முகத்தை மூன்று வேளை கழுவி துடைத்தால்... பருக்கள் வரவே வராது!
முகத்தை மூன்று வேளை கழுவி துடைத்தால்... பருக்கள் வரவே வராது!
PUBLISHED ON : ஜூலை 31, 2020

''மூன்று வேளையும் முகத்தை கழுவி, துண்டால் துடைத்து வந்தால், பரு எட்டிப்பார்க்காது,'' என்கிறார் சரும நோய் சிறப்பு மருத்துவர் மகாதேவன்.
பேஸ்வாஷ் பயன்படுத்துவதால், பருக்கள் வருமா ?
பேஸ்வாஷ் பயன்படுத்துவதால் வராது. ஹெர்பல் பேஸ்வாஷ் பயன்படுத்தும் போது, சிலருக்கு மூலிகைகள் ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜி, அரிப்பு வரலாம். அதனால், ஒருமுறை பயன்படுத்தி பார்த்து, தொல்லை இருந்தால் தவிர்த்து விட வேண்டும். எது ஒத்துக்கொள்கிறதோ அதை பயன்படுத்தலாம்.
மாணவ, மாணவிகளுக்கு முகத்தில் பருக்கள் வரக்காரணம் என்ன?
இளைஞர்களுக்கு வரும் ஹார்மோன் பிரச்னைதான் இது. உடலில் உள்ள ஆயிலும் காரணம். கிள்ளினால் மேலும் அதிகமாகும். தழும்புகள் ஏற்படும். ஒரு நாளைக்கு மூன்று வேளை முகம் கழுவி, நல்ல துண்டால் துடைத்து கொள்ள வேண்டும். அதிக தொல்லை என்றால், தோல் மருத்துவரை பார்த்து, மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.
மாஸ்க் அணிவதால் தோலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து?
சிறு அரிப்பு வரலாம். கடந்த மூன்று மாதமாக இந்த பிரச்னை அதிகரித்து உள்ளது. மாஸ்க் போடாமல் இருக்கக்கூடாது. ஒரு மாஸ்க்கை, ஒருநாள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். பொருளாதார பிரச்னையால், சிலர் துணி மாஸ்க் போடுகின்றனர். இதனால் நோய் தொற்றை தடுக்க முடியாது. நோய் தடுப்பு பணியில் இருப்பவர்கள், கண்டிப்பாக மூன்று லேயர் உள்ள மாஸ்க்தான் அணிய வேண்டும்.
தோலில் சிலருக்கு சிவப்பு நிறத்தில், சிறு புள்ளிகள் வருவது எதனால?
இது, வயதானவர்களுக்கு ரத்தக்குழாய்களில் ஏற்படும் கசிவு காரணமாக வரும். சிறிது நாட்களில் தானே போய் விடும். ரத்த குழாயில் வெடிப்பு ஏற்பட்டு புண்கள் வரும். அலர்ஜி காரணமாகவும் இது வரும். இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, பூச்சிகள் மோதுவதால் சிலருக்கு இந்த தொற்று ஏற்படும்.
தலையில் வெள்ளை நிறத்தில் பொடி, பொடியாக செதில்கள் வரக்காரணம் என்ன?
தலையில் பொடுகு மற்றும் சோரியாசிஸ் காரணமாக, இது போன்ற பிரச்னை வருகிறது. ஒரு வகை காளான் கிருமியே இதற்கு காரணம். தலைக்கு தினமும் ஷாம்பு, சோப்பு போட கூடாது. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் போடலாம்.இதை கட்டுப்படுத்தும் ஷாம்புகள் உள்ளன. அதை தலையில் போட்டு இரண்டு நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிக்க வேண்டும்.
தாடி, மீசைக்கு டை போடுவதால் தோலுக்கு பாதிப்பு வராதா?
டை என்றாலே கெமிக்கல் கலந்துதான் தயாரிக்கப்படுகிறது. சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. காது ஓரத்தில் கொஞ்சம் போட்டுப்பார்த்து, தொந்தரவு வருகிறதா என, தெரிந்து கொண்டு மேலும் பயன்படுத்தலாம். சேரவில்லை என்றால் அந்த பிராண்டை பயன்படுத்தக் கூடாது.
