PUBLISHED ON : நவ 27, 2011

எனது வயது 45. சர்க்கரை, ரத்தக்கொதிப்பு இல்லை. தினமும் நடைப்பயிற்சி செய்கிறேன். காலை 11 மணிக்கு தினமும் காபியுடன் வடை சாப்பிடும் பழக்கம் உள்ளது. இது தவறு என எனது டாக்டர் கூறுகிறார். அவர் கூறுவது சரியா? வி.கிருஷ்ணாராம், மதுரை
பொதுவாக 40 வயது ஆகிவிட்டாலே வாழ்க்கை முறை மாற்றத்தை மிகவும் கண்டிப்பாக கடைபிடிப்பது அவசியம். நம் இந்தியர்களுக்கோ இன்னும் சிறுவயதிலேயே வாழ்வியல் முறை மாற்றம் கொண்டு வருவது முக்கியம். ஏனெனில் இந்த மாற்றங்களை வாழ்வில் கடைபிடித்தால், நாளடைவில் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் வரவிடாமல் பாதுகாக்கிறது. அதாவது உணவில் உப்பு, எண்ணெய், சர்க்கரையை குறைப்பது, தினமும் நடைப்பயிற்சி, மனதை நிம்மதியாக வைப்பது அவசியம். வடை போன்ற எண்ணெயில் பொரித்த பண்டங்களை அறவே தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பொரித்த தின்பண்டத்தில்தான் அதிகமாக இருதயத்தை பாதிப்பதாக தெரியவந்துள்ளது. ஆகவே வடையை தினமும் சாப்பிடுவது தவறு.
ஆசிரியரான நான் ஆறு மாதங்களுக்கு முன் பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டேன். வகுப்பறையில் நான் சத்தமாக பாடம் நடத்தலாமா? * கே.திருமலைச்சாமி, பரமக்குடி
பைபாஸ் சர்ஜரி முடிந்த பின், மூன்று மாதங்கள் கழித்து சில முக்கிய பரிசோதனைகள் செய்யப்படும். இதில் ரத்தம், சிறுநீர், மார்பக எக்ஸ்ரே, எக்கோ பரிசோதனை, டிரெட் மில் பரிசோதனை அடங்கும். இவற்றின் முடிவுகள் 'நார்மல்' என்றால், இயல்பான, சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு எளிதில் வந்துவிடலாம். உங்களுக்கு ஆப்பரேஷன் முடிந்து 6 மாதங்கள் ஆகிவிட்டதால், தாராளமாக ஆசிரியர் பணியை வகுப்பில் , நன்கு அனுபவித்து பாடம் நடத்தலாம். ஆண்டுக்கு ஒருமுறை உங்கள் ஆப்பரேஷன் குறித்து 'செக் அப்' செய்து கொள்வது அவசியம்.
சர்க்கரை நோய் இருந்தால் அவசியம் இருதயம் பாதிக்குமா? * ரா. சுதாகரன், கோவை
சர்க்கரை நோய் ஒரு கொடூர நோய். முடிமுதல் பாதம் வரை அனைத்து உறுப்பையும் பாதிக்கும் தன்மை படைத்தது. சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதை கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால், அது மூளை, இருதயம், கண், சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கும். இதற்கு உணவு கட்டுப்பாடு, தினசரி நடைப் பயிற்சி, மருந்துகள் மிகவும் அவசியமானவை. ரத்தத்தில் சர்க்கரை அளவு வெறும் வயிற்றில் 100 மி.கி.,க்கு கீழும், சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 140 மி.கி.,க்கு கீழும் இருந்தால், உடல் உள்ளுறுப்புகளின் பாதிப்பை தவிர்க்வோ, தள்ளிப் போடவோ முடியும். ரத்தத்தில் எடூதூஞிணிண்தூடூச்tஞுஞீ ஏஞ அளவு அவசியம் 6.5 க்கு கீழ் இருந்தாக வேண்டும்.
எனக்கு ஆறு ஆண்டுக்கு முன் பைபாஸ் சர்ஜரி ஆப்பரேஷன் செய்யப்பட்டது. தற்போது சிறிது தூரம் நடந்தாலே நெஞ்சில் அழுத்தமும், வலியும் ஏற்படுகிறது. இதற்கு என்ன தீர்வு? * எம்.நடராஜன், திண்டுக்கல்
பைபாஸ் சர்ஜரி என்பது, இருதய ரத்தநாள அடைப்புகளை, நெஞ்சில் இருந்தோ, கால் அல்லது கையில் இருந்தோ ரத்தநாளங்களை எடுத்து, இருதயத்தில் பொருத்தும் அறுவை சிகிச்சை ஆகும். இதில் நாளடைவில் புதிதாக பொருத்திய ரத்தக் குழாயில் அடைப்போ அல்லது பழைய அடைப்பின் தீவிரமோ அதிகரிக்கலாம். இதுபோன்ற நிலை உங்களுக்கு ஏற்பட்டு
இருக்கலாம். இதற்கு உங்களுக்கு அவசியம் மீண்டும் ஆஞ்சியோ கிராம் பரிசோதனை அவசியம் தேவைப்படும். இதில் எந்த இடத்தில் அடைப்பு உள்ளது என கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிப்பர். தற்போது நவீன சிகிச்சையாக பலூன், ஸ்டென்ட் சிகிச்சை மூலம், பைபாஸ் சர்ஜரி செய்தபின் ஏற்படும் அடைப்புகளை எளிதில் சரிசெய்ய முடியும்.
- டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை.
