PUBLISHED ON : நவ 25, 2015

உடல் இயக்கத்தில் எலும்பு, நரம்பு, ஜவ்வு ஆகிய மூன்றுக்கும்,  முக்கியப்  பங்கு உண்டு. இதில், பிரச்னை வருவதுதான், உடல்  நோயாகிறது. ஜவ்வு மற்றும்  நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், முதுகு வலியை  உருவாக்கும். 
அளவுக்கு அதிகமான எடையை குனிந்து  தூக்குவது, அதிக தூரம் பயணிப்பது,  உட்கார்ந்தபடியே  பல மணிநேரம் பணியாற்றுவது போன்ற காரணங்களால், உடலின் மைய  நரம்பு மண்டல பகுதியான,  முதுகுப் பகுதியிலுள்ள, 33 எலும்புகளிலுள்ள,  'டிஸ்க்' என்ற தட்டு  பாதிக்கப்பட்டு, பெரும்பாலும்,  முதுகு வலி வருகிறது. இந்த அமைப்பு சேதமடைந்தோ  அல்லது வீங்கியோ, அதன் இருப்பிடத்தை விட்டு வெளியே  வந்துவிடும். இதையே, 'டிஸ்க்  பல்ஜ்' என்பர். அதனால் உடல் சார்ந்த உணர்வுகள்  தெரியாமல் மரத்துப் போகின்றன. 
நரம்பு பிரச்னை மாதிரியான எலும்பு  பிரச்னை தான் இது. இந்த பாதிப்பு உள்ளதா  என்பதை, 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன்'  பரிசோதனை செய்து, தட்டு, எவ்வளவு  சேதமடைந்துள்ளது  என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு திறந்த  நிலை அறுவை  சிகிச்சை உள்ளது. முதுகுப் பகுதியை திறந்து, தோலை நீக்கி,  தசைகளை  ஒதுக்கி, எலும்பை சீர்செய்து, நரம்பை நகர்த்தி, பிரச்னைக்குரிய தட்டு   பகுதியை அகற்றுவர். இதற்கு, மயக்க மருந்து கொடுத்து, அறுவை சிகிச்சை  நடக்கும். பின் மருத்துவமனையில், பல  வாரங்கள் ஓய்வில்  இருக்க வேண்டும். அதற்கு  மாற்றாக, எளிமையான  மருத்துவ சிகிச்சை முறையும் உள்ளது. முதுகுப் பகுதியில், 12  செ.மீ., தள்ளி,  மெல்லிய  துளையிட்டு, அதில், 7 மி.மீ., அளவுள்ள  கேமராவை  செலுத்தி, அதன் வழியே, பாதிக்கப்பட்ட, 'டிஸ்க்' பகுதியை எடுக்க  வேண்டும். இதில்,  பக்கவிளைவுகள்  ஏதும் இல்லை. இதற்கு ஒரு  மணிநேரம்  மட்டும் போதுமானது. இதை, 'டே கேர் சர்ஜரி' என்று அழைக்கின்றனர்.   தேவைப்பட்டால், ஒரு தையல் மட்டும் போடப்படும். துல்லியமான, நுணுக்கமான அறுவை சிகிச்சை முறை இது. இந்த முறையில், நோயாளி, எளிதில் குணமடைவார். சிகிச்சை மேற்கொண்ட அடுத்த நாளே, வீட்டிற்கு   சென்றுவிடலாம். 
செ.பழனிகுமார்,
நுண்துளை முதுகு எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், 
சென்னை
95971 31093

