PUBLISHED ON : மே 12, 2015

ஒரு நிகழ்வு அல்லது நபர் பற்றிய எண்ணம், அபிப்ராயம் மற்றும் மதிப்பீடு ஆகியவைகளைத் தான், கருத்து என்று சொல்கிறோம். ஒருவரைப்பற்றி எந்தவிதமான கருத்தையும் மனதில் கொள்ள, அனைவருக்கும் உரிமை உண்டு. அதே நேரம், அக்கருத்தை பகிர்ந்து கொள்ள, வெளிப்படுத்த உரிமை உண்டா என்று கேட்டால், முழு உரிமை இல்லை.
கட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு கிடையாது. ஆனால், கருத்தை தெரிவிக்க, வெளிப்படுத்த, விமர்சிக்க, கட்டுப்பாடற்ற உரிமை இல்லை. இதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். கருத்துச் சுதந்திரம் என்றாலும் அல்லது வேறு எந்த வகை சுதந்திரம் என்றாலும், அதற்கு எல்லையும் கட்டுப்பாடும் உண்டு.
ஒருவரது கருத்தால், உடல் பொருள் அல்லது மானம்
மரியாதைக்கோ பங்கம் ஏற்பட்டால், அதற்குப் பெயர் கருத்துச் சுதந்திரம் அல்ல. இதுதான் நல்லது, இதுதான் கெட்டது என்று கூறி, அதற்கான வாதங்களை எடுத்து வைத்தால், அது கருத்து சுதந்திரம் எனலாம்.
தனிப்பட்ட எந்த ஒரு கருத்தையும், தம் மனதில் வைத்துக் கொள்ள எப்படி உரிமை உள்ளதோ, அதுவும் மாறுபட்ட கருத்தை வைத்துக் கொள்ள அனைவருக்கும் சுதந்திரம் உண்டு. அதேசமயம், விமர்சிக்கும்போது, வெளிப்படுத்தும்போது, அதனால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
எந்த விதமான விபரீதங்களையும், சங்கடங்களையும் தனி நபருக்கோ, சமுதாயத்திற்கோ ஏற்படுத்தக் கூடாது. எனவே, கட்டுப்பாடற்ற கருத்துச் சுதந்திரம் என்றுமே, யாருக்குமே கிடையாது என்பது தான் நிதர்சனமான உண்மை. அதேசமயம், மாற்றங்கள் ஏற்பட, தீர்வுகள் உறுதிபட, விமர்சனங்கள் அவசியம் தேவை. எனவே பொறுப்பான கருத்துச் சுதந்திரம் அவசியம் தேவை; பொறுப்பற்ற கருத்துச் சுதந்திரம் தேவையில்லை.
- மா. திருநாவுக்கரசு, மனநல மருத்துவர், மனநலம் கிளினிக், சென்னை.
94440 34647