PUBLISHED ON : ஆக 19, 2018

எனது பாட்டி, தாயார் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனக்கு 30 வயதாகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் என்ன செய்ய வேண்டும்.
மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு மார்பகப் புற்றுநோய் வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேலும் மார்பகப் புற்றுநோய்க்கான மரபணு உள்ளதா என்பதை BRCA1, BRCA2 என்ற ரத்த பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம். அந்த மரபணு தாக்கம் உங்களுக்கு இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீங்கள் மார்பகங்களுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். பிரபல ஹாலிவுட் நடிகை ஆஞ்சலின் ஜீலி அவ்வாறு செய்துள்ளார்.
நான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு 'சைக்லோஸ்போரின்' என்ற மருந்தை தொடர்ந்து உபயோகித்து வருகிறேன். இதனால் புற்றுநோய் அபாயம் ஏற்படுமா?
சைக்லோஸ்போரின் என்ற மருந்தை தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் உடம்பில் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு நோய் கிருமிகள் தாக்குதல் மற்றும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன ஆகவே நீங்கள் தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் இருப்பது நல்லது.
நான் பொது விழாக்களில் மட்டும் மது அருந்துவது வழக்கம். என்னை போல் அவ்வப்போது மது பழக்கம் உள்ளவர்களுக்கு ஏதேனும் தீங்கு வருமா?
மது பழக்கத்தை தொடர்ச்சியாகவோ அல்லது அவ்வப்போதோ வைத்திருந்தாலும் கல்லீரல், இரைப்பை, கணையம் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்புள்ளது. மது பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
எனது நெஞ்சுப் பகுதியில் முன்புறம் சில ஆண்டுகளுக்கு முன்பு காயம் ஏற்பட்டு தழும்பு இருந்தது. அந்த தழும்பு இப்போது வேகமாக வளர்ந்து வருகிறது. அதில் அரிப்பும் ஏற்படுகிறது. அது புற்று நோயாக இருக்குமா?
தழும்பில் அரிப்பு மற்றும் வளர்ச்சி ஏற்பட்டால் அதற்கு 'கீழாயிடு' என்று பெயர். அதற்கும் புற்று நோய்க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. கீழாயிடு நோயை ஊசி மூலமாகவோ அல்லது கதிரியக்க சிகிச்சை மூலமாகவோ குணப்படுத்தி விடலாம்.
நான் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். வெகுநேரம் நின்று பணியாற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ளேன். அதனால் காலில் ரத்தக் குழாய்கள் வீங்கி ரத்தம் உறைந்துள்ளது. இதனால் எனக்கு ஏதேனும் விளைவுகள் வருமா?
ரத்தக்குழாய்கள் வீங்கி ரத்தம் தேங்குவதால் ரத்தம் உறைந்து ரத்த கட்டிகள் ஏற்படுவதற்கும் காலில் புண் மற்றும் தோல் நோய்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, நீங்கள் நீண்ட நேரம் நிற்பதை தவிர்த்து காலில் ரத்த குழாய்கள் வீங்காமல் இருக்க கால் உறை அணிந்து கொள்ள வேண்டும்.
நான் பாலிதீனாலான உள்ளாடைகளை இறுக்கமாக அணிகிறேன். இதனால் எனது உடலுக்கு ஏதேனும் பாதிப்பு வருமா?
பாலிதீன் மற்றும் டெர்லீன் போன்ற உள்ளாடைகளை அணிவதினால் பல்வேறு தோல் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே நீங்கள் அவற்றை தவிர்த்து பருத்தியில் தயாரித்த உள்ளாடைகளை அணிவது நல்லது.
எனது முகத்தில் ஒரு கரும்புள்ளி போல் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக அது வளர்ந்து வருகிறது. அதற்கு நான் எவ்விதமான சிகிச்சை செய்ய வேண்டும்?
உடம்பில் கரும்புள்ளிகள் தோன்றி அது வளர ஆரம்பித்து அதில் எரிச்சலோ, அரிப்போ ஏற்பட்டால் அது தோல் புற்று நோயின் ஆரம்ப கட்ட அறிகுறியாக இருக்கலாம். எனவே நீங்கள் ஒரு மருத்துவரை அணுகி திசு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
- டாக்டர். மோகன் பிரசாத்
புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்
மதுரை.98430 50822

