PUBLISHED ON : மே 15, 2011
உணவில் அறுசுவை இருந்தாலும், அருகில் அப்பளத்தை கடித்துக் கொண்டு சாப்பிடும் சுவைக்கு ஈடில்லை. வடமாநிலங்களில் தயாரிக்கப்படும், மசாலா அப்பளத்தை, உருளைக்கிழங்குடன் சுருட்டி பொறிக்கப்படும் 'மசாலா பப்பட் ரோல்' பார்த்ததுமே, நாவில் நீர் ஊறவைக்கும். மாலைநேர சிற்றுண்டியாக சாப்பிடத் தூண்டும், அப்பளம் தயாரிக்க கற்றுத் தருகிறார், மதுரை ஹெரிடேஜ் ஓட்டல் சமையல் நிபுணர் சுரேஷா குமார்.
தேவையானவை :
மசாலா அப்பளம் - இரண்டு (கடையில் கிடைக்கும்)
வேகவைத்த உருளைக்கிழங்கு - 30 கிராம்
துருவிய பனீர் - 10 கிராம்
சாட் மசாலா - ஒரு கிராம்
மிளகாய்ப் பொடி - இரண்டு கிராம்
உப்பு - இரண்டு கிராம்
சீரகத் தூள் - ஒரு கிராம்
பொடியாக நறுக்கிய மல்லி தழை - ஒரு கிராம்
வெண்ணெய் - ஒரு கிராம்
எண்ணெய் - பொறிப்பதற்கு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, நன்கு சூடானதும், அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, மசாலா அப்பளங்களை அதில் அமிழ்த்த வேண்டும். இரண்டு நிமிடத்தில், அப்பளம் இலகுவாக வளைந்து கொடுக்கும் அளவு நெகிழ்ந்து விடும். அப்பளத்தை எடுத்து வெளியில் வைக்க வேண்டும். வெண்ணெயை லேசாக சூடாக்க வேண்டும். வேகவைத்த உருளைக்கிழங்கு மசித்து வைத்து அதனுடன், வெண்ணெய் மற்றும் அனைத்து பொருட்களையும் மென்மையாக பிசைய வேண்டும். சமதளத்தில் அப்பளத்தை வைத்து அதன் நடுவில் மசாலா கலவையை பரப்பி அப்படியே உருட்டி, ஓரங்களை தேய்த்து மூடவேண்டும். இதை பிரிஜ்ஜில் வைத்து 10 நிமிடங்கள் வைத்து எடுத்து, காய்ந்த எண்ணெயில் பொறித்தெடுக்க வேண்டும். வெளியே மொறுமொறுப்பாக, உள்ளே மசாலா கலவையுடன் சுவை தூக்கலாக இருக்கும்.
