PUBLISHED ON : அக் 18, 2015

குழந்தைகளுக்கான மலச்சிக்கலை, உடனே கவனிப்பது நல்லது. இல்லையெனில், வயிற்று வலியால் அலற ஆரம்பித்து விடுவார்கள். மலச்சிக்கலுக்கு தீர்வு காண, எளிய மருத்துவ குறிப்புகள் இதோ:
பசலைக் கீரையை எடுத்து, பொடிப் பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன், தினமும் கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு, தேங்காயை வில்லைகளாகச் செய்து, கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலை விட, அதிகச் சத்துக்கள் தேங்காய்ப்பாலில் நிறைந்துள்ளன. சிறு குழந்தைகள் அருகில் இருக்கும் போது, வீட்டை சுத்தப்படுத்தக் கூடாது. ஏனெனில் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கக் கூடும்.
வீட்டில், சின்னக்குழந்தைகள் இருந்தால், அடிக்கடி வாந்தி அல்லது சிறுநீர் இருப்பது வழக்கம். ஒரு சிறிய பாட்டிலில் டெட்டால் அல்லது பினாயிலைக் கலந்து வைத்து, அதன் மூடியில் 4, 5 துவாரங்கள் போட்டு, தேவைப்படும்போது அப்படியே தெளித்துத்
துடைத்தால், வீட்டில் வாசனை மணக்கும்.
சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு, இரவு நேரங்களில் சிறிய குழந்தைகளுடன் செல்லும்போது, உணவு எடுத்துச்சென்று, குழந்தைகளுக்குக் கொடுத்துவிடலாம். இதனால், குழந்தைகள் சாப்பிடாமல் உறங்கி விடுவதைத் தவிர்க்க முடியும். குழந்தைகளுக்கு சாப்ட் டிரிங்க்ஸ் கொடுக்காதீர்கள். அதிலுள்ள பாஸ்பேட், கால்சியம் சத்தை, உடல் கிரகித்துக் கொள்ளும், திறனைக் குறைக்கிறது.
குழந்தை வளர்ப்பான் எனப்படும் வசம்பு ஒன்றை, குழந்தையின் தலைமாட்டில் வைத்துவிட்டால், எறும்பு, கொசு மற்றும் பிற பூச்சிகள் தொந்தரவு செய்யாது. படுக்கையை சுற்றிலும் ஐந்தாறு புதினா இலைகளை கசக்கிப் போட்டால் ஈ தொல்லை இருக்காது. பாலில், தேன் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமையும்.
குழந்தைகளுக்கு இரவு, பேரீச்சம்பழம் கொடுத்து, பால் அல்லது தண்ணீர் கொடுத்தால், அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும். குழந்தையின் கண்கள் நடுவே, வெள்ளை நிறப் புள்ளியோ அல்லது பூனையின் கண்கள் இரவில் ஒளி விடுவதுபோல், ஒருவித ஒளியோ தோன்றினால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
குழந்தைகளுக்கு நகம் வெட்டுவதற்கு முன், சோப்பினால் கைகளைச் சுத்தம் செய்த பின்னர், நகம் வெட்டுங்கள். எளிதாகவும், சுத்தமாகவும் நகம் வெட்ட முடியும். குழந்தை அழும்போது, காதுப் பக்கம் கையைக் கொண்டுபோய் வைத்துக்கொண்டால், அது காது வலியாக இருக்கலாம். மருத்துவரை அணுகுவது நல்லது.
குழந்தைகளுக்கு காதில் சீழ் பிடித்தால், உடனே கவனியுங்கள். பேசாமல் விட்டுவிட்டால் சீழ், மூளைக்குச் சென்று, மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.

