PUBLISHED ON : மார் 29, 2015
அதிரும் இசை கேட்கும் விருப்பமுடையவரா... காதில் ஹெட்போன் மாட்டி உச்ச பட்ச இசையைக் கேட்பவரா... திருவிழாக்களில்
கடவுளே பயந்து ஓடுமளவுக்கு, சத்தமாக பக்திப் பாடல்களை மெய்மறந்து கேட்பவரா... இவை காதைச் செவிடாக்கும் அபாயம் உண்டு என எச்சரிக்கிறது ஒரு ஆராய்ச்சி. குறிப்பாக, இன்றைய இளைஞர்களிடையே பரவி வரும் இரவு விடுதி ஆட்டங்களும், அதில் போதையுடன் கேட்கும், 100 டெசிபல் இரைச்சலும், உச்சஸ்தாயி இசையும், காதுகளை முடமாக்கிவிடுகிறதாம்.
அதிக சத்தத்துடன் இசை கேட்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும், முடியாத பட்சத்தில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இசைப் பிரியர்களை இந்த ஆராய்ச்சி கூறுகிறது.
இன்றைய இளைஞர்களின் காதில், ஆறாவது விரல் போல எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும் ஹெட்போன்களில், 80 டெசிபலுக்கும் அதிகமான சத்தம் வருகிறது எனவும், 80 விழுக்காடு இளைஞர்கள் அதிக சத்தத்தில் பாட்டு கேட்பதையே விரும்புகிறார்கள் எனவும், ஒரு ஆராய்ச்சி ஏற்கனவே முடிவு வெளியிட்டிருந்தது.
மொபைல்போன்களும், எம்.பி.,3 கருவிகளும், காதுகளைச் செவிடாக்கும் ஆபத்தை கூடவே சுமந்து வருகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதிக சத்தத்தில் பாடல் கேட்பது, தொடர்ச்சியாக நிறைய நேரம் பாடல் கேட்பது, அதிக சத்தம் ஏற்படுத்தும் பொது விழாக்கள், திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்து கொள்வது போன்றவற்றை தவிர்ப்பதே, காதுகளை காக்க நாம் உடனடியாக செய்ய வேண்டிய நன்மை.
