sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/ஓடுவேன்... ஓடுவேன்... ஓடிக்கொண்டே இருப்பேன்!

ஓடுவேன்... ஓடுவேன்... ஓடிக்கொண்டே இருப்பேன்!

ஓடுவேன்... ஓடுவேன்... ஓடிக்கொண்டே இருப்பேன்!


PUBLISHED ON : ஜன 17, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 17, 2020


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை மாநகராட்சி மேயராக, தனி முத்திரை பதித்தவர், மா.சு., என்று பொதுவாக அழைக்கப்படும், தி.மு.க., கட்சியைச் சேர்ந்த, மா.சுப்ரமணியன், 61. சைதாப்பேட்டை, எம்.எல்.ஏ.,வாக பொறுப்பு வகிக்கிறார்.ஒரு அரசியல்வாதியாக அவரைப் பற்றி, பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் ஈடுபாடு, எந்த நிலையிலும் உடற்பயிற்சியில் சமரசம் செய்து கொள்ளாத பிடிவாதம் என, மாரத்தான் ஓட்டப்பந்தய வீரராக, உலக சாதனை படைத்திருக்கும், மா.சு.,வின் இன்னொரு முகம், பலரும் அறியாதது.அதிலும், 50 வயதிற்கு மேல், இந்தச் சாதனையை செய்திருக்கிறார். உடல் தகுதி, ஆரோக்கியம் குறித்து, அவர் பகிர்ந்து கொண்டதில் இருந்து...

சிறிய வயதிலிருந்தே, படிப்பில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை; விளையாட்டு பிடிக்கும். 1995ம் ஆண்டு, எனக்கு சர்க்கரை கோளாறு இருப்பது தெரிந்ததும், வாழ்க்கையே இருண்டு போன மாதிரி தோன்றியது.தினமும் நடைப் பயிற்சி செய்ய வேண்டும் என, டாக்டர்கள் கூறியதால், தவறாமல் நடப்பேன். 2004, அக்., 17ம் தேதி, தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்ததற்காக, அப்போதைய தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, மதுரையில் பாராட்டு விழாவை, கவிஞர் வைரமுத்து நடத்தினார்.அதில் பங்கேற்பதற்காக, சென்னையிலிருந்து நண்பர்களுடன், காரில் சென்றேன். பெரம்பலுாரை தாண்டி, நாரயணமங்கலம் என்ற ஊரைத் கடந்த போது, நாங்கள் பயணித்த காரும், எதிரில் வந்த கன்டெய்னர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில், என்னுடன் பயணித்த, மாநகராட்சி உறுப்பினர் ஜம்புலிங்கம், சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். காரின் முன்சீட்டில் அமர்ந்து பயணம் செய்த எனக்கு, வலது கால் மூட்டு, ஆறேழு துண்டுகளாக நொறுங்கி விட்டது. தலையில் பலத்த அடி.மதுரை நிகழ்ச்சிக்காக அங்கிருந்த, தற்போதைய தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆலோசனையில், திருச்சியில் உள்ள, காவேரி மருத்துவ மையத்தில் சேர்த்தனர். தலையில் அடிபட்டதால், முதல் ஐந்தாறு நாட்கள், சுய நினைவில்லாமல் இருந்தேன்; அவசர சிகிச்சைப் பிரிவில், 15 நாட்கள் சிகிச்சை பெற்றேன்.முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சைக்கு பின், சென்னைக்கு கொண்டு போகலாம் என்று முடிவு செய்து, ஆம்புலன்சில், ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து, ரயிலில் அழைத்து வரப்பட்டு, சென்னை மியாட் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தொடர்ச்சியாக, மூன்று மாதங்கள் சிகிச்சை பெற்றேன்.திருச்சியில் சிகிச்சை அளித்த டாக்டர்கள், 'வாழ்க்கை முழுவதும் உங்களால், இனி ஓடவே முடியாது' என்று சொன்னார்கள்.

அந்த சமயத்தில், நான் ஓட்டப் பந்தய வீரன் இல்லை. பின், ஏன் அந்த வார்த்தையை சொன்னார்கள் என்று புரியவில்லை. அத்துடன், என்னால், தரையில் சம்மனம் போட்டு உட்கார முடியாது என்று, கூடுதலாக ஒரு தகவலையும் சொன்னார்கள்.சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்ததும், என் வீட்டின் அருகில் வசிக்கும் யோகா பயிற்சியாளர் பாஸ்கர் உதவியுடன், பயிற்சிகளை ஆரம்பித்தேன். தரையில் உட்காரவே முடியாது என்ற நிலையில், ஓராண்டு யோகா பயிற்சியில், பத்மாசனம் போட்டு உட்கார ஆரம்பித்து விட்டேன்.அதன்பின், தினமும் நடைப் பயிற்சி செய்தேன். 2000ம் ஆண்டின் மத்தியில், மெதுவாக ஓட ஆரம்பித்தேன். தினமும், 1 கிலோ மீட்டர் என்று தொடங்கிய ஓட்டம், 5, 6 கிலோ மீட்டர் என்று அதிகரித்து, 10 கி.மீ., ஓடினேன்.கடந்த, 2014, பிப்ரவரியில், புதுச்சேரி ஆரோவில் சார்பாக, மாரத்தான் ஓட்டம் அறிவித்தது தெரிந்து, என் நண்பர்கள், 10 பேருடன் பங்கேற்றேன். அப்போது, என் வயது 54.அந்தப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும், 21 கி.மீ., துாரத்தை கடக்க, மூன்றேகால் மணி நேரம் ஆனது. 'இனி ஓடவே முடியாது' என்று கூறப்பட்ட நான், 2 மணி நேரம், 34 நிமிடத்தில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்தேன். அன்று என் மனதில் தோன்றிய உணர்வு, 'என்னால் ஓட முடியும்!'அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஆஸ்திரேலியா, மும்பை என்று, 25 மாரத்தான் ஓட்டங்களில் ஓடினேன். போட்டி எங்கு நடக்கிறது என்று, தேடித் தேடி ஓடினேன். மாரத்தான் பற்றிய தகவல்களை இணையதளத்தில் தேடியபோது, 50 வயதிற்கு மேல், இரண்டு ஆண்டுகளில், தேசிய அளவில், 25 மாரத்தான் ஓட்டம், யாரும் ஓடியதில்லை என்று தெரிந்தது.

அதிலும், மூட்டு அறுவை சிகிச்சை செய்த, சர்க்கரை கோளாறு உள்ள ஒருவர் இதை செய்ததில்லை. என் சாதனை, 'இந்தியா புக் ஆப் ரெக்கார்டில்' பதிவானது. அதன்பின், 29 மாரத்தான் ஓடி, 'ஏசியா புக் ஆப் ரெக்கார்டில்' இடம் பெற்றேன்.இரண்டு ஆண்டுகளில், 25 மாரத்தான் ஓட்டம் என்பதை, ஓராண்டில் செய்ய வேண்டும் என்று ஓடினேன். இதனால், மூன்று ஆண்டுகளில், 50, நான்கு ஆண்டுகளில், 75, ஐந்து ஆண்டுகளில், 100 மாரத்தான் ஓட்டங்கள் ஓடி, உலக சாதனை செய்து, 'வேர்ல்டு ரெக்கார்ட் யூனியன்' அமைப்பில் இருந்து, இன்டர்நேஷனல் கோல்டன் டிஸ்க் விருது வாங்கினேன்.'வேர்ல்டு ரெக்காட்ஸ் யுனிவர்சிட்டி' என்ற அமைப்பு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 'வேர்ல்டு டாப் கிங்க்ஸ்' என்ற சாதனை புத்தகத்திலும், என் பெயர் இடம் பெற்றுள்ளது.கடந்த, 2014 - 2019 பிப்ரவரி வரை, ஐந்து ஆண்டுகளில், 100 முடித்து விட்டேன். அதன்பின், லண்டன், ஆஸ்திரியா, கத்தார், நார்வே உட்பட, 11 நாடுகளில், 11 மாரத்தான் ஓடியுள்ளேன். இந்தியாவில், லடாக் உட்பட, 31 மாநிலங்களில், 20 மாநிலங்களில் ஓடியுள்ளேன்.

லடாக் அனுபவம்



கார்கில் மலைப்பிரதேசத்தில் ஓடினேன். தரை மட்டதிலிருந்து, பல ஆயிரம் கி.மீ., உயரத்தில், மைனஸ் டிகிரி குளிர் உள்ள இடம். கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளின் கல்வி நிதிக்கான ஓட்டம் அது என்பதால் பங்கேற்றேன்.ஸ்ரீநகரில் இறங்கி, 265 கி.மீ., துாரத்தை, அமர்நாத், டிராஸ் மலைப்பகுதி வழியாக காரில் சென்றோம். டிராஸ், உலகிலேயே அதிக பனி உள்ள, மக்கள் வாழும் இரண்டாவது இடம். இங்கு தான், முதலில் போர் நடந்தது.இத்தாலியில், பைசா நகர கோபுரம் உள்ள பகுதியில் ஓடும் போது, மைனஸ் 4 டிகிரி குளிர். கண்களில் வழியும் நீரை துடைக்காமல் விட்டால், உறைந்து விடும் அளவிற்கு இருந்தது. ராஜஸ்தானில், ஜெய்ப்பூரில், 45 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில், ஹாட் மாரத்தான் ஓடினோம். இரண்டு மாதங்களுக்கு முன், பூனாவில், மலையில் டிரக்கிங் போகும் இடத்தில், ஆயிரம் அடிக்கு, 21 கி.மீ., மேலே ஓடினோம்.ஆஸ்திரியாவில், லே என்ற இடத்தில், 8 டிகிரி செல்ஷியஸ் குளிரில், மலையில் ஓடினேன். சமீபத்தில் ஓடியது, மத்திய பிரதேசத்தில், மாண்டூ மலைப்பகுதி மாரத்தான். ராகுல் வர்கீஸ் என்பவர் நடத்தும், கடினமான மாரத்தான் ஓட்டங்கள் அனைத்திலும் பங்கு பெற்றுள்ளேன்.

பிரத்யேக நேரம்



அரசியல் வேலைகளுக்கு இடையூறு இல்லாமல், சனிக்கிழமை இரவில் புறப்பட்டு, ஞாயிறு காலை போட்டியை முடித்துவிட்டு, ஞாயிறு மதியமே திரும்பி விடுவேன். ஒரு நாள் விட்டு ஒருநாள், 10 கி.மீ., ஓடி பயிற்சி செய்வேன். ஓடாத நாட்களில், சைக்ளிங் மற்றும் ஜிம்மில் பயிற்சி செய்வேன்.வெளியூர் செல்வதாக இருந்தாலும், பயிற்சி நிற்காது. காலை 5:00 மணிக்கு காரில் கிளம்பினால், ஆறு மணிக்கெல்லாம் செங்கல்பட்டு போய்விடலாம். அங்கு இறங்கி, 10 கி.மீ., ரோட்டில் ஓடுவேன். அதன்பின் காரில் ஏறி, போக வேண்டிய இடத்திற்கு போய் விடுவேன். நேரம் இல்லை என்று, எந்த நிலையிலும் பயிற்சியை விடுவதில்லை.

பின் தொடர்பவர்கள்



சமூக வலைதளங்களில் என்னை, 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். தினசரி நடவடிக்கைகளை, அதில் பகிர்ந்து கொள்வேன். காலையில் ஒரு மணி நேரம், இதற்காக செலவிடுவேன். என் ஓட்ட அனுபவங்களை, புத்தகமாக எழுதி வருகிறேன். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும், அடுத்த மாதம் வெளியிட உள்ளேன்.

உணவு



எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. அசைவ உணவு, அதிகம் விரும்பி சாப்பிடுவேன். எந்த உணவு சாப்பிட்டாலும் பிரச்னை வருவதில்லை என்பது தான், எனக்கு மகிழ்சியான விஷயம். என்ன சாப்பிட்டாலும், காலை ஓட்டத்திலேயே, எல்லா கலோரியும் வீணாகி விடும். இரவு, 11:00 மணிக்கு துாங்கி, காலை, 5.00 மணிக்கு எழுந்த விடுவேன்.

உத்வேகம்



சமீபத்தில், திருவாரூர் சென்று ரயிலில் திரும்பிய போது, திருவல்லிக்கேணியை சேர்ந்த வயதான தம்பதி, என்னைப் பார்த்ததும், புகைப்படம் எடுத்து, உங்களைப் பார்த்து தான் நாங்கள், தினமும் நடைப்பயிற்சிக்கு செல்கிறோம்' என்றனர். எங்கே போனாலும், பலர் என்னிடம் சொல்வதும் இது தான். கேட்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கும்.இது எல்லாவற்றையும் விட சந்தோஷம், மூன்று ஆண்டுகளுக்கு முன், பூனாவில், கிறிஸ்துமஸ் என்ற மலையில், மாரத்தான் ஓடினோம். பவதான் ஹில்ஸ் என்ற பள்ளத்தாக்குகள் அதிகம் உள்ள மலைப் பகுதி அது.கீழிருந்து மேலே ஓடி வரும் போது, என்னை மாதிரியே வழுக்கை தலை உள்ளவர் ஓடி வந்தார். அவரிடம், 'எத்தனையாவது மாரத்தான்?' என்று கேட்டேன். '12 ஆண்டு களாக, 48 முறை ஓடி விட்டேன். அடுத்த ஆண்டு, என் 60வது வயதில், 60 ஓட்டத்தை தொட்டு விட வேண்டும் என்று நினைத்துள்ளேன்' என்றார்.'ஏன் இந்த இலக்கு?' என்று கேட்ட போது, 'சென்னையில், சுப்ரமணியம் என்பவர், ஐந்து ஆண்டில், 100 ஓட வேண்டும் என்று ஓடுகிறாராம். என், 60வது வயதிலாவது, 60யை முடிக்கலாம் என்று ஓடுகிறேன்' என்றார். 'நான்தாங்க அது' என்றதும், உற்சாகமாகி விட்டார், மும்பையைச் சேர்ந்த அவர்.மாரத்தான் ஓடுவதற்கு முன்பெல்லாம், தொடர்ந்து வேலை செய்யும் போது, அயர்ச்சி, சோர்வு வரும். உடல் பருமனாக இருப்பது போல் உணர்வு இருக்கும். இப்போது, 25 - 30 வயது இளைஞனின் மனநிலை தான் உள்ளது. என்ன வேலை செய்தாலும், சோர்வு வருவ தில்லை; உற்சாகமாகவே உணர்கிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us