PUBLISHED ON : டிச 04, 2022

சமீபத்தில் இரண்டு ஆய்வுகள் வெளிவந்துள்ளன. முதலாவதில், இரவு உணவை நேரம் கடந்து, 10:00 மணிக்கு மேல் சாப்பிடுவதால், பசி அதிகமாகவும், அதே நேரத்தில் கலோரி எரிப்பது குறைவாக, உடலில் உள்ள கொழுப்பு செல்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்; இதனால் உடல் பருமன் ஏற்படும்.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள், நேரம் கடந்து சாப்பிட்டதால், அதிக மாவுச் சத்து உள்ள மசாலா, உப்பு சேர்த்த உணவு வகைகளையே அதிகமாக சாப்பிட விரும்பியதாகவும், வழக்கமாக சாப்பிடும் அளவை விடவும் அதிகமாக சாப்பிட்டதாகவும் கூறினர்.
இவர்களின் ரத்தத்தை பரிசோதித்ததில், அதீத பசி உணர்வை கட்டுப்படுத்தும் 'லெப்டின்' என்ற ஹார்மோன் சுரப்பு குறைவாக இருந்தது. இன்னொரு புறம் பசியை துாண்டும் 'கிரெடின்' என்ற ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருந்தது. குறைந்த அளவே கொழுப்பு எரிக்கப்பட்டு, அதிக அளவு சேமிக்கப்பட்டு இருந்தது.
இரண்டாவதாக செய்த ஆய்வில், இரவு உணவை 7:00 மணிக்குள் சாப்பிட்டவர்கள் பழம், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றையே அதிகம் விரும்பி சாப்பிட்டனர்; காரணம், இயல்பான பசி மட்டுமே இருந்தது. இவர்களின் ரத்த மாதிரியை ஆய்வுக்கு உட்படுத்தியதில், மன நலம் ஆரோக்கியமாக இருந்ததோடு, ரத்த அழுத்தமும், ரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
- 'செல் மெட்டபாலிசம்' மருத்துவ இதழ்!
