PUBLISHED ON : ஜூன் 28, 2015

குளிர்காலம் துவங்கியுள்ளதால், பருகும் குடிநீர் முதல் அனைத்து உணவுகளிலும் பாதுகாப்பை பின்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது. டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல், தொற்று நோய்கள் உட்பட பல்வேறு நோய்கள் எளிதில் தாக்கக் கூடியது குளிர் மற்றும்
மழைக்காலத்தில்தான். இதில் பெரிதும் பாதிக்கப்படுவது குழந்தைகளே. இதற்கு, பண்டை காலங்களில் பயன்படுத்தப்பட்ட மூலிகைகளை, மருந்தாக ஏற்றுக்கொள்வதே சிறந்த தீர்வோடு, முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவும் உள்ளது.
துளசி: துழாய் என்பதே இதன் தமிழ்ச்சொல். மருவி துளசி என்றாகியுள்ளது. இதில், நல்துளசி, நிலத்துளசி, நாய்த்துளசி, கல்துளசி, முள்துளசி, செந்துளசி, கருந்துளசி, உட்பட பல்வேறு வகைகள் உள்ளன. தமிழகத்தில் பெரும்பான்மையாக காணப்படுவது நல்துளசியே.
துளசியின் இலைச் சாற்றை இரண்டு துளிகள், மூக்கின் நாசிகளில் விட, சளி பிரச்னையால் ஏற்பட்ட மூக்கு அடைப்பு நீங்கிவிடும். துளசி இலைகளை வெந்நீரில் போட்டு நீராவி பிடிப்பதால், மூக்கடைப்பு, நீர்க்கோவை தலைவலி, உள்ளிட்ட பிரச்னைகள் குணமாகும்.
துளசி இலைப்பொடியை தேனில் கலந்து உண்ணுவது மற்றும் அதிமதுரம், தூதுவளைப் பொடிகளை கலந்து உண்ணுவதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். துளசிச் செடியின் விதையை நீரில் கலந்து, சில நாட்கள் உண்பதால், மண்குத்தி நோய், குத்திருமல் உள்ளிட்ட பிரச்னைகள் வராது.
மணத்தக்காளி: கீரை வகைகளில் இதன் மருத்துவ குணம் மிகவும் அரியது. எந்த வகையான நிலத்திலும் எளிதாக வளரும் தன்மை கொண்டது. மலச்சிக்கல், பசிமந்தம், சளி, தீராத இருமல், குளிரால் சரியாக வியர்க்காமல் இருப்பது, உடற்சூட்டினால் சளித்தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு ஒரே மருந்தாக இருப்பது இக்கீரை. தவிர, நுரையீரலில் சளி கோர்த்துக் கொள்வதால், ஏற்படும் சுவாச கோளாறுகளுக்கும் மணத் தக்காளி, தீர்வாக உள்ளது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி, சளி, காய்ச்சலை வரவிடாமல் தவிர்ப்பதற்கும் இக்கீரை உதவுகிறது.
இக்கீரையின் சாற்றினை காலை மற்றும் மதிய வேளைகளில் குழந்தைகளுக்கு கொடுப்பதால், வறட்டு இருமல் குணமாகிவிடுவதோடு, பிற நோய்கள் வராமலும் தவிர்க்கிறது. சாறாக பருக இயலாத குழந்தைகளுக்கு, உணவு பொருட்களோடு கலந்து கொடுக்கலாம். நாள்தோறும் இதனை பருகுவதால், நன்றாக மலம் கழியும். நுரையீரலில் தேங்கிய சளி கரைந்து, சிறுநீரில் வெளியேறிவிடும். குழந்தைகளுக்கு நன்றாக உறக்கம் வருவதற்கும், இக்கீரையை உணவாக பயன்படுத்தலாம். வாய்ப்புண், வயிற்று புண்களையும் இக்கீரை குணமாக்குகிறது.
