தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொசுக்கடியால் யானைக்கால் நோய் வரலாம்... எச்சரிக்கை!

கொசுக்கடியால் யானைக்கால் நோய் வரலாம்... எச்சரிக்கை!

கொசுக்கடியால் யானைக்கால் நோய் வரலாம்... எச்சரிக்கை!


PUBLISHED ON : பிப் 02, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 02, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எந்தவிதமான வேறுபாடுமின்றி, ஏழை, பணக்காரர், சிறியவர்கள், பெரியவர்கள், கிராமம், நகரம், ஆண், பெண் என்ற பேதமின்றி, எல்லா தரப்பு மக்களையும் பாதிக்கும் ஒன்றாகும். குறைந்தது ஆறு மாதம் முதல், ஓர் ஆண்டிற்குப் பின்தான், இதன் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்

பெரும்பாலானோர், கொசுக்கடியை பற்றி, கவலைப்படாமல் வாழ்ந்து வருகின்றனர். வீட்டைச் சுற்றி, பல பகுதிகளில் நீர் தேங்கி இருப்பின், அது கொசு பெருக வழிவகுக்கும்.

'எங்களை, கொசு ஒன்றும் செய்யாது. ரொம்ப நாளாக இப்படித் தான் நாங்கள், கண்டு கொள்ளாமல் வாழ்கிறோம்' என்பவர்கள், ஒரு முக்கிய உண்மையை உணராமல் உள்ளனர். ஆம்... கொசு, மலேரியாவை மட்டும் பரப்புவதில்லை; யானைக்கால் நோயையும் உண்டாக்கும்.

அரசுக்கு சவால்: குணப்படுத்த முடியாத நோய்கள் என்ற வரிசையில், யானைக்கால் வியாதியும், மிகவும் முக்கியமான ஒன்று. எனவே தான், இந்திய அரசு, இந்த வியாதியை முற்றிலும் ஒழிக்க, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஆனால், இன்று வரை ஒழிக்க முடிய வில்லை. இந்நோய், இந்திய மருத்துவத் துறைக்கு, ஒரு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

பாகுபாடு இல்லை: இந்நோய், எந்தவிதமான வேறுபாடும் இன்றி, ஏழை, பணக்காரர், உயர்ந்தோர், தாழ்ந்தோர், சிறியவர்கள், பெரியவர்கள், கிராமம், நகரம், ஆண், பெண் என்ற பேதமின்றி, எல்லா தரப்பு மக்களையும் பாதிக்கும் ஒன்றாகும். இந்த நோய், மற்ற நோய்களைப்போல் அன்றி, தொற்று ஏற்பட்ட பின், குறைந்தது ஆறு மாதம் முதல், ஓர் ஆண்டிற்குப் பின், இதன் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்.

அறிகுறிகள்: இந்நோய் தொற்று ஏற்பட்ட ஒருவரின் கால்கள், கைகள், மார்பகங்கள், விதைப்பை மற்றும் ஆண்குறி போன்ற உறுப்புகளைப் படிப்படியாக பாதிப்படையச் செய்யும். மேற்கூறிய பகுதிகளில், இந்நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்குமேயானால்:

* தொற்று ஏற்பட்ட பின், நாளடைவில், நிண நீர் திசுக்களின் நாளங்கள் அடைபட்டு, அப்பகுதியில் ரத்த நாளங்கள் பாதிப்படைந்து, வீக்கம் ஏற்பட்டுவிடும்.

* பின் அந்த குறிப்பிட்ட பகுதி, கெட்டியாகவும், வீக்கத்துடனும் காணப்படும்.

* அந்த பகுதி, நாள்பட்ட பாதிப்பிற்குப் பின், உணர்வின்றி மரத்தும் காணப்படும்.

* வீங்கிய பகுதிகளில், தோலின் நிறம் மாறியும், தோல் உரிந்து இரணம் ஏற்பட்டும் காணப்படும்.

* இறுதியில் வீங்கிய பகுதிகளில், சதையில் இரணம் ஏற்பட்டு, ரத்தம் மற்றும் சீழ் வடியலாம்.

* மேற்கூறிய அறிகுறிகளுடன், காய்ச்சல் அடிக்கடி வரலாம்.

வருவதற்கான காரணங்கள்: இந்நோய் ஒருவகை ஒட்டுண்ணி தொற்று நோயாகும்.

'உசெரேரியா பாங்க்ரோப்டி' எனப்படும் ஒட்டுண்ணியால், 'பைலேரி' எனப்படும் கொசுவின் மூலமாக பரவுகிறது.

தொற்று ஏற்பட்ட ஒருவரின் ரத்தத்தை, கொசு உறிஞ்சி மற்றொருவரை கடிக்கும் போது கடித்த நபருக்கும், தொற்று ஏற்பட்டுவிடும்.

இவ்வாறு, மனிதன் - கொசு - மனிதன் என, சுழல் முறையில் நோய் தொற்று ஏற்படுகிறது. மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறையும் போது, இந்நோய் தொற்று ஏற்பட்டு, அதற்கே உரித்தான தாக்கத்தை உண்டாக்கும்.

ஒட்டுண்ணி பெருகக் காரணம்:

* சரியாக வெளியேற்றப்படாத, தேங்கிக் கிடக்கும் கழிவுநீர் தேக்கங்கள்.

* சுகாதாரமற்ற, எப்போதும் ஈரப்பதம் அதிகமுள்ள சீதோஷ்ண நிலை போன்ற சூழ்நிலைகளில், இந்த ஒட்டுண்ணி பெருக வாய்ப்பு அதிகம்.

மேற்கூறிய அறிகுறிகள் தெரியுமே யானால், ரத்தப் பரிசோதனை மூலம், இந்நோயை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். நல்ல சுகாதாரத்தைக் கடைபிடிப்பதன் மூலம், இந்நோய்த் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.

தடுப்பு வழிகள்:

நோய் நம் உடலில் இருக்கிறதா என்பதை, மேற்சொன்ன தன்மைகளில் இருந்தும், ரத்தப் பரிசோதனை மூலமும், தெரிந்து கொள்ளலாம்.

நல்ல சுகாதாரமான இடத்தில் வசிப்பதன் மூலமும், எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரித்து, ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை உருவாக்கி கொள்வதன் மூலமும், இந்த நோய் வராமல் தடுக்கலாம்.

தேவையான மூலிகைகள்:

வேப்பிலை, வில்வம், துளசி, அருகம்புல், அத்தியிலை, குப்பைமேனி, தும்பை, வாழைத்தண்டு, மிளகு, பூவரசன், நெல்லி, முடக்கத்தான், வல்லாரை, வாதநாராயணன், முருங்கையிலை, வெற்றிலை போன்றவற்றை பறித்து, தனித்தனியாக வெயிலில் உலர்த்தி காயவைத்து, பின்னர் பொடி செய்து, சம அளவில் ஒன்றாக கலந்து, ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின், இவற்றில் இருந்து இரண்டு ஸ்பூன் தூள் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, உணவுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக, தினமும் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளையும் உட்கொள்ள வேண்டும்.

இந்த மூலிகைகள் ரத்தத்தை சுத்தப்படுத்தும், விஷத்தை முறிக்கும், நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும், வீக்கம், வலி, காய்ச்சல் போன்றவை வராமல் தடுக்கும். ரத்த ஓட்டத்தை அதிகமாக்கும். இதனை நோயாளிகள் நோய் குணமாகும் வரை உட்கொள்ளலாம். இந்நோய் வராமல் இருக்க விரும்புபவர்களும், உட்கொள்ளலாம்.

உணவு முறை: தினம் ஒருவேளை, பச்சையாக உட்கொள்ளும் பழங்கள், காய்கள், பழ ஜூஸ்கள், சாலட் போன்றவற்றை, தேவையான அளவு உட்கொள்ள வேண்டும். நீர் உள்ள பழங்கள், காய்கள் நல்லது. தேங்காய், திராட்சை, மாதுளை, தர்பூசணி, ஆரஞ்சு, சாத்துக்குடி, மாம்பழம், இளநீர், வெள்ளரிக்காய், கேரட், வெண்டை, வாழை, பேரீச்சை, கொய்யா, பப்பாளி, நுங்கு போன்றவற்றை சாப்பிடலாம். மற்ற இரண்டு நேரம் வழக்கமான சமைத்த சைவ உணவு உட்கொள்ளலாம். இதில், 60 சதவீதம் உணவு, 40 சதவீதம் அளவு காய்கள், கீரைகளாக உட்கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சிகள்: கால்கள் நன்றாக இயங்கும் வகையில் உடற்பயிற்சிகள் செய்தல் நல்லது. நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், நின்ற இடத்தில் குதித்தல், கயிறாட்டம், மெல்லோட்டம், மூச்சுப் பயிற்சி, உட்கார்ந்து எழுதல், நீந்துதல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை, தினம், 30 நிமிடம் காலை, மாலை செய்தால், நல்ல பலன் கிட்டும். உடற்பயிற்சி செய்வதால், உடல் உறுதி அடையும். ரத்த ஓட்டம் அதிகமாகும். உடலில் உள்ள கழிவுகள், எளிதில் வெளியாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். மன இறுக்கம் குறையும். தொற்று நோய்களால், சாதாரணமாக உடல் பாதிப்பு அடையாது.

மற்ற தகவல்கள்: சுற்றுப் புறத்தையும், வீட்டையும், எப்போதும் துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல காற்றோட்டமான இடங்களில் வசிக்க வேண்டும். உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் புகைத்தல், மது வகைகள், புகையிலை, பான்பராக் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். உணவில், உப்பின் அளவை குறைத்து உட்கொள்ள வேண்டும். கால்களுக்கு ஆயில் மசாஜ், வெந்நீர் ஒத்தடம், மண் பற்று போன்றவை செய்யலாம். இதனால், நல்ல பலன் கிட்டுவது உறுதி. எத்தனையோ வியாதிகள் இருந்தாலும், பலரிடம் இருந்து நம்மைப் பிரித்து பார்க்க வைக்கும் அதிபயங்கர யானைக்கால் வியாதி, வந்த பின் வருந்துவதை விட, இன்றே, கொசுக்களை வெகுதுாரம் துரத்துவோம்.

டாக்டர் பா.இளங்கோவன்,

கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us