தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்


PUBLISHED ON : மே 31, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 31, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தவச்செல்வன், மதுரை: எனது நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை நான் தெரிந்து கொள்ள வழி இருக்கிறதா?

நுரையீரல் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ள 'ஸ்பைரோமெட்ரி' கருவியின் மூலம் சுவாச திறன் அறியும் சோதனை செய்ய வேண்டும். மார்பு எக்ஸ்ரே பரிசோதனையிலும் நுரையீரல் பாதிப்பு உள்ளதா என கண்டறியலாம். பொதுவாக நுரையீரல் செயல்பாடு, எப்.இ.வி.1எனும் குறியீடு 35 வயதிற்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் 25 - 30 எம்.எல். குறைய வாய்ப்புண்டு. 70 வயதை தாண்டும் போது ஒவ்வொரு ஆண்டும் 60 எம்.எல்., அளவு குறையலாம். தங்களின் உயரம், வயது, பாலினம், வேறுபாட்டை பொறுத்து இக்குறியீடு மதிப்பும் வேறுபடும். வயது, இனம், உயரத்தை வைத்து நுரையீரல் செயல்பாடு எதிர்பார்ப்பை அறியலாம்.

'ஸ்பைரோமெட்ரி' பரிசோதனை மூலம் இந்த குறியீட்டு மதிப்பை சுவாச செயல்திறன் எவ்வளவு மில்லி, சதவீதம் மூலம் அறியலாம். இதில் குறைபாடு இருப்பின் டி.எல்.சி.ஓ., எப்.இ.என்.ஓ., ஏ.பி.ஜி., ஆறு நிமிட நடை பரிசோதனை மூலம் சுவாச செயல்திறனை அறியலாம்.

- டாக்டர் பி.பிரேம் ஆனந், நுரையீரல் நோய் சிறப்பு நிபுணர், மதுரை.

ஸ்ரீ பாலா, நத்தம்: நான் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவி. பயிற்சி தேர்வு ஐந்து மணி நேரம். தலை குனிந்தபடியே எழுதியதில் பின்கழுத்து பிடித்துக்கொண்டது. மாத்திரை எடுத்துக்கொண்டாலும் கழுத்து வலி குறையவில்லை. வலி குறைய நான் என்ன செய்ய வேண்டும்?

கழுத்து வலிக்கு குனிந்து தேர்வு எழுதுவது மட்டும்தான் காரணமா மற்ற காரணங்களும் உண்டா என்பதை மருத்துவ பரிசோதனை செய்து தெரிந்து கொள்வது நல்லது. உதாரணமாக உயரமான தலையணைகளை வைத்து அதிக நேரம் படுத்துக்கொண்டு படிப்பது, 'டிவி' பார்ப்பது, இரவில் அப்படியே துாங்குவது, கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடையில் கைபேசி வைத்து பேசுவது போன்றவையும் காரணங்களாக சொல்லலாம். இந்த பழக்கங்கள் இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் கழுத்து வலிக்கு தசைப்பிடிப்பாக இருக்கும் பட்சத்தில் கழுத்துக்கு போதிய ஓய்வு கொடுத்தால் வலி குறையும்.

கழுத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். கழுத்து, தோள்பட்டை தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் வலியைக் குறைக்க உதவும். உடனடி நிவாரணத்துக்கு இயன்முறை சிகிச்சை சிறந்தது. கழுத்து குனிந்த நிலையில் அமர்ந்து நீண்ட நேரம் பணிபுரிவதை தவிருங்கள். அப்படி பணிபுரிவது கட்டாயம் என்றால் இடையிடையே கழுத்தை நிமிர்த்தி, பக்கவாட்டிலும் மேலும் கீழும் அசைத்துக்கொள்ளுங்கள். படுத்து துாங்கும்போது மென்மையான, கனமற்ற தலையணையைப் பயன் படுத்துங்கள்.

- டாக்டர் ரவி, அரசு ஓய்வு மருத்துவர், நத்தம்.

எஸ்.மீனாட்சி சமதர்மபுரம் தேனி: எனது சகோதரிக்கு 6 மாதம் முன்பு சிசேரியன் ஆப்பரேஷன் மூலம் முதல் குழந்தை பிறந்தது. அவருக்கு கடந்த சில மாதங்களாக முதுகில் வலி உள்ளதாக கூறுகிறார். எதனால் இந்த வலி ஏற்படுகிறது. இதற்கு தீர்வு கூறுங்கள்?

பெண்களுக்கு பிரசவத்தின்போது கருப்பை வாய் (செர்விக்) தசைகள் விரிந்து கொடுப்பதால் அதன் தாக்கம் முதுகுத்தண்டில் இருக்கும். ஆப்பரேஷனுக்காக முதுகுபகுதியில் ஊசி செலுத்துவதால் பிரசவத்திற்கு பின் இரண்டு ஆண்டுகள் வரை முதுகில் வலி இருக்கும். மகப்பேறு டாக்டர் மூலம் முறையான சிகிச்சை பெறுவதாலும், உடற்பயிற்சி செய்வதாலும் வலி குறையும். விபத்து காரணங்களால் தான் முதுகுத்தண்டு அதிகம் பாதிக்கப்படும்.

- டாக்டர் பிரேம்குமார், தலைவர், முடநீக்கியல் துறை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தேனி.

கார்த்திகேயன், ராமநாதபுரம்: எனது தந்தைக்கு மலக்குடல் புற்று நோய் இருந்தது. மரபியல் ரீதியாக எனக்கும் புற்றுநோய் வருமா. எவ்வாறு தற்காத்துக் கொள்வது?

இன்றைய உணவு பழக்க மாற்றத்தால் குடல் சார்ந்த நோய்கள் அதிகரித்துள்ளது. உணவு, மரபியல் ரீதியாக மலக்குடல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பெற்றோருக்கு மலக்குடல் புற்று நோய் இருந்தால் 30 வயதுக்கு மேல் அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மலத்தில் ரத்தம் கலந்து செல்வது, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, அடிவயிற்றில் வலி, திடீர் உடல் எடை குறைவு போன்ற அறிகுறிகள் தென்படும்.

தற்போது 30 முதல் 50 வயதிற்குட்பட்டவர்களுக்கு மலக்குடல் புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது. ஆண்களுக்கு மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்ற காரணங்களாலும் வரும். அதிகளவு டீ, காபி குடிக்க கூடாது. நொறுக்கு தீனிகளை தவிர்க்க வேண்டும். ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் வைட்டமின் 'சி' உள்ள பழங்கள், நார்ச்சத்து, புரதசத்து உள்ள காய்கறிகள், கீரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும். அடிக்கடி வரும் வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உரிய சிகிச்சை எடுக்க வேண்டும். ஆரம்பத்தில் புற்று நோய் இருப்பதை கண்டறிந்தால் எளிதாக கட்டுக்குள் கொண்டு வர முடியும்.



-டாக்டர் எம்.முல்லைவேந்தன், பொது அறுவை சிகிச்சை நிபுணர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
.



எஸ்தர், ராஜபாளையம்: எனக்கு வயது 45, கடந்த 5 மாதங்களாக மூட்டுகளில் வலி தொடங்கி, உடல் முழுவதும் பரவி வலி அதிகமாகிறது. 'ருமாட்டைடு ஆர்த்தரிட்டிஸ்' என தெரிவித்துள்ளனர். சரியான தீர்வு கூறவும்?


ஆண்டாண்டு காலமாக பின்பற்றி வந்த உணவு உள்ளிட்ட வாழ்வியல் முறை மாற்றத்தை இப் பிரச்னைக்கு காரணமாக கூறலாம். அதிகமான கொழுப்பு சேர்க்கப்பட்ட, மாவு சத்து நிறைந்த சமச்சீரற்ற உணவு, தேவையான ஓய்வு, மன ஆரோக்கியம் இவற்றின் மாறுபாடு நோய் பாதிப்பிற்கு அடிப்படையாக மாறுகிறது. நார்ச்சத்து இல்லாத பாலிஷ் செய்யப்பட்ட தானியங்கள், இயல்புக்கு மீறிய உழைப்பு உணவு போன்ற மாற்றங்கள் கண் முன் தெரிகிறது.

முதல் கட்ட சிகிச்சையாக சரிவிகித உணவு, மூட்டுகள் பலம் பெற தொடர் யோகா, மூச்சுப் பயிற்சி, உடல் பாதிப்பை சரி செய்ய புரதச்சத்து, விட்டமின் உணவுகள், அக்குபஞ்சர், எலக்ட்ரோ தெரபி, பிசியோதெரபி, அரோமா தெரபி, மூலிகை மருந்துகள் இவற்றின் மூலம் கட்டுப்படுத்தி தொடர் சிகிச்சையில் தீர்வு காணலாம்.

- டாக்டர் மணிக்கண்ணன், ஆயுஷ் மருத்துவ அதிகாரி, அரசு மருத்துவமனை, ராஜபாளையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us