PUBLISHED ON : டிச 13, 2015
செருப்பை தேர்ந்தெடுக்கும் போது, அழகு மற்றும் அளவு ஆகியவை பொருத்தமாக இருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டும். செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்து, நான்கைந்து அடி நடந்து பார்த்து, சரியானதாகவும், நடப்பதற்கு வசதியாகவும் இருந்தால்தான் வாங்க வேண்டும். அதிக இறுக்கமான செருப்புகளை அணியக் கூடாது.
விலை குறைந்த செருப்புகளை விட, விலை கூடுதல் என்றாலும், தரமான, பாதங்களுக்கு ஏற்ற செருப்புகளையே வாங்க வேண்டும். தோல் செருப்புகளை, தண்ணீரில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நனைத்தால், செருப்பின் ஆயுளும் குறையும். பாதங்களுக்கு பொருத்தம் இல்லாமல் அழகும் கெட்டு விடும்.
தரையில் வழுக்காமல், 'கிரிப்' உள்ள செருப்புகளையே பயன்படுத்த வேண்டும். அழுத்தம் இல்லாமலும், அதிக கனமாக இல்லாமலும், மிருதுவாகவும் செருப்பு இருக்க வேண்டும். மழைக்காலத்தில், ரப்பர் செருப்புகளை அணியக் கூடாது. ஏனென்றால், அது நடக்கும்போது, வழுக்கி விடுவதுடன், துணிகளில் சேற்றை வாரி இறைத்து விடும்.
வயதான பெண்கள், வாதநோய் ஏற்பட்டவர்களும், குளிரான இடங்களிலும், ஈரத்தன்மை உள்ள இடங்களிலும், செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது. பொதுவாக பெண்களின் பாதங்கள் மென்மையானவை. ஆதலால், ஒருபோதும் இறுக்கமான செருப்புகளையோ, ஷூக்களையோ அணியக் கூடாது. அணிந்தால், ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.
பிளாஸ்டிக் செருப்புகளை விட, தோல் செருப்புகளும், ஷூக்களுமே சிறந்தவை. கால்களில் நோய் உள்ளவர்கள், உடல் பலம் குறைந்தவர்கள் போன்றோருக்கு, பிளாஸ்டிக் செருப்புகளால் உடலில், அதிக உஷ்ணம் ஏறி, சோர்வு ஏற்படும். கண்களும் எரிச்சலடையும்.
அதிக வியர்வையும் தோன்றும். எனவே, பிளாஸ்டிக் செருப்புகளை தவிர்த்தல் நல்லது.

