இதயம் காப்போம்: சர்க்கரை நோயாளிகளுக்கு இதயம் எவ்வாறு பாதிக்கிறது?
இதயம் காப்போம்: சர்க்கரை நோயாளிகளுக்கு இதயம் எவ்வாறு பாதிக்கிறது?
PUBLISHED ON : மார் 04, 2012

சர்க்கரை நோய் கொடூரமானது. இதை கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால், தலை முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும் தன்மை படைத்தது. குறிப்பாக மூளை மற்றும் நரம்பு, கண், இதயம், சிறுநீரகம், ரத்தக்குழாய்களைப் பாதிக்கும். இதயம், சர்க்கரை நோயால், பல வகைகளில் பாதிப்படைகிறது.
மிக முக்கியமாக, மாரடைப்பு, ரத்தநாளத்தில் பல இடங்களில் அடைப்பு ஏற்படுத்தும். இதயத்தின், 'செல்'களும் பாதிக்கப்படுகின்றன. இதனால், இதயத்தின் பம்பிங் திறன் பாதிப்படைந்து, ஹார்ட் பெயிலியர் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவருக்கு, மாரடைப்பு ஏற்பட்டால் ரொம்ப கொடூரமாகவும், அதன் விளைவு மிக அதிகமாகவும் இருக்கும். சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்பை தள்ளிப் போடுவதற்கு, வெறும் வயிற்றில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, 100 மி.கி., மற்றும் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 140 மி.கி., என்ற அளவில் இருக்க வேண்டும். இத்துடன் ஏஞஅ1ஞி யின் அளவு, 6.5 என்ற அளவில் இருக்க வேண்டும்.
அதிக அளவில் காபி குடிப்பதால், உடலுக்கு பாதிப்பு ஏற்படுமா? பி.குமாரசாமி, வத்தலகுண்டு
காபி குடிப்பதால், 'அட்ரினலின்' நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது. இதனால், சுறுசுறுப்பு கிடைக்கிறது. இது சில நிமிடங்களுக்குத் தான் நீடிக்கும். தற்போதுள்ள நவீன மருத்துவ ஆய்வின்படி, காபி குடிப்பதால் சர்க்கரை நோய் வரும் தன்மை, சிறிதளவு குறைக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. மேலும், மற்றொரு நன்மையாக, 'ஸ்ட்ரோக்' வரும் தன்மையும் சிறிதளவு தடுக்கப்படுகிறது. நம் வழக்கப்படி, காபியில் சர்க்கரையை கலந்து குடிப்பது தவறானது. தினமும், காலையில் 1 கப், மாலையில் 1 கப் காபி தாராளமாக குடிக்கலாம். அதேசமயம், அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு என்பது, காபிக்கும் பொருந்தும்.
ஸ்டேட்டின் மாத்திரையால் சர்க்கரை நோய் ஏற்படுமா? வி. ஜெயபாலன், அருப்புக்கோட்டை
இதய மருத்துவத்தின் மிக அற்புதமான கண்டுபிடிப்பு, இந்த, ஸ்டேட்டின் மாத்திரை. இது, ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. ரத்தக் குழாய்களுக்கு, பல வழிகளில் பலனளிக்கிறது. குறிப்பாக, மாரடைப்பு, பக்கவாதம் வராமலும் பாதுகாக்கிறது. இம்மாத்திரையால் ஏற்படும் பக்க விளைவுகள், மிகமிகக் குறைவு. இம்மாத்திரையால் கல்லீரலில் லேசான பாதிப்பு ஏற்படலாம். ஆனால், இம்மாத்திரையை நிறுத்தியதும், அது சரியாகி விடும். சர்க்கரை நோயை பொறுத்தவரை, 'ஸ்டேட்டின்' மாத்திரையை அதிக அளவு எடுத்தால், சிலருக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு சிறிதளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. ஸ்டேட்டின் மாத்திரை, அதனால் ஏற்படும் பக்கவிளைவைவிட, பல ஆயிரம் மடங்கு நன்மையே தருகிறது. எனவே நீங்களாகவே இந்த மாத்திரையை நிறுத்தவோ, குறைக்கவோ கூடாது.
எனக்கு 7 ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பு உள்ளது. தற்போது 150/ 100 என்ற அளவில் உள்ளது. நான் என்ன செய்வது? கே. குணராஜன், கம்பம்
ரத்தக்கொதிப்பு, 150/100 என்பது, மிக அதிக அளவு. தற்போதுள்ள மிகநவீன மருத்துவ வழிகாட்டுதல்படி, எந்த வயதிலும், எந்த நேரத்திலும், ஒருவருக்கு, ரத்தஅழுத்தத்தின் அளவு, 140/90க்கு கீழ், 120/80 என்ற அளவில் இருந்தாக வேண்டும். எனவே டாக்டரை அணுகி, ரத்த அழுத்தத்தின் அளவை குறைக்கப் பார்க்க வேண்டும். தற்போது ரத்தக் கொதிப்பிற்கு, பக்க விளைவு இல்லாத, மிக நல்ல மருந்துகள் உள்ளன. இதனுடன் உணவில் உப்பு, எண்ணெயைக் குறைத்து, காய்கறி, பழங்களை அதிகரிக்க வேண்டும். மேலும் மனதை நிம்மதியாக வைத்துக் கொள்வதுடன், தினமும் நடைப் பயிற்சி செய்வதும் அவசியம்.
- டாக்டர் விவேக்போஸ்,
மதுரை.
