'ஸ்ட்ரோக்' வந்த 3 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவது அவசியம்
'ஸ்ட்ரோக்' வந்த 3 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவது அவசியம்
PUBLISHED ON : நவ 02, 2014

'பக்கவாதம் (ஸ்ட்ரோக்) வந்த மூன்று மணி நேரத்திற்குள், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். குறித்த நேரத்திற்குள் அடைப்பை சரி செய்யும் மருந்தை செலுத்தினால், முற்றிலும் குணமாக்கலாம். தாமதமாக வந்தால் ஒன்றும் செய்ய முடியாது' என்கிறார், நரம்பியல் நிபுணர் கே.பானு.
உலக பக்கவாத நோய் தினம் (ஸ்ட்ரோக்), அக்., 29ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை அரசு பொது மருத்துவமனையில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் பங்கேற்று,
பல்வேறு சந்தேகங்களுக்கு, மூளை நரம்பியல் நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.
முகாமில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, நரம்பியல் துறைத்தலைவர் கே.பானு அளித்த பதில்கள்:
பக்கவாத நோய் என்றால் என்ன?
கழுத்தின் இரு பக்கங்கள் வழியாக தலைக்குச் செல்லும் கழுத்து தமனிகள், இதயத்தில் இருந்து, மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்கின்றன. பெரிதாக உள்ள ரத்தக்குழாய்கள், பல கிளைகளாக பிரிந்து, நுண்ணிய ரத்தக் குழாய்களாக மாறி, மூளையின் எல்லா திசுக்களுக்கும் தேவையான பிராண வாயு, ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
மூளைக்கு செல்லும் பெரு, சிறு ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் குறைதல் மற்றும் தடைபடும்போது, பிராண வாயு, ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது தடைபட்டு, மூளையின் சில பாகங்கள் செயல் இழந்து, உடலின் சில பாகங்களும் செயல் இழக்கின்றன. இதை, பக்கவாதம் (ஸ்ட்ரோக்) என்கிறோம். மாரடைப்பு போன்று, இதை, மூளை அடைப்பு எனலாம்.
பக்கவாதத்தில் வகைகள் உண்டா? முற்றுப்பெறாத பக்கவாதம் என்றால் என்ன?
தற்காலிக பக்கவாதம், தொடர் பக்கவாதம், முற்றுப்பெற்ற பக்கவாதம் என, மூன்று வகைகளாக பிரிக்கலாம். ரத்தக் கசிவால், தற்காலிக பக்கவாதம் ஏற்படுகிறது; சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. பாதிப்புகள், சில நிமிடங்களில் நீங்கிவிடும் என்றாலும், பிற்காலத்தில் கடும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புண்டு.
தொடர் பக்கவாதம் என்பது, ரத்தக் குழாய்களில் ரத்த உறை பொருள் தோன்றுவதாலோ, மூளை புற்றுக்கட்டி பாதிப்பாலோ, மூளை உறைக்கு அடியில் ரத்தம் கசிந்து, அதன்பின் ஏற்படும் ரத்த தேக்கத்தினாலோ ஏற்படுவது. திடீரென, ரத்தக் குழாய் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படாது; கொஞ்சம் கொஞ்சமாக, நாட்கணக்கில் பாதிப்பு தொடரும். இடையில் பாதிப்பு அதிகரித்தோ, குறைந்தோ காணப்படும்.
முற்றுப்பெற்ற பக்கவாதம் என்பது, ஓரிரு மணி நேரத்திலேயே ஏற்பட்டு விடும். எளிதில் குணப்படுத்த முடியாது. இதிலும், இரண்டு வகைகள் உண்டு.
ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு சிறிதாக இருந்தால், பாதிப்பு சிறிய அளவிலும், ரத்தக்குழாய் அடைப்பு, ரத்தக் கசிவு பெரிய அளவில் இருந்தால், பாதிப்பு கடுமையாக இருக்கும்.
பக்கவாத பாதிப்புக்கான முக்கிய காரணங்கள் என்ன? பாரம்பரிய நோயா?
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள், ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிதல், அதிக உடல் எடை, பருமன் கூடுதல், புகை, மது பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், சோம்பேறியான வாழ்க்கை முறை, நாட்பட்ட மன அழுத்தம், உடற்பயிற்சி இன்மை மற்றும் நாட்பட்ட தொற்றாலும், பக்கவாதம் வரலாம்.பாரம்பரியமாகவும் இந்த பாதிப்பு வருகிறது. 80 சதவீத பக்கவாதம், மூளை ரத்தக்குழாய்கள் அடைப்பாலும், 20 சதவீத பக்கவாதம், மூளையில் ரத்தம் கசித்து தேங்குவதாலும் ஏற்படுகிறது.
பக்கவாதத்தை வரும் முன் அறிய முடியுமா?
பக்கவாதம் வரும் முன், உடலின் ஒரு பகுதி அல்லது முகம், கை, கால்கள் மரத்துப் போகுதல்; செயல் இழந்து போகுதல் போன்ற உணர்வு, திடீரென பார்வை மங்குதல், திடீரென தலை சுற்றல், திடீர் குழப்பம், பேச்சு குழறுதல், பிறர் பேசுவதை புரிய முடியாமை,
திடீரென கடும் தலைவலி, தான் எங்கு இருக்கிறோம் என்ற உணர்வு இல்லாதிருத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும். அப்போதே, உஷாராகி விடுவது நல்லது.
எந்த வயதினரை பாதிக்கும். இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதா?
உலகில், ஆறு நிமிடத்தில் ஒருவருக்கு பக்கவாதம் வருகிறது; நிமிடத்திற்கு, 10 பேர் இறக்கின்றனர். இந்தியாவில், ஒரு லட்சம் பேரில், 222 பேருக்கு, பக்கவாத பாதிப்பு உள்ளது. ஆண்டுக்கு, 16 லட்சம் பேர், இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 12 சதவீத பாதிப்பு ஏற்படுகிறது. பக்கவாதம் வந்த, நான்கு வாரங்களில், 18 முதல் 41 சதவீதம் பேர் இறக்கின்றனர்.
அறிகுறி இருந்தால் என்ன செய்ய வேண்டும்? மூன்று மணி நேரம் 'பொன்னான நேரம்'
என்கிறார்களே ஏன்?
அறிகுறிகள் தெரிந்த மூன்று மணி நேரத்திற்குள், 'சிடி' ஸ்கேன் எடுக்கும் வசதி உள்ள மருத்துவமனைக்கு பாதிக்கப்
பட்டோரை அழைத்துச் செல்ல வேண்டும். மூளை அடைப்பை உறுதி செய்ய வேண்டும். மூன்று மணி நேரத்திற்குள், ரத்த அடைப்பு நீக்கும் மருந்து (Thrombolitic therapy) செலுத்தினால்,
முற்றிலும் குணப்படுத்த முடியும்.தாமதமாக வந்தால், மருந்து போட்டாலும் பயனில்லை; பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே தான், அந்த மூன்று மணி நேரத்தை,
'பொன்னான நேரம்' என்கிறோம்.
எல்லாருக்கும் இந்த மருந்தை போட முடியுமா? வேறு சிகிச்சை முறைகள் என்ன?
பாதிப்புடன் வருவோருக்கு சில முக்கிய பரிசோதனைகள் செய்யப்படும். தகுதியான நபருக்கு மட்டுமே, ரத்த அடைப்பு நீக்கும் மருந்தை செலுத்த முடியும். எல்லாருக்கும் இந்த மருந்தை செலுத்தவிட முடியாது.பக்கவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கு, நீண்ட கால சிகிச்சையாக மூளை நரம்பியல் சிகிச்சை நிபுணரின் ஆலோசனைக்கு ஏற்ப, பேச்சு பயிற்சியாளர், உடல் இயக்க சிகிச்சையாளர், தொழில் வழி சிகிச்சையாளர், மன நல ஆலோசகர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் உதவி, பாதிப்புக்கு தகுந்தாற்போல் தேவைப்படும்.
இவர்கள் அனைவரும் இணைந்து நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் பயிற்சி அளிக்கும்போது, வெகு விரைவில் குணமாக வாய்ப்பு உள்ளது.
பக்கவாதம் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?
சர்க்கரை அளவு, உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். புகை, மது பழக்கத்தைக் கைவிடவேண்டும். கொழுப்பு சத்தைக் கட்டுப்படுத்துதல், தினமும் உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தம் வராமல் பணிகளை
எளிமைப்படுத்துதல் அவசியம்.பழம், கீரையை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு, உப்பு பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அலட்சியமாக இருந்தால், பக்கவாதம் பாதித்து குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் சுமையாகி விடுவோம். அத்தகைய நிலை வராமல் பாதுகாப்பது நம் கையில்தான் உள்ளது.
-டாக்டர். கே.பானு,
நரம்பியல் துறைத் தலைவர்,
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, சென்னை.

