PUBLISHED ON : ஜன 09, 2011

வளர்ந்து வரும் அறிவியல் உலகம் மனிதர்களை சோம்பேறிகளாக்கி விட்டது என்றே சொல்லலாம். 40 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை எண்ணிப்பாருங்கள்.
காலையில் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து ஆடவரும், பெண்டிரும் தத்தம் காலை கடன்களை கழிக்க ஒரு கையில் சொம்புடனும், மறுகையில் வேப்பங்குச்சி அல்லது ஆலங்குச்சியுடன் பல் துலக்கிக்கொண்டே, பல மைல் தூரம் சென்றவர்களுக்கு மலச்சிக்கல்தான் ஏது? நமது பெரும்பாலான பாட்டிகளுக்கு இன்று வரை முழங்கால் வலியோ, சர்க்கரை நோயோ,தோல் நோயோ இல்லை. இன்றும் சரியான எடையுடன் முதுமையின் பலவீனத்தை மட்டுமே தாங்கி, கம்பீரமாய் நடைபோடும் பல முதியோரின் ஆரோக்கிய ரகசியம்தான், நமது முன்னோர்களின் முந்தைய கால சுறுசுறுப்பு.வெறும் 200 சதுர அடிக்குள்ளேயே நாம் உண்ணும் உணவறை, படுத்து உறங்கும் படுக்கையறை, காலை கடன்களை கழிக்க கழிப்பறை என, ஒரு ''கட்டுக்கோப்பான'' கூட்டுப்புழு வாழ்க்கை வாழும் நமக்கும், நமது சந்ததியினருக்கும் முந்தைய காலத்தின் சுதந்திரம் எப்படி புரிய வரும். வெளிநாடுகளை விட இந்தியாவில்தான் உடல் உழைப்பின்மையால் தோன்றும் சோம்பேறி நோய்கள் வேக,வேகமாக அதிகரித்து வருகின்றன. சோம்பேறித்தனத்தால் உடலில் தோன்றிய தசை இறுக்கம், களைப்பு, மந்தம் ஆகியவற்றை நீக்கி, உடலுக்கு சுறுசுறுப்பை தரும் அற்புத மூலிகை சொரிக்கொன்னை என்ற பெருவாகை. ஒராக்சிலம் இன்டிகம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட பிக்னோனியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த மரங்களின் இலை, வேர், பட்டை,பூ மற்றும் விதைகள் இந்திய மருத்துவத்தில் பெருமளவு பயன்படுகின்றன. இதன் இலை மற்றும் பட்டைகளிலுள்ள பிளேவோன்கள், பாய்காலின், ஸ்குட்டலரின், அலோயமடின், கிரிசின். ஓரோக்சலின் மற்றும் பீட்டா சைட்டோஸ்டீரால்கள் வயிறு மற்றும் தசை பகுதிகளில் தங்கிய வாயுவை வெளியேற்றி,மூட்டுகளில் வலியை குறைத்து, நீரை வெளியேற்றி,உடலை எடை குறைவாக மாற்றுகின்றன.பெருவாகை, முன்னை, வில்வம், பாதிரி, குமிழம், சுண்டை, கண்டங்கத்திரி, நெருஞ்சில், ஆடாதோடை, செவ்வியம் ஆகியவற்றின் வேர்களை சம அளவு எடுத்து, சுத்தம் செய்து,உலர்த்தி, பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.35 கிராம் பொடியை 500 மி.லி., நீரில் போட்டு கொதிக்கவைத்து. 100 மி.லி.,யாக சுண்டிய பின் வடிகட்டி, காலை மற்றும் இரவு உணவுக்கு பின்பு குடித்து வரவேண்டும். சித்தா,ஆயுர்வேதா மருந்துக்கடைகளில் கிடைக்கும் தசமுலாதி கசாயம்,தன்வந்தராகி கசாயம் போன்றவற்றில் பெருவாகை சேர்க்கப்படுகிறது.
எனக்கு ஹீமோகுளோபின் பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக பல விதமான பழச்சாறுகளை தினமும் காலையில் குடித்து வருகிறேன். ஆனால் சிறிது நேரங்களில் எனக்கு மூச்சு விடுவதற்கு சிரமமாக உள்ளது போல் தோன்றுகிறது. சளித்தொல்லை இல்லை.இது எதனால் ஏற்படுகிறது?
வயிற்றுப்புழுக்களினாலும்,கல்லீரல்,மண்ணீரல் பலகீனத்தாலும் ரத்தச்சோகை ஏற்படலாம். அத்திப்பழம் ரத்தச்சோகையை நீக்கும். அயச்செந்தூரம்-100மி.கி., நெல்லிக்காய் லேகியம் - 5 கிராம் தினமும் இரண்டு வேளை 1 அல்லது 2 மாதங்கள் உணவுக்கு பின் சாப்பிட ரத்தசோகை தீரும். - டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை
சுற்றுச்சூழல் அழிவுக்கு இ-வேஸ்ட் எனப்படும் மின்னணு கழிவுப்பொருட்கள் ஒரு காரணமாக அமைகின்றன. பழைய பயன்படாத கணினிகள், மடிகணினிகள், 'டிவி'க்கள், மொபைல் போன்கள் மற்றும் அனைத்து மின்னணு சாதனங்களை அழிப்பது பெரும் சவாலாக உள்ளது. இவற்றை அழிப்பதற்கு அதிக செலவும் ஏற்படுகிறது. இவற்றிலுள்ள காரீயம், பேரீயம் மற்றும் கனத்த உலோகங்கள் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளன.
மண்,காற்று மற்றும் நிலத்தடி நீரில் மாசை ஏற்படுத்தும் இந்த கழிவுகளிலுள்ள செம்பு அழிக்கப்படும் பொழுது, டயாக்சின்களை வெளிப் படுத்தி, சுற்றுச்சூழலை சேதப்படுத்துகின்றன. வேறு எந்த கழிவுகளை விட மின்னணு கழிவுகள் எதிர்கால சுற்றுச்சூழலுக்கு சவாலாக உள்ளன என,சுற்றுச்சூழல் அறிஞர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

