PUBLISHED ON : ஏப் 10, 2022

மிதமான, தீவிர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு, தொற்றுக்குப் பிந்தைய பக்கவிளைவாக, சர்க்கரை கோளாறு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனாவுக்கு பிந்தைய நல வாழ்வு மையம், அரசு ஓமந்துாரார் மருத்துவமனை வளாகத்தில், கடந்த 10 மாதங்களாக செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுக்கு பின் ஏற்பட்ட பக்க விளைவுகளுக்கு, 3,500க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று உள்ளனர்.
தொற்று பாதிப்பால், புதிதாக ஏதாவது உடல் கோளாறுகள் ஏற்பட்டு உள்ளதா என்பதை அறிய, என் தலைமையில் பயிற்சி டாக்டர்கள் சஹானா சீனிவாசன், காயத்ரி, அனன்யா ஆய்வை மேற்கொண்டோம்.
ஆய்வின் முடிவுகள்
கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன், சர்க்கரை கோளாறு இல்லை என்பது உறுதியானவர்களில் 500 பேருக்கு, தொற்றுக்குப் பின், சர்க்கரை கோளாறு இருப்பது தெரிய வந்தது. இவர்களில், 302 பேர் ஆண்கள்; 198 பேர் பெண்கள்.
இதில், 55.4 சதவீதத்தினர், 40 - 49 வயதிற்கு உட்பட்டவர்கள். 20 - 29 வயதிற்குட்பட்ட 47 பேரில், ஒன்பது பேருக்கு ரத்த சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருந்தது. தொற்றுக்கு முன் இவர்களுக்கோ, இவர்களின் மரபணுவிலோ சர்க்கரை கோளாறு இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை.
வைரஸ் தொற்று ஏற்பட்டவுடன், புதிய வைரசை நோய் எதிர்ப்பணுக்கள் தீவிரமாக அழிக்கும் போது, செல்களையும் சேர்த்தே அழிக்கிறது. கணையத்தில் கொரோனா செல் இருந்தால், அதில் உள்ள திசுக்கள், பீட்டா செல்களையும் சேர்த்தே அழிப்பதால், இன்சுலின் சுரப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. கொரோனா சிகிச்சையின் போது தரப்படும், 'ஸ்டிராய்டு' மருந்துகளாலும், ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம். எதிர்பாராத விதமாக கொரோனா பாதிக்கும் போது, தினசரி வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களால் மன அழுத்தம் ஏற்படுவதாலும் பாதிப்பு வரலாம்.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்ற தொற்றா கோளாறுகளும், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை பாதிப்பு போன்ற தொற்றும் நோய்களும் எதிர்காலத்தில் வரும் அபாயம் அதிகம்.
இது, எங்கள் மையத்தில் மட்டுமே நடந்த ஆய்வு. மற்ற அரசு மருத்துவமனைகள், தனியார் மையங்களில் செய்த ஆய்விலும், இதை போன்றே முடிவுகள் கிடைத்துள்ளன.
டாக்டர் ஆர்.ஜெயந்தி,
டீன்,
ஓமந்துாரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை, சென்னை
