பாதித்தால் பயப்படத் தேவையில்லை - சர்க்கரை நோயாளிகளுக்கு அறிவுரை
பாதித்தால் பயப்படத் தேவையில்லை - சர்க்கரை நோயாளிகளுக்கு அறிவுரை
PUBLISHED ON : மே 31, 2021

கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் சர்க்கரை நோயாளிகள் பயம் கொள்ளத் தேவையில்லை என, கோவை அரசு மருத்துவமனை சர்க்கரை நோயியல் துறை தலைவர் வென்கோ ஜெயபிரசாத் கூறினார்.
கொரோனா தொற்றால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டாலும், அதிக பாதிப்பை சந்திப்பது சர்க்கரை நோயாளிகளே. முன்னெச்சரிக்கை குறித்து விளக்குகிறார், கோவை அரசு மருத்துவமனை சர்க்கரை நோயியல் துறை தலைவர் வென்கோ ஜெயபிரசாத்.
கொரோனா வராமல் தடுக்க சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?
அனைவருக்கும் ஒரே விதிதான். தனித்திருப்பது, அதிகளவில் கூட்டம் கூடும் இடங்களை தவிர்ப்பது நல்லது. அதன் பின் சமூக இடைவெளி, முகக்கவசம், சானிடைசர் ஆகிய மூன்றும் அவர்களுக்கு முக்கியம். அவர்களுக்கு நோய் வருவது தடுக்கப்படுவதுடன், அவர்கள் மூலம் பிறருக்கு பரவுவதும் தடுக்கப்படும்.
கொரோனா வந்த பின் சர்க்கரை நோயாளிகள் செய்ய வேண்டியது என்ன?
சர்க்கரை நோயாளிகளுக்கு கொரோனா வந்தால் பாதிப்பு தீவிரமாக இருக்கும். அதற்காக கொரோனா வந்தவுடன் சர்க்கரை நோயாளிகள் பயப்படக்கூடாது. பயமே மேலும் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். கொரோனா பாதிப்பில், சாதாரணம், தீவிரம், அதிதீவிரம் என்ற மூன்று நிலைகள் உள்ளன. சாதாரண பாதிப்பில், பெரியளவில் பாதிப்பு இருக்காது. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். சர்க்கரை கட்டுப்பாட்டை பின்பற்றினால், எவ்வித பிரச்னையும் இருக்காது.
டாக்டர்கள் குறிப்பிடும் அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். தீவிர பாதிப்பில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும். சிகிச்சையின் போது டாக்டர்கள் பரிந்துரைக்கும் நடைமுறைகளை பின்பற்றினாலே குணமடைந்து விடலாம். சர்க்கரை அதிகமாகும்போது நுரையீரல் தொற்று அதிகரிக்கும். சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். அதிதீவிர நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டியவர்கள்.
சர்க்கரை நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோய் வருவதை தவிர்க்க முடியுமா?
கட்டாயம் தவிர்க்கலாம். சர்க்கரை அளவு அதிகரிப்பதால் தான், கருப்பு பூஞ்சை தாக்குதல் ஏற்படுகிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காலத்தில், சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாமல் அதிகரிக்கும்போது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதன் காரணமாக, கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படும். டாக்டர்களின் சிகிச்சைக்கு ஒத்துழைத்தால் கருப்பு பூஞ்சை ஏற்படாது. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமே தீர்வு.
சர்க்கரை நோயாளிகள் தங்களது கொரோனா பாதிப்பு குறித்து எப்படி அறிந்து கொள்வது?
சர்க்கரை நோயாளிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் அளவை தெரிந்து கொள்வது கடினம். பொதுவாக, சர்க்கரை நோயாளிகளுக்கு எந்தவித அறிகுறியும் இன்றி கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. சர்க்கரை நோயாளிகளை பொறுத்தவரை கொரோனா, 'சைலன்ட் டிசிஸ்'. சின்ன அறிகுறி தென்பட்டாலும் உடனடியாக டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
கொரோனாவுக்கு பின் சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன?
மற்ற நோயாளிகளை விட, கொரோனா வந்து குணமடைந்த பின் அதிக பாதிப்புகளை எதிர்கொள்வது சர்க்கரை நோயாளிகளே. நுரையீரல் பாதிப்பு, இரண்டாவது முறை தொற்று ஏற்படுவது, கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவது என பல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். தலைவலி, கண்பார்வை மங்குதல், அசதி, காய்ச்சல், காது வலி ஆகியவை கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள். இவை தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மேலும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும்போதே டாக்டர்கள் பல அறிவுரைகள் வழங்குவர். அதை பின்பற்றி நடக்க வேண்டும். சர்க்கரை கட்டுப்பாட்டில் இம்மி அளவும் தடம் மாறக்கூடாது.
கொரோனாவுக்கு பின் சர்க்கரை நோயாளிகள் என்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்?
பிரத்யேக உணவுகள் என்பது இல்லை. சர்க்கரை கட்டுப்பாட்டுக்காக அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட உணவுகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். வழக்கமான உணவுகளை கடைபிடித்தாலே பிரச்னைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
கொரோனாவில் இருந்து குணமடைந்த பின், எந்த விஷயத்துக்காக டாக்டரை உடனடியாக அணுக வேண்டும்?
கொரோனாவிலிருந்து குணமடைந்த பின் சர்க்கரை நோயாளிக்கு மூச்சுத்திணறல் எந்த நிலையிலும் வரக்கூடாது. இரண்டாவதாக, தலைவலி, பார்வை மங்குதல், காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால், மூன்றாவதாக சர்க்கரை கட்டுக்கடங்காமல் சென்றால், உடனடியாக வீட்டின் அருகில் உள்ள டாக்டரிடம் காண்பிக்க வேண்டும். சர்க்கரை நோய் நிபுணரை தான் பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லை. எந்த ஒரு காரணத்துக்காகவும், டாக்டரை அணுகுவதை தள்ளிப் போடக்கூடாது.
