PUBLISHED ON : ஜூலை 12, 2015

சிறந்த மூலிகைகளில் ஒன்றாக விளங்கும் நன்னாரியில், பல நோய்களை போக்கும் மருத்துவ குணம் உள்ளது. அதன் இலைகள், வேர், பட்டை என, அனைத்துமே பயன்தரும் மருந்தாக விளங்குகின்றன. குறிப்பாக ஒற்றைத்தலைவலி, செரிமானம், பால்வினை நோய் போன்றவைக்கு நன்னாரி நல்ல மருந்தாக பயன்படுகிறது. சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஷ்ணத்தை தணித்து, உடம்பை உரமாக்கும் தன்மை நன்னாரியில் உள்ளது.
நன்னாரி வேர், 5 கிராம் எடுத்து நன்கு அரைத்து, 200 மில்லி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், நீர்கடுப்பு, வறட்டு இருமல் ஆகியவை சரியாகும். ஆண்மை பெருக நன்னாரி வேரை வேக வைத்து, அந்த நீரை இளம் சூட்டில் அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
உடல் வியர்வை நாற்றம் நீங்க மிளகு, உப்பு, புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய் சேர்த்து வதக்கி, 90 நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடல் நாற்றம் எப்போதும் இருக்காது.
நன்னாரி வேரை நீரில் ஊற வைத்து அரைத்து, தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், உடல் நன்கு வளர்ச்சி அடையும். நாள் பட்ட இருமல் தொல்லை நீங்கும். காய்ந்த நன்னாரி வேரை பொடியாக்கி, சோற்றுக் கற்றாழை சோற்றுடன் சேர்த்து உண்டால், விஷக்கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.

