தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கேன்சரை அறிவோம்... வரும்முன் தடுப்போம்! கே.எம்.சி.எச். டாக்டர்கள் விளக்கம்

கேன்சரை அறிவோம்... வரும்முன் தடுப்போம்! கே.எம்.சி.எச். டாக்டர்கள் விளக்கம்

கேன்சரை அறிவோம்... வரும்முன் தடுப்போம்! கே.எம்.சி.எச். டாக்டர்கள் விளக்கம்


PUBLISHED ON : ஆக 31, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 31, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தினமலர் நாளிதழ் மற்றும் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை சார்பில், 'நலம் பேசுவோம்- நலமுடன் வாழ்வோம்' என்ற இணையவழி கலந்துரையாடல் நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வில், நம் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு, டாக்டர்கள் விரிவாக, தெளிவாக பதிலளித்தனர்.

ரத்தப்புற்றுநோய் என்பதை எதை வைத்து அறிந்துகொள்ள முடியும்?

ரத்தப்புற்றுநோய்க்கு என தனியாக அறிகுறி கிடையாது. அனைத்து புற்றுநோய்க்கும் பொதுவான அறிகுறிகள் இருக்கும். ரத்தப்புற்றுநோயில் இரண்டு வகைகள் உள்ளன. லுகேமியா மற்றும் லிம்போமா என்று கூறுவோம். கேன்சர் செல்கள் அதிகம் இருந்தால், சிவப்பு, வெள்ளை, தட்டணுக்கள் குறையத்துவங்கும். நல்ல அணுக்கள் குறையும் போது, நோய் எதிர்ப்பு சக்திகளும் குறைந்துவிடும். அதிக சோர்வு, காய்ச்சல் , காரணங்கள் இன்றி ரத்தம் வெளியேறுதல், வலி இல்லாத நெறிகட்டிகள் வீங்கிக்கொண்டே செல்வது, நீண்ட நாட்கள் தொடர்வது,

ரத்த புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம். ரத்தபுற்றுநோய் வந்தால் சிகிச்சை இல்லை என்று, கூறப்படுவது உண்மையா ?

இது முற்றிலும் தவறான புரிதல். சினிமாக்களில் இது போன்ற தவறான பிம்பத்தை உருவாக்குகின்றனர். லுகேமியா புற்றுநோயால் 100 குழந்தைகள் பாதிக்கப்பட்டால், 90 பேர் முழுமையாக குணமாகின்றனர். ரத்த புற்றுநோய் சிகிச்சையை ஆரம்பத்தில் துவக்கிவிட்டால், பிற புற்றுநோய்களை காட்டிலும் எளிதாக குணப்படுத்த இயலும் என்பதுதான் உண்மை.

டாக்டர் ராஜசேகர், ரத்த புற்றுநோய் நிபுணர்

கேன்சரை ஆரம்ப நிலையில் அறிவது எப்படி? வரும் முன் காப்பது எப்படி ?

உடம்பில் ஏதேனும் ஒரு வலி இல்லாத கட்டி இருப்பது, வாயில் வாரக்கணக்கில் புண் இருப்பது, உடல் எடையில் திடீர் குறைவு ஏற்படுவது, பசி எடுக்காமல் இருப்பது, மார்பகங்களில் கட்டி இருப்பது... போன்றவை முக்கிய அறிகுறிகள். இதுபோன்று இருந்தால், உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆண்டுகணக்கில் புகைப்பிடிப்பது, மது பயன்பாடு உள்ளவர்கள், இதற்கு முன் பழக்கம் இருந்தவர்கள், இதற்கான சி.டி.,ஸ்கேன் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை எடுத்து பார்க்கலாம். மகளிருக்கு அதிகம் வரும் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இரண்டையும், எளிதாக முன்கூட்டியே கண்டறிய முடியும். கர்ப்பப்பை வாய் புற்றுநோயை, முன்கூட்டியே 'பேஸ்மியர்' பரிசோதனை வாயிலாக கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்தலாம். 25 வயதுக்கு மேல் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்ளலாம்; இது வெறும் ஐந்து நிமிட பரிசோதனை தான். கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தற்போது தடுப்பூசி உள்ளது. பெண்கள் திருமணத்திற்கு முன், இந்த தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். உயர்நிலை வகுப்புகள் படிக்கும் போதே, பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி விட வேண்டும்.

மனைவிக்கு மார்பக புற்றுநோய் உள்ளது சிகிச்சை துவங்கியுள்ளோம். இது, குடும்பத்தில் வேறு யாருக்காவது வர வாய்ப்புள்ளதா? இப்புற்றுநோய் வந்தால் கட்டாயம் மார்பகம் அகற்றப்படவேண்டுமா...வேறு தீர்வு உண்டா?

மார்பக புற்றுநோயின் ஒரு சில வகைகள், பரம்பரையாக வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. இதற்கு, 'டிரிப்பிள் நெகடிவ்' மார்பக புற்றுநோய் என்று கூறுவார்கள். மரபணு பரிசோதனையில் குறிப்பிட்ட அணுக்கள் இருப்பது தெரிந்தால், நெருங்கிய முதல் வட்ட உறவுகள்பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இதன் வாயிலாக, மார்பக புற்றுநோய் அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்து கொண்டு சிகிச்சை அளிக்கவும், சிகிச்சை வாயிலாக வராமல் தடுக்கவும் முடியும். 40 வயதுக்கு ஒரு முறை அனைத்து பெண்களும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சிறிய கட்டிகளாக இருக்கும் போது, உரிய சிகிச்சை பெற்றால் முழு மார்பகத்தையும் அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. தற்போது பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளதால், சிகிச்சை முறைகள் எளிமையாகியுள்ளன.

டாக்டர் சுப்ரமணியம், கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை நிபுணர்

தந்தைக்கு புற்றுநோய் அறுவைசிகிச்சை செய்த பின்னர், பெட் ஸ்கேனில் ஒன்றும் இல்லை என ரிசல்ட் வந்தும், கீமோதெரப்பி எடுக்க டாக்டர்கள் கூறுகின்றனர்... ஏன்?

முதலில், புற்றுநோயை வெல்லமுடியும் என்ற நம்பிக்கை நோயாளிகளுக்கும், அவரின் உறவினர்களுக்கும் அவசியம். ஒருவரின் உடம்பில், ஒரு லட்சம் கேன்சர் செல் ஒரு இடத்தில் சேர்ந்தால் தான் ஒரு மி.மீட்டர் கட்டி உருவாகும்.அறுவைசிகிச்சை செய்யும் போது, பல செ.மீ., இருந்து இருக்கும். அதாவது, 100 கோடி கேன்சர் செல்கள் ஒரு இடத்தில் சேர்ந்தால் தான், ஒரு செ.மீ., கட்டி உருவாகிறது. அறுவைசிகிச்சைக்கு பிறகு பெட் ஸ்கேன் செய்து பார்க்கும் போது, மி.மீ., கட்டி வேறு இடங்களுக்கு பரவி இருந்தால் கண்டுபிடிக்க இயலாது. இதனால், கீமோதெரப்பி சிகிச்சை கொடுக்கவேண்டியது அவசியம். இதற்காக பயப்பட வேண்டியதில்லை; இதில் ஏற்படும் விளைவுகள் சிகிச்சை முடிந்த பிறகு சரியாகிவிடும்.

டார்கெட் தெரப்பி என்பது என்ன ?

கேன்சர் என்பதில், 250 வகைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மரபணு மாற்றம் இருக்கும். ஆரம்ப கட்டத்தில் கீமோதெரப்பி என்ற சிகிச்சை மட்டுமே இருந்தது. தற்போது, பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. டார்க்கெட் தெரப்பி என்பது சம்பந்தப்பட்ட நபரின் கேன்சர் செல்லின், மரபணு மாற்றம் என்ன என்பதை அறிந்து, அதற்கு ஏற்ற டார்கெட் மருந்தை கொடுப்பது. இதை வாய் வழி மருந்தாக கொடுக்கலாம்; பெரிய பக்க விளைவுகளும் இருக்காது; வாழ்நாளையும் அதிகரிக்க முடிகிறது. அதே போன்று ஹார்மோன் தெரப்பி சிகிச்சையும் உள்ளன. மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையில் வீரியம் இன்றி உள்ள சூழலில், கீமோ தெரப்பி இல்லாமல், ஹார்மோன் மாத்திரைகள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு எடுத்தால் போதும். நோயாளிகளின் தன்மையை பொறுத்து டாக்டர்கள் சிகிச்சையை தீர்மானிக்கின்றனர்.

டாக்டர் விக்னேஷ் கந்தகுமார், மருந்தியல் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us