின் அருகாமையை தவிர்க்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மிளகு, மஞ்சள், சிறிய வெங்காயம், பூண்டு, சிற்றரத்தை, இஞ்சி, சுக்கு ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி, உப்பு கலந்த வெந்நீரில் வாய் கொப்புளித்தல் ஆகியவை மூலம் மூக்கடைப்பு வராமல் தடுத்துக்கொள்ளலாம். குளிர்ந்த நீர், ஐஸ் கிரீம், கிரீம் பிஸ்கட், சாக்லெட், பாஸ்ட்புட் ஆகியவற்றை தவிர்க்கவும்.

ஒவ்வாமையினால் தோன்றும் பல்வேறு வகையான மூக்கடைப்பு தொல்லைகளை நீக்கும் அற்புத மூலிகை காட்டு லவங்கப்பட்டை.சின்னமோமம் மலபாட்ரம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட லாரேசியே குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் பட்டைகளே, காட்டு லவங்கப்பட்டை என்றும், பெரிய லவங்கப்பட்டை என்றும் அழைக்கப்படுகிறது.

இவை உணவிற்கும், மருந்திற்கும் பெருமளவு பயன்படுகின்றன.



இதன் பட்டைகளிலுள்ள சின்னமால்டிகைடு, யூஜினால் போன்ற ஆவியாகக்கூடிய எண்ணெய் வகைகள் சதை வளர்ச்சியை கட்டுப்படுத்தி, ஒவ்வாமையை நீக்கி, சுவாசத்தை சீர் செய்கின்றன. இவற்றிலுள்ள டைடெர்பின்கள் ஆன்டிஹிஸ்டமைன்களாக செயல்பட்டு, அலர்ஜியை தடுக்கின்றன.காட்டு லவங்கப்பட்டை, தாளிசப்பத்திரி, சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், சீரகம், ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து, சுத்தம் செய்து, இடித்து, பொடித்து, சலித்து 1 முதல் 2 கிராம் அளவு தேன் அல்லது பாலுடன் கலந்து தினமும் 2 முறை சாப்பிட்டு வரலாம். அரை கிராம் காட்டு லவங்கப்பட்டையை பொடித்து, சலித்து தேனுடன் குழப்பி, தினமும் ஒரு வேளை உணவுக்கு பின் சாப்பிட கபம் நன்கு வெளியேறும். மூக்கடைப்பு நீங்கும்.



பிரண்டையின் மருத்துவ குணங்கள் என்ன? எல்லோரும் சாப்பிடலாமா?

பிரண்டையை மேல்தோல் கணு நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, புளித்த மோரில் ஒருநாள் முழுவதும் ஊறவைத்து, மறுநாள் மைய இடித்து, வறுத்த மிளகு, சீரகம், எள், ஓமம், மல்லி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து, பட்டாணியளவு மாத்திரைகளாகவோ அல்லது உலர்த்தி, பொடியாகவோ எடுத்துக்கொள்ள வேண்டும். 1 முதல் 2 மாத்திரைகள் அல்லது 1 கிராம் பொடி தினமும் ஒரு வேளை சாப்பிட்டுவர பசி உண்டாகும். உணவு நன்கு செரிக்கும். கல்லீரல் பலப்படும். வயிற்றில் தங்கிய காற்று வெளியேறும்.



-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை. 98421 67567.

jeyavenkateshdr@yahoo.com



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us